Friday, January 26, 2007

நானும் குரு பதிவு போடறேன்! (கொஞ்சம் லேட்டா)

நம்ம மக்கள்ஸ் எல்லாரும் குரு பதிவு போடறாங்களே, நாமளும் போட்டா என்னான்னு ரொம்ப நாளாவே ஒரு யோசனை. அதுல பாருங்க நம்ம ஊரில் ஹிந்தியில்தான் குரு வந்தது. தமிழில் வரலை. அம்புட்டுப் பணம் குடுத்து ஹிந்தியில் பாக்கணுமா, அப்படிப் பார்த்தா நமக்கு வலையுலகில் என்ன முத்திரை குத்துவாங்கன்னு யோசிச்சுக்கிட்டே பாக்காம விட்டாச்சு. ஆனாலும் இந்த பதிவு போடற ஆசை மட்டும் போகவே இல்லை. அதுக்கு ஏத்தா மாதிரி ஒரு சான்ஸ் கிடைச்சுது. விடுவோமா? அதான் இந்த பதிவு!

வீட்டுலேர்ந்து நியூயார்க் நகரம் போகணுமுன்னா ரயிலில்தான் போகணும். அப்படிப் போகும் போது இலவசமா ரெண்டு மூணு செய்தித்தாள்கள் கிடைக்கும். பெரும்பாலும் உள்ளூர் செய்திகளே தாங்கி வரும். அதுவும் நம்ம ஊரில் இந்திய மக்கட்த்தொகை ரொம்ப ஜாஸ்தியா, அவங்களுக்கே ஒரு தனி செய்தித்தாள் வேற போட்டுட்டாங்க. அதுதான் DesiNJ.

நாம போன அன்னிக்கு அந்த செய்திதாளில் பார்த்த விஷயம் என்னன்னா...அட அதை நீங்களே பாருங்களேன்!



அதாவது குருவில் அமிதாப் நடிப்பைப் பார்த்து அபிஷேக்குக்கு ரொம்ப பெருமையாம். என்னடா இது நாம கேள்விப்பட்ட வரை அமிதாப் அந்த படத்தில் நடிக்கவே இல்லையேன்னு அந்த செய்தியை பூரா படிச்சா அமிதாப்புக்கும் அபிஷேக்குக்கும் கன்பூஸன் ஆகிட்டாங்க இந்த மக்கள். அதை நம்ம கும்பலுக்கு காமிச்சு சிரிச்சு அன்னைக்கு நம்ம கம்பார்ட்மெண்டையே ரெண்டு பண்ணிட்டோமில்ல. நீங்களும் இந்த வாரயிறுதியை ஒரு சிரிப்போட ஆரம்பியுங்க. Have a great FUNNY weekend!

அந்த செய்தித்தாளில் பார்த்த இன்னொரு விஷயம் இது. ஆனா போன செய்தியோட லட்சணத்தைப் பார்த்த பின் நம்பணுமா வேண்டாமான்னு தெரியலை. நீங்களே படிச்சி முடிவு பண்ணிக்குங்க.



அதாவுதுங்க பொதுவா ஒரு மொழிக்கு மேல பேசறவங்களுக்கு டிமெண்ஷியா என்ற நோய் தாக்கும் தருணம் லேட்டா ஆகுதாம். டிமெண்ஷியா என்றால் என்ன அப்படின்னு கேட்கறவங்களுக்கு அகராதி தரும் பொருள் - severe impairment or loss of intellectual capacity and personality integration, due to the loss of or damage to neurons in the brain. கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லணுமுன்னா Madness! அதாங்க சித்தம் இழந்து பயித்தியம் ஆகறது.

இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா முதல்செய்தியைத் தந்த ஆளுக்கு ஒரே ஒரு மொழிதான் பேசத் தெரியும்! (அட அது யாருடா அது? சைடில் வந்து நம்ம தமிழ் வலைப்பதிவர்கள் நிறையா பேருக்குக் கூட ஒரு மொழிதான் தெரியும் போல அப்படின்னு சவுண்ட் விடறது!)

Sunday, January 14, 2007

பொங்கல் போனஸ்

இன்றைக்குப் பொங்கல். எல்லோரும் பொங்கலிட்டு மகிழ்ந்திருக்கும் இந்த வேளை எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே இனிக்கிறது. வலையுலகில் பல காலம் படித்தும் பின்னூட்டம் அளித்தும் வந்திருந்தாலும் நான் பதிவுகள் எழுத வந்து ஒரு வருடம் ஆகிறது. ஆமாம் கடந்த ஆண்டு ஜனவரியில்தான் நான் என் வலைப்பூவைத் தொடங்கினேன்.

ஒரு வருடமாக நாமும் எழுதிக் கொண்டு இருக்கிறோமே, நாம் எழுதுவதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அறிந்து கொள்ள ஒரு ஆவல். யாரைக் கேட்பது என யோசித்துக் கொண்டே பழைய பதிவுகளைப் புரட்டினால், என் முதல் இடுகையின் முதல் பின்னூட்டம் அளித்து என்னை இந்த வலையுலகிற்கு வரவேற்றவர் நம் ஜிரா எனப் பார்த்தேன்.

சரிதான், முதன் முதலில் நம்மை வாழ்த்தி வரவேற்ற அவரையே நம் முதல் வருட அப்ரெய்சலைச் செய்யச் சொல்லலாம் எனக் கருதி அவரை அணுகினேன். என் வேண்டுகோளை மதித்து அவர் ஒரு பதிவாகவே எழுதி அனுப்பி வைத்தார். இதுவே எனது பொங்கல் போனஸ். எனக்காக பதிவு எழுதி, அதனை பொங்கல் பரிசாக எழுதி அனுப்பியதற்கு நன்றி ஜிரா.

அந்தப் பரிசினை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நீங்களும் உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்லி எனது நிறை குறைகளை சுட்டிக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இனி ஜிரா


ஜனவரி மாதம் பத்தாம் நாள் 2006ல் ஜனங்களுக்கு வரி போடும் அரசாங்கங்கள் உலகமெங்கும் இருக்கையில் இலவசமாக ஒரு வலைப்பூ பூத்தது. பூ இருந்தால் பழமும் இருக்கத்தானே வேண்டும். மாதுளையும் கூடக் கிடைத்தது. மாதுளை என்றால் இந்தியில் அனார். அதுவும் ஒன்று இரண்டு அல்ல. ஒரு கொத்து. அதாவது கொத்து அனார். அதாகப்பட்டது கொத்தனார். இலவசக் கொத்தனார்.

வரும் போதே வந்துட்டேன் வந்துட்டேன்னு இரண்டு தடவை சொல்லிக்கொண்டு வந்தார். ஏன் இரண்டு முறை? இலவசமாக ஒன்று கிடைக்கிறதென்றால் அந்தப் பொருளை ஒருமுறையா வாங்குவோம்? இரண்டாம் முறையும் வாங்குவோம் அல்லவா. அதனால்தான் இரண்டு முறை சொன்னார். அது அவரது பின்னவீனத்துவ கருத்தாய்வுத் திறனின் ஆழத்தின் உச்சத்தை விளங்கச் சொல்லும் வகையில் இருந்தது என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. அதனால்தான் அவரது பதிவில் முதல் பின்னூட்டமிட்ட வலைஞர் என்ற பெருமையை எனக்களித்துப் பெருமைப் படுத்தினார். (மயிலார் : கொத்சோட தலையெழுத்து. உருப்படியா யாராவது போட்டிருக்கக் கூடாது. பெருமையில இருக்குற பெக்கு பதிலா எ போட்டா சரியாயிருக்கும்.)

வந்ததுமே...இரண்டாவது பதிவில் "There is sex for money and there is sex for free. And sex for free costs more!" என்று நகைச்சுவையாக குறும்போடு சொன்னார். திடீர்னு என்னாச்சோ ஏதாச்சோ தெரியலை எவன்ன, மல்மல், வர்ளம்வர், குமழைடை, மனமத்தாப்பூசு-னு சொன்னாரு. என்னடான்னு கேட்டா ரீபஸ்சாம். (மயிலார்: ரீபஸ்னா? சுரங்கள்ள ஸ-பஸ்சுக்கும் க-பஸ்சுக்கும் நடுவுல வருமே அந்த ரீபஸ்சா?)

சொடக்குப் போடும் பழக்கம் நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. ஆனால் சூடோகு போடும் பழக்கம் நல்லதாம். ஏனென்றால் சூடோகு என்பது கணக்கு விளையாட்டு. அதை நன்றாக விளையாடினால் கூட ஒரு இலவசம் கிடைக்குமாம். அதுதான் நீண்ட ஆயுள். இத்தோடு சேர்த்து பத்துப் பதிவு கூட வந்திருக்காது. ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் 150, 350 என எகிறிக் குதித்தன. இது கயமைத்தனமா என்று போலீஸ் வைத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் கண் பட்டதோ....அவருக்கும் வந்தது ஒரு சோதனை.

இப்படி ரீபஸ் பதிவுகளாகப் போட்டுக்கொண்டிருந்தவர் மைசூர் அரண்மனைக்குப் போனார். அங்கு சிவாவைச் சந்தித்தார். ஆமாம். கால்காரி சிவாவைத்தான். மைசூர் அரண்மனை கால்காரியில்தானே இருக்கிறது. மைசூர் போண்டோ கிடைக்கிறதோ இல்லையோ...காலிபிளவர் வறுவல் கிடைக்கும். (மயிலார்: திங்கிற பண்டம் எங்க எது கெடைக்கும்னு சரியாச் சொல்லீருவயே!)

பெண்பா எல்லாம் என்பா என்று வெண்பா வடிக்கும் கூட்டத்திற்கு நடுவில் தன்பா எல்லாம் நிறத்திலும் வெண்பா என்று கொத்தனார் எழுதத் தொடங்கினார். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமென்று பலபா ஏற்கனவே எழுதப்பட்ட நிலையில் கண்பார் குமரனை வைத்து நண்பார் எனப் புகழ்ந்து ஒரு தண்பா எழுதினார். இதற்குக் கிடைத்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை 134. ஜீவ்ஸோடு சேர்ந்து கொண்டு இயன்ற அளவில் இனிய தமிழில் என்று வெண்பாக்களாக எழுதித் தள்ளினார். (மயிலார்: எழுத்து விளையாட்டாக்கும்? நெனப்புதான் பொழப்பக் கெடக்குது! ஒழுங்கா எழுதுனாலே ஒன்னும் புரியாது. இது மட்டும் யாருக்காவது முழுசா சரியாப் புரிஞ்சிருச்சு...அவங்களுக்கு பரிசு ஒரு மயிலிறகு!)

பரோட்டா பரோட்டா நான் குத்தும் பரோட்டா.......என்று ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாட்டு போட்டிருக்கிறார். கொத்தனாரோ பதிவு போட்டிருக்கிறார். முட்டை பரோட்டா குத்தியதை அழகாகச் சொல்லி அவர் அள்ளிய பின்னூட்டங்களின் எண்ணிக்கை முன்னூற்றுக்கு இருபத்தைந்து குறைவு. அத்தோடு விட்டாரா? தண்ணியப் போட்டா சந்தோஷம் பிறக்கும்...தள்ளாடி நடந்தா உல்லாசம் கிடைக்கும்....ஓ பார்வதீன்னு கமல் ஒரு படத்தில் பாடுவாரே...அந்த அளவிற்கு ஒரு பதிவு. அதைப் படித்தவர்கள் எல்லாம் நம்ம சிங்காரிச் சரக்கு நல்ல சரக்கு என்று பாடிப் புலம்பியதாகத் தகவல். தகவல் மட்டுமே.

இப்படிப் பதிவுகளாகப் போட்டுக் கொண்டு பின்னூட்டங்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருந்த கொத்தனாரின் வாழ்விலும் திருப்பம் வந்தது. பக்கிப் பசங்க என்று அனைவராலும் அன்போடும் பண்போடும் குணத்தோடு மணத்தோடு நிறத்தோடு திடத்தோடும் அழைக்கப்படும் விக்கிப் பசங்க என்ற குழும வலைப்பதிவில் அவர் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து அவர் அறிவாளி போலக் காட்டிக் கொள்ளப்பட வேண்டிய நிலை வந்தது. அதற்கெல்லாம் அசரவில்லை கொத்தனார். ஏமாந்தவர்களைச் சேர்த்துக் கொண்டார். கூட்டத்தோடு கோவிந்தா போட்டு விக்கிப்பசங்களை ஊரறியச் செய்தார். பின்னூட்ட நாயகிக்கு அடுத்த வாரிசு என்று பிரகடணம் செய்தார். அதை இன்றும் மறுப்பார் இல்லை. இதுதான் இலவசக் கொத்தனாரின் ஓராண்டுக்குள் நிகழ்ந்த மாபெரும் இமாலயச் சோதனை...சீச்சீ சாதனை. அவரை வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம். (மயிலார்: வாழ்த்துவோம். வாழ்த்துவோம். இதுக்குத்தான் நம்மளக் கூப்புடுறாங்க)

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, January 07, 2007

ஈழ நண்பர்களுக்கு ஒரு கேள்வி

முதலில் டிஸ்கி. (இது போடாமல் கேள்விகள் கேட்க முடியவில்லையே, என்ன செய்வது.)

உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான் கேட்கிறேன். யாரையும் கேலி செய்ய வேண்டும் என்பதோ அல்லது புண்படுத்த வேண்டும் என்பதோ இப்பதிவின் நோக்கமல்ல.
டிஸ்கி முடிந்து விட்டது. இனி விஷயத்திற்குப் போகலாமா?

தமிழகத்தில் பேசப்படும் தமிழுக்கும் ஈழத்தின் பேசப்படும் தமிழுக்கும் சில வேறுபாடுகள் இருந்து வருவது நமக்குத் தெரிந்ததுதான். ஈழத் தமிழில் இன்று தமிழகத்தில் பாவிக்கப்படாத சொற்கள் பல இருக்கின்றன. நம் நண்பர்களின் பதிவுகளைப் படித்துப் படித்து அவைகளில் பல நமக்கு பழகியும் விட்டன. உதாரணமாக கதைக்கலாம் என்றால் பேசலாம் என்பது போல்.

சில சொற்கள் சற்றே உருமாறி இருந்தாலும் படிக்கும் பொழுது அவற்றின் பொருள் எளிதாக விளங்கி விடுகிறது. உதாரணமாக எண்டெல்லாம் (என்றெல்லாம்), இண்டைக்கு (இன்றைக்கு).

ஆனால் எனக்கு ஒரு வகையான மாற்றங்கள் மட்டும் ஏன் இப்படி மாறுகிறது என்பது புரிவதேயில்லை. அது ஆங்கிலத்தில் 'T' என்ற எழுத்து வரும் சொற்களை ஈழத் தமிழில் எழுதும் பொழுது நிகழும் மாற்றம்தான் அது. உதாரணத்திற்கு Toronto என்ற கனேடிய நகரின் பெயர் தமிழில் எழுதும் பொழுது 'ரொறன்ரோ' என எழுதுகிறார்கள். டொராண்டோ என எழுதினால் எளிதாகப் படிக்க முடிகிறதே. அதே போல் Beta 'பேற்றா' ஆனது. டிவி என்பது கூட 'றீவி' என ஆகிறது. நான் பார்த்த வரையில் கிட்டத்தட்ட எல்லா 'T'க்களும் இப்படி 'றீ'க்களாகவே எழுதப்படுகின்றன.

இனி கேள்விகள்

  1. இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?
  2. பேசும் பொழுது இவ்வார்த்தைகளை எப்படி உச்சரிக்கிறார்கள். நம்ம உதாரணம் டொராண்டோவாகவே இருக்கிறதா அல்லது ரொ றன்ரோ என்றே உச்சரிக்கவும் படுகின்றதா?
  3. எல்லா 'T'க்களும் இப்படி 'றீ'க்களாகவே எழுதப்படுகின்றனவா? அல்லது இவ்விதிக்கு எதேனும் மீறல்கள் இருக்கின்றனவா?
  4. 'T' என்ற எழுத்து மட்டும்தான் மாறுகிறதா அல்லது 'D' என்ற எழுத்தும் இப்படி மாறுகிறதா?
  5. 'T' தவிர வேறேனும் எழுத்துக்களும் இவ்வாறு மாறுகின்றனவா? (BBCயை றீபிசி எனப் படித்ததாக ஒரு ஞாபகம். இது சரியாக இருந்தால் இது இன்னமும் குழப்பமான ஒரு விஷயம்.)
இது எனக்கு மட்டும் உண்டான கேள்விகள் இல்லை என்பது சில நண்பர்களின் பதிவுகளில் வரும் பின்னூட்டங்கள் மூலம் அறிய முடிகிறது. ஈழ நண்பர்கள் தயவு செய்து விளக்கங்கள் தருவீர்களா? தாங்கள் இங்கு தரும் விளக்கங்கள் மூலம் எனக்கு மட்டுமல்லாது மேலும் பலருக்கு ஒரு புரிதல் ஏற்படுமென்பது திண்ணம்.

Monday, January 01, 2007

மருதகாரய்ங்க காலரைத் தூக்கி விட்டுக்குங்கடே

இன்னைக்கு காலையில் இணையத்தில் செய்திகளைப் படிக்கும் போது கண்ணில் பட்ட தகவல் இது. பாரம்பரியம் மிக்க பி.பி.சி. ஒலிபரப்பு நிறுவனத்தின் தலைமை பொறுப்பைத் தற்காலிகமா ஏற்றுக் கொண்டிருப்பவர் டாக்டர். சித்ரா பரூச்சா என்ற பெண்மணியாம். இதுவரைத் தலைமைப் பொறுப்பில் இருந்த மைக்கேல் கிரேட் என்பவர் இங்கிருந்து விலகி போட்டி நிறுவனமான ஐ.டிவிக்கு சென்றுவிட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை சித்ரா நிரப்புவார்.



இது வரை பி.பி.சி. நிறுவனத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வந்த போர்ட் ஆப் கவர்னர்ஸ் என்ற குழு கலைக்கப்பட்டு அந்த பொறுப்பு பி.பி.சி. ட்ரஸ்ட் என்னும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ட்ரஸ்டின் தலைமைப் பதவிக்குத்தான் சித்ரா தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். இது வரை இந்த ட்ரஸ்டின் உபத் தலைவராக பதவி வகித்து வந்தார். ஒரு முழு நேர செயல்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் இந்தப் பதவியை வகிப்பார்.

1972 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த இவர் 1996 ஆம் ஆண்டு வரை மருத்துவத் துறையில் பல்வேறு பதவிகளை வகித்தார். அதன் பின் ஊடகங்களின் பால் தன் கவனத்தைத் திருப்பி அதிலும் பல பதவிகளை வகித்தவர். பெப்ஸி இந்திரா நூயியைத் தொடர்ந்து ஒரு மிக பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்க இருக்கும் இந்தியப் பெண் சித்ராவிற்கு நம் வாழ்த்துக்கள்.

இதுக்கு நம்ம மருதக்காரய்ங்க ஏன் காலரத் தூக்கி விடணமுன்னு கேட்கறீங்களா? சித்ரா நம்ம மருத பொண்ணுங்க!

இது பற்றிய செய்திக் குறிப்பு 1, செய்திக் குறிப்பு 2