Wednesday, October 31, 2007

ஆடுது பார், கல்லாப் பெட்டி! க்விஸ் பாகம் - 3

மூணு நாள் கூத்து இன்னிக்கு முடியப்போகுது, அதனால கல்லாக் கணக்கு எல்லாம் காண்பிக்க வரான் போலன்னு நினைக்காதீங்க. அதுக்கு இன்னொரு பதிவு போட்டு பதிவுக் கயமைத்தனம் செய்வோமில்ல!

இன்னிக்கு மூணு தலைப்புகளில் கேள்வி கேட்கணும் இல்லையா. இன்றைக்கான தலைப்புகள் வணிகம், கணினி மற்றும் விளையாட்டு. விளையாட்டை ஆடுவோம். கல்லாவை கவனிப்பது வணிகம். பொட்டி தட்டுவதைப் பத்தி தனியா வேற சொல்லணுமா? எல்லாம் சேர்ந்தாத்தான் தலைப்பு. கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு இல்ல! சரி, நேரா கேள்விகளுக்குப் போகலாம்.

வணிகம்

1.நான் கிங்ஸ்டன் அபான் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற இடத்தில் புதைக்கப்பட்டேன். இன்று இந்த இடம் க்ளாரன்ஸ் தெரு லாயிட்ஸ் வங்கியில் கார்கள் நிறுத்துமிடமாக இருந்தாலும் அங்கு என்னைப் பற்றிய கல்வெட்டு ஒன்று இருக்கிறது. என்னை எனது எஜமானர் வரைந்த ஒரு படத்தினால் நான் உலகெங்கும் புகழ் பெற்றிருக்கிறேன். இத்தனைக்கும் அந்தப் படம் நான் இறந்து மூன்று வருடங்களுக்குப் பிந்தான் வரையப்பட்டது. நான் யார்?

2. 1865ஆம் ஆண்டு ஒரு மர கூழ் தயாரிக்கும் நிறுவனமாக (pulp mill) இது தொடங்கப்பட்டது. பின்னர் அது தொடங்கப்பட்ட ஊரின் பெயரை தன் பெயராக மாற்றிக் கொண்டு செயல் படத் தொடங்கியது. இன்று தன் துறையில் முதன்மையான நிறுவனமாகத் திகழுன் இதன் பெயர் என்ன?


3. ஜெர்மன் தொழிலதிபரான அலெக்ஸாண்டர் ஷாப்மேன் (Alexander Schopmann) தொடங்கியிருக்கும் இந்த விமான நிறுவனம் பல ஆண்டுகளாக மற்ற விமான நிறுவனங்கள் தடை செய்து இருக்கும் ஒன்றினைத் திரும்ப கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறது. அது எந்த வசதி?


4. போர்ட்லேண்ட் மாநில பல்கலைக்கழத்தின் மாணவர் கேரலின் டேவிட்சன் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் லோகோவிற்காக அவருக்கு கிடைத்த பணம் 35 டாலர்கள். உலகப் புகழ் பெற்ற இந்த லோகோ எந்த நிறுவனத்துடையது?


5. வெள்ளைக் காலர் தொழிலாளிகள், நீலக் காலர் தொழிலாளிகள் பற்றி நமக்குத் தெரியும் இரும்புக் காலர் தொழிலாளிகள் யார்?

6. பார்பரா மில்லிசெண்ட் ராபர்ட்ஸ் என்பவர் யார்?


கணினி

1. டன் & பிராட்ஸ்ட்ரீட் மற்றும் சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து தொடங்கிய நிறுவனம் இது. ஆனால் இன்று சத்யம் கம்பியூட்டர் நிறுவனத்தை விட பெரிதாக வளர்ந்து விட்டது. எந்த நிறுவனம் இது?

2. உலகின் முதல் வெப்சர்வர் எங்கு நிறுவப்பட்டது?


3. யாஹூ நிறுவனத்தின் பெயரின் விரிவாக்கம் என்ன?


4. கூகிளாண்டவரிடம் வேண்டும் பொழுது உங்கள் பிரார்த்தனையில் அதிகம் எத்தனை வார்த்தைகள் இருக்கலாம்? சரி சரி. கூகிளில் தேடும் பொழுது, அதில் தேடப்படும் சொற்றொடரில் அதிகபட்சமாக எத்தனை வார்த்தைகள் இருக்கலாம்?


5. விண்டோஸ் 1.0 எப்பொழுது வெளியிடப்பட்டது?


6. 453 அடி நீளத்தில் இருக்கும், உலகின் இரண்டாம் பெரிய உல்லாசக் கப்பலின் சொந்தக்காரர் இந்த சிலிக்கன் பள்ளத்தாக்கு கோடீஸ்வரர். "Money is just a method of keeping score now" எனக் கூறிய இவர் யார்?


விளையாட்டு

1. இன்று எல்லாவிதமான பொருட்களின் விளம்பரத்திற்கும் யாராவது கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு வருவதே வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்தியாவில் முதன்முறையாக எந்த பொருளுக்கு ஒரு கிரிக்கெட்டரால் விளம்பரம் செய்யப்பட்டது? அந்த கிரிக்கெட்டர் யார்?

2. 1989ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தின் சிறப்பு என்ன?

அ) பெக்கரும் ஸ்டெப்பி கிராப்பும் ஜெயித்ததால் ஆண் மற்றும் பெண் சாம்பியன்கள் ஜெர்மனி நாட்டவரானார்கள்
ஆ) ஆண்கள் இறுதிப் போட்டியில் தோற்ற எட்பெர்க் அதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முந்தான் பிரெஞ்ச் ஓப்பன் இறுதிப் போட்டியிலும் தோற்றுப் போனார்
இ) எட்பெர்க் முதல் செட்டை ஆண்கள் போட்டியில் அடிக்கடி நிகழாத ஒரு ஸ்கோரான 6-0 என்ற ஸ்கோரில் தோற்றார்.

ஈ) இது பெக்கரின் கடைசி விம்பிள்டன் பட்டம்

உ) மேற்கூறிய அனைத்தும்


3. 1980களில் அமெரிக்காவில் க்ரேஸி ஜியார்ஜ் ஹெண்டர்சன் என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது இது. ராப் வெல்லர் என்பவரால் சியாட்டிலில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் சொல்லுவார்கள். கால்பந்தாட்டங்களில் 1986ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மிகப்பெரிய நிகழ்வு 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்ஸில் நடந்தது. 2002ல் டேம்ப்ஸ் விக்ஸக் என்பவர் இதன் நிகழ்வுகளின் நகர்படங்களை ஆய்வு செய்து இது பெரும்பாலான சமயங்களில் வலப்புற சுற்றாக (Clockwise) வினாடிக்கு 12 மீட்டர் வேகத்தில் செல்கிறது என கண்டுபிடித்தார். இது என்பது எது?


4. நமக்கு சச்சின் டெண்டுல்கரைத் தெரியும். ஆனால் அவரது மாமனார் ஆனந்த் மெஹ்தா எந்த விளையாட்டில் தேசிய சேம்பியனாக இருந்தார்?


5. சுதீர் நாயக் இந்தியாவிற்காக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். 1974ஆம் ஆண்டு இவர் இந்திய அணியோடு இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற பொழுது இவர் பெயர் கிரிக்கெட் இல்லாத விஷயம் ஒன்றிற்காக செய்தித்தாளில் அடிபட்டது. எதற்காக?


6. 2002ஆம் ஆண்டு கால்பந்து உலகப் போட்டிகளில் ஜெர்மனியின் ஆலிவர் கானை எதிர்த்து கோல் போட்டவர்கள் இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் ரொனால்டோ. மற்றொருவர் யார்?


அவ்வளவுதாங்க. இதோட இந்த புதிரின் கேள்விகள் முடிந்து விட்டன. வெள்ளிக்கிழமை பதில்கள் வரும் எனச் சொல்லி இருந்தேன். சில நண்பர்கள் வாரயிறுதியில்தான் பதிலளிக்க முடியும் எனச் சொன்னதால் அவர்களுக்காக இந்த வாரயிறுதி வரை பதிலளிக்கும் நேரத்தை நீட்டிக்கிறேன். இந்திய நேரத்தின்படி திங்கள் காலை விடைகள் வெளியிடப்படும்.

தற்போதைய மதிப்பெண் நிலவரம்.

Tuesday, October 30, 2007

நடந்ததுக்கு ஆதாரம் எங்கே? - க்விஸ் பாகம் 2

இன்னிக்கு தலைப்பு கொஞ்சம் சர்ச்சையைக் கிளப்பக் கூடிய தலைப்பு. இன்னிக்கு ஹாட் டாபிக் ராமர் பாலத்தையே எடுத்துக்குங்க. அது குறித்து எவ்வளவோ சர்ச்சைகள். இருக்கா இல்லையா, உடைக்கலாமா வேண்டாமா, சரியா தப்பா, என கேள்விகள் கேட்டுக்கிட்டே இருக்கலாம்.

என்னடா இவன் க்விஸ் போட்டி நடத்த போறேன்னு சொல்லிட்டு ராமர் பாலம் மேட்டர் எல்லாம் பேச வந்துட்டானு திட்டாதீங்க. அதைப் பத்தி கேள்வி கேட்டா அது வரலாறு என்ற தலைப்பில் வரலாமா கூடாதா என்ற சர்ச்சை எழுமாதலால் அது மாதிரி கேள்வி எல்லாம் கேட்க மாட்டேன்.

இன்னிக்கு நாம எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புகள் - விஞ்ஞானம், வரலாறு, புவியியல். வரலாறு நடந்ததைப் பத்திப் பேசறது. புவியியல் எங்கே என்ற கேள்விக்குப் பதில் சொல்வது. விஞ்ஞானம் ஆதாரத்தை முன் வைப்பது. இந்த மூணு டாபிக்கையும் சேர்த்துதான் தலைப்பு. நேரா கேள்விகளுக்குப் போகலாமா?

வரலாறு

1. நடிகராக ஆசைப்பட்ட ஒரு இளைஞன், அப்போதைய பிரதமரின் அறிமுகக் கடிதத்துடன் பம்பாய் வந்து ஒரு நடிகர் /தயாரிப்பாளரை சந்தித்தார். தனது குரலை தனது தனித்துவமாகக் கூறிய அந்நடிகருக்கு கிடைத்த பாத்திரமோ ஊமையான ஒரு கதாபாத்திரம். இச்சம்பவத்தில் குறிப்பிடப்படும் மூவர் யார்?
இளைஞன், பிரதமர், நடிகர் கம் தயாரிப்பாளர் - இவங்க மூணு பேர் பெயரும் சொன்னாதான் முழு மதிப்பெண்.

2. நான் இறக்கும் பொழுது என்னுடைய வயது 28 - 30ற்குள் இருக்கும். நான் புதைக்கப்பட்ட இடம் ஜீலம் நதிக்கரையில் ஜலால்பூர் ஷாரிப் என்ற இடம். என் பெயர் எருதின் தலை அல்லது எருதின் முகம் எனப் பொருள் படும். நான் யார்?

3. "Allah is its goal, the Prophet its model, the Quran its Constitution, Jihad its path and death for the case of Allah its most sublime belief" ஹராகத் அல்-முக்வாமா அல் இஸ்லமியா என்ற ஒரு ஸ்தாபனத்தின் முழக்கம் இது. இவர்கள் பொதுவாக எப்படி அறியப் படுகின்றனர்?

4. சுமாரான மாணவனான நான் முக்கி முனகிதான் மெட்ரிகுலேஷன் பரீட்ச்சையை பாஸ் செய்தேன். அதற்குப் பின் எனது 13ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டு வெளிநாடு சென்றுவிட்டேன். எனது 18ஆம் ஆண்டுதான் நான் முதன்முதலாக ஒரு செய்தித்தாளை படித்தேன். மேடையேறி பேச பயம் கொண்ட நான் என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தால் உலக அளவில் ஒரு தலைவராக மாற நேர்ந்தது. ஐந்து முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும் விதிவசத்தால் என்னால் ஒரு முறை கூட வெல்ல முடியவில்லை. நான் யார்?

5. கையில் ஒரு பைசா கூட இல்லாமல் இருந்த இத்தாலியன் நான். நான்
ஆரம்பித்த நிறுவனம் இன்று அதன் துறையில் ஒரு பெரிய பெயர் பெற்று விளங்கும் நிறுவனமாக இருக்கிறது. எனக்கு வேலை கொடுக்க மறுத்த நிறுவனமே நான் தொடங்கிய நிறுவனத்தில் பங்குதாரராக மாறும் நிலையும் வந்தது. இரண்டாம் உலகப் போர்க்காலங்களில் மாறும் நிலமைகளை சமாளிக்க என் நிறுவனம் டேங்குகள் மற்றும் பல போர்கருவிகளைக் கூட செய்தது. என் பெயரை தன் வணிகப் பெயராகக் கொண்ட என் நிறுவனம் (My last name is the brand name of my company) அந்த துறையில் ஆர்வமும் செல்வாக்கும் வெற்றியும் கொண்ட நிறுவனம். படத்தில் இருக்கும் நான் யார்?

6. லத்தீன் அமெரிக்க புரட்சிக்காரனாகிய நான் பிறந்தது அர்ஜெண்டினாவில், கியூபாவில் புகழ் பெற்று, காங்கோவில் சண்டையிட்டு, பொலிவியாவில் இறந்து போனேன். உலகில் எங்கு புரட்சி நடந்தாலும் அங்கு என் படம் இருப்பதும் என் பெயர் உச்சரிக்கப்படுவதும் கட்டாயம். நான் யார்?


புவியியல்

1. பிரெஞ்ச் இண்டோ சைனா என அறியப்பட்ட நாடு எது?

2. டேரியன் இடைவெளி என்றால் என்ன?


3. உலகிலேயே ஈரம் குறைவான இடம் எது?


4. இந்தோநேசிய நாடு எத்தனை தீவுகளைக் கொண்டது?


5. கோஸோ, கொமினோ என்பவை இந்நாட்டின் மூன்று மனிதர் வாழும் தீவுகளில் இரண்டு. இந்த மெடிட்டரேனியன் நாட்டின் பெயர் என்ன?


6. பிம்பெட்கா. இந்த இடத்தின் சிறப்பு என்ன? நான் எதிர்பார்க்கும் பதிலைச் சரியாகச் சொல்ல வேண்டும்.


விஞ்ஞானம்

1. இந்திய ஏவுகணை தயாரிப்பில் பிரம்மோஸ் என்ற ஏவுகணை எதனால் அப்படிப் பெயரிடப்பட்டது?

2. டான்சானியாவில் பேசப்படும் ஸ்வஹிலி மொழியில் இந்த வார்த்தைக்குப் 'எல்லாம் வளைந்துவிட்ட' எனப் பொருள். இன்று இந்தியாவிலும் பரவலாக பயன்படுத்தப்படும் இவ்வார்த்தை எது?


3. "The Beagle" என்ற கப்பல் எதனால் புகழ் பெற்றது?


4. தியோப்ரோமைன் என்ற இரசாயனப் பொருளை உண்டால் நாய்கள் இறந்து விடும். ஆனால் இது நாம் (அதிலும் முக்கியமாக குழந்தைகள்) சாப்பிடும் பொருள் ஒன்றில் இருக்கும் இரசாயனம் இது. அந்த உணவுப் பண்டம் எது?


5. போபியா (Phobia) என்னும் பயங்களில் ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் மனம் சார்ந்தவை. உடல்நிலை சார்ந்த அந்த போபியாவின் பெயர் என்ன?


6. 1893ஆம் ஆண்டு விட்கோம்ப் ஜட்ஸன் என்ற பொறியியளாலரால் காப்புரிமை பெறப்பெற்ற ஐடியா இது. ஆனால் இதனைப் பயன் படுத்தி ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தவர் கிடியான் சண்ட்பேக் என்பவர். முதலில் ஷூவில் பயன்படுத்தப்பட்ட இது, (இப்பொழுது அரிதாகவே இப்படி பயன் படுத்தப்படுகிறது) தற்பொழுது மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சாதனம். இது என்ன?


நேத்து கேட்ட கேள்விகளைப் பார்க்கும் பொழுது இன்னிக்கு ரொம்பவே எளிதான கேள்விகள்தான். அடிச்சு ஆடுங்க மக்கள்ஸ்!!

தற்போதைய மதிப்பெண் நிலவரம்.

அப்புறம் ஒரு சின்ன டிஸ்கி. இந்த பாடங்கள் எல்லாம் நான் ஆங்கிலத்தில்தான் படிச்சது. ஆனா தமிழில்தான் கேள்வி கேட்க வேண்டும் என மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் தப்பிருந்தால் அதிகம் வலிக்காமல் குட்டிவிட்டு சுட்டிக் காமியுங்கள். சரி செய்து விடுகிறேன்.

Monday, October 29, 2007

மொழியறிவும் முழியறிவும் - க்விஸ் பாகம் 1

இன்னிக்கு பார்க்கப் போற மூணு சப்ஜெக்ட்டுகள் - ஆங்கிலம், தமிழ் மற்றும் கணக்கு. முதல் இரண்டும் மொழியறிவு பத்தி, மூணாவது பத்தின கேள்விகளுக்கு நான் எப்பவுமே முழிப்பதுதான் வழக்கம் என்பதால் அதை முழியறிவுன்னு சொல்லியாச்சு. ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஆறு கேள்விகள். ஆட்டையைப் போடுவோமா?

ஒரு சின்ன டிஸ்கி : இந்த மூன்று நாட்களிலேயே என்னைப் பொறுத்தவரை இன்றுதான் கடினமானக் கேள்விகள். இதனைத் தாண்டிவிட்டால் அப்புறம் சுலபம்தான்.


முதலில் ஆங்கிலம். எங்க பள்ளிக்கூடத்தில் முதல் பீரியட் எப்பவுமே ஆங்கிலம்தான். இதில் மட்டும் கேள்விகள் ஆங்கிலத்திலேயே இருக்கும். மற்ற கேள்விகள் தமிழில்தான்.

1. It was the term used to describe a person of profound mental retardation having a mental age below three years and generally being unable to learn connected speech or guard against common dangers. The term belongs to a classification system no longer in use and is now considered offensive.It is now replaced by "profound mental retardation", which term?

2. What is the name of the capital of Hell in John Miltons ‘Paradise Lost’? This means a state of confusion and uproar.


3. This word means a college or society for special study or training and is after a Greek garden outside Athens where Plato taught Philosophy. What word is this?


4. A Jewish ritual enables transferring a person's sin to a goat which was later set free in the wilderness. What word did this contribute meaning someone who bears the blame for the wrong doing of others?


5. This is a French word meaning 'Word' and is used where prisoners are released on their word of honour?


6. This word means to banish from the company of a group of people and is based on an ancient greek word for a piece of pottery to cast votes to decide if someone was to be exiled. What word is this?


அடுத்தது தமிழ்ப் பாடம். நம்ம சிறப்பாசிரியர் கிட்ட ரவி போடும் புதிரா? புனிதமா? பத்திச் சொன்னேன். அட இப்படி எல்லாம் பதில் சொல்லறாங்களான்னு கொஞ்சம் கஷ்டமாகவே பண்ணிட்டாரு! அவரோட கேள்விகளைப் பாருங்க.

1. முதலில் குறள்.
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

இதில் வள்ளுவர் கல்லாமா என எதைச் சொல்கிறார்?

2. அடுத்ததா நம்ம சந்தக்கவியார் தந்த திருப்புகழ்.

பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக் கிரி மத்தைப்பொருதொரு

பட்டப்பகல் வட்டத்திகிரியி லிரவாகா...

இதில் குறிப்பிடப்படும் மூன்று இதிகாச நிகழ்வுகள் யாவை ?


3. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இப்படி வருது
தன்மக னாகவன் பேய்ச்சி
தான் முலையுண்ணக் கொடுக்க..

இதில் பேய்ச்சி என அறியப்படுபவர் யார்?


4. இன்னிக்கு புராண இதிகாசங்கள் பத்திப் பேசும் போது ராமாயணம் பத்திப் பேசாம இருக்க முடியுமா? கம்பன் வார்த்தைகளைப்
படியுங்கள்.
தழைத்த தண்துளவினோன் தலைவனல்லன் என்று

அழைத்தவன் அறநெறி அந்தணாளரில்
பிழைத்தவன் பிழைப்பிலா மறையைப் பேணலாது
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன்
நமக்கெல்லாம் கழுதை தெரியும். அது என்னங்க இது இழுதை?

5. மூதுரையில் அவ்வையார் சொல்லறாங்க

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடற்சிறியர்என இருத்தல் வேண்டா - கடல்பெரிது

மண்ணீரு மாகாது அதன்ருகே சிற்றூறல்

உண்ணீரும் ஆகிவிடும்

அதாவது ஒருவரின் உடல் அளவைக் கொண்டு அவரை மதிப்பிடாதே. ஒரு கடல் பெரிதாக இருந்தாலும் அதன் தண்ணீரைக்
குடிக்க முடியாது. அதனருகே இருக்கும் சின்ன நன்னீர் ஊறும் இடத்திற்குப் பயன் அதிகம். ஆனா முதல் இரண்டு வரியைப் பாருங்க. தாழம்பூ மடலானது மகிழம்பூவை விடப் பெரிது ஆனா மகிழம்பூவுக்கு வாசம் அதிகம் எனச் சொல்கிறார்களே. தாழம்பூவுக்கும்தானே வாசம் அதிகம்.
என்னமோ உதைக்குதே. என்ன மேட்டர்?


6. குறளில் ஆரம்பித்த நாம் குறளிலேயே முடிக்கலாம்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

இந்த குறளுக்கு ஒரு சிறப்பம்சம் இருக்கு. அது என்ன?


என்னங்க தமிழ் இலக்கியங்களின் சுவையை பருகிவிட்டீர்களா? அடுத்தது கணிதம்! எண்ணித் துணிக கருமம் அப்படின்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரு. அவருக்கும் கணக்குன்னா கண்ணு முழி பிதுங்கும் போல! அதான் இப்படி எண்ணிட வேண்டிய மேட்டரை எல்லாம் கருமமுன்னு திட்டறாரு. அதையும் இன்னிக்கே பார்த்துட்டு தலை முழுகிடலாம். என்ன சொல்லறீங்க?

1. ஒரு இடத்தில் குழந்தைகள் வட்டமாக சமதூர இடைவெளி விட்டு நின்று கொண்டிருக்கின்றனர். இதில் ஏழாவது குழந்தைக்கு எதிராக 18ஆம் குழந்தை நின்றால் மொத்தம் எத்தனை குழந்தைகள் நிற்கின்றனர்?


2. இந்த இரண்டு இலக்க எண்ணின் இலக்கங்கள் மாற்றப்பட்டால் வரும் எண்ணை முதல் எண்ணில் இருந்து குறைத்தால் வரும் மிகுதி 54. இந்த எண்ணில் இடப்பக்க இலக்கத்தை வலப்பக்க இலக்கத்தால் வகுத்தால் வரும் விடை 3. இந்த இரட்டை இலக்க எண் எது?

3. என்னிடம் இரு காயின்கள் உள்ளன. இதில் ஒரு காயினில் 11 என்ற எண்ணும் மற்றொன்றில் 9 என்ற எண்ணும் உள்ளன. இவற்றின் கூட்டுத் தொகை 20. இந்த காயின்களின் மறு புறத்தில் எந்தெந்த எண்கள் இருந்தால் 19, 20, 21, 22 என்ற கூட்டுத் தொகை வர முடியும்? எந்த காயினில் எந்த எண் இருக்க வேண்டும் எனத் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஒரு எண் ஒரு முறைதான் வரலாம்.
There are two discs that have numbers 11 and 9 printed on one side respectively. So a total of 20 can be arrived at. What numbers would be required on the other side so that we can arrive at totals of 19, 20, 21 and 22? A number should not be repeated. (சிலரின் வேண்டுகோளுக்கிணங்க ஆங்கில வடிவிலும்)


4. ஒரு பேருந்தில் 7 பெண்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஏழு பைகள் உள்ளன. ஒவ்வொரு பையிலும் 7 பெரிய பூனைகள் உள்ளன. ஒவ்வொரு பெரிய பூனையுடன் 7 குட்டிகள் உள்ளன. ஆக மொத்தம் அப்பேருந்தில் எத்தனை கால்கள் உள்ளன?


5. ஒரு செஸ் போர்டில் வெள்ளையும் கருப்புமாக 64 சதுரங்கள் உள்ளன. ஆனால் சிறிதும் பெரிதுமாக அதில் எத்தனை சதுரங்கள் உள்ளன?

6. ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் குறைந்த பட்சம் இரு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தால் அக்குடும்பத்தில் மொத்தம் எத்தனை குழந்தைகள்? அதில் எத்தனை ஆணகள்? எத்தனை பெண்கள்?

என்ன, அப்பாடான்னு இருக்கா? இன்னிக்கு அம்புட்டுதான் கேள்வி. இதுக்கு பதில் சொல்ல ஒரு நாள் பூரா நேரம் இருக்கு. நாளைக்கு வரலாறு, புவியியல் மற்றும் விஞ்ஞானம் பற்றின கேள்விகள் வரப் போகுது. தயாரா இருங்க மக்கள்களே!

தற்போதைய மதிப்பெண் நிலவரம்.

Friday, October 26, 2007

குயி...குயி...குயி...குயிஜு

இந்த தலைப்பு உங்களில் நிறையா பேருக்கு தெரிஞ்ச தலைப்பா இருக்கும். இந்த மாதிரி தலைப்புகளில்தான் கேள்வி கேட்க ஆரம்பிச்சாரு ஒரு பெரிய தல. அப்புறமா குயிஸ், குவிசு, க்யூஸ், குவிஸ் என்றெல்லாம் பட்டையைக் கிளப்பிய ஆசாமி மே மாசம் "அவுட்டே........ய்ய்ய்ய்!" அப்படின்னு ஒரு பதிவு போட்டாரு. அப்போ காணாமப் போனவருதான். இப்போ எல்லாம் வந்து செப்டெம்பர் மாத போட்டி, அக்டோபர் மாத போட்டி அப்படின்னு மாசத்து ஒரு தடவ படம் காண்பிக்க மட்டும்தான் வராரு. அதுவும் அவர் பதிவுக்கு மட்டும். மத்தவங்க பக்கமே வரது இல்லை. சரி இப்படி ஒரு தலைப்பு வெச்சாலாவது வந்துட்டுப் போகறாரான்னு பார்க்கத்தான் இது.

சரிடா, மேட்டருக்கு வான்னு நீங்க கத்தறது இங்க வரை கேட்குது. வந்துட்டேன். இது தலைப்புக்கேத்த மாதிரி (நாம எப்பவுமே தலைப்புக்கு ஏத்த மாதிரிதான் எழுதுவோங்கிறது தனி மேட்டர். அதை விடுங்க.) இந்த வாரம் கேள்வி பதில் வாரம். ஸ்கூலில் படிச்ச போது ஒரு நாளில் பல சப்ஜெக்ட்டுகளில் டெஸ்ட் எழுதின மாதிரி பல சப்ஜெக்ட்டுகளில் கேள்வி வரப் போகுது. ஆங்கிலம், தமிழ், விஞ்ஞானம், கணக்கு, வணிகம், கணினி, வரலாறு, புவியியல், விளையாட்டு (பி.டி. பீரியட் இல்லாமலா?) என பல தலைப்புகளில் வருது கேள்விகள். தமிழில் நான் கேள்வி கேட்டா நம்ம தமிழறிவைப் பத்தி நீங்க கேள்வி கேட்பீங்க என்பதால் அதுக்கு மட்டும் ஒரு சிறப்பாசிரியரைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். அவரு எனக்கு கணக்குப் பண்ணவும் சொல்லிக் குடுத்து இருக்காரு. ச்சீ, கணக்குக் கேள்விகளிலும் சொல்லிக் குடுத்து இருக்காரு.

செவ்வாய் காலை இந்திய நேரப்படி தொடங்கி, ஒரு நாளைக்கு மூணு சப்ஜெக்ட் வீதம் மூன்று நாட்கள் கேள்விகள் வெளி வரும். ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு நாள் மட்டுமே அவகாசம். அதற்குப் பின் யாரு மொத்தத்தில் அதிக மதிபெண்கள் எடுத்திருக்கிறாரே அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார். கூகிளாண்டவரை வேண்டக் கூடாதென்று சொல்ல ஆசைதான். ஆனால் நான் ஆசைப்படுவதால் மட்டும் அந்தப் பக்கம் போகாம இருக்கப் போறீங்களா? அதனால் அது கூடாது எனச் சொல்ல மாட்டேன்.

முக்கியமா ஒரு கேள்விக்கு ஒருவர் அளிக்கும் முதல் பதில் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதனால முதலில் ஒரு பதில் சொல்லிட்டு மாத்துற வேலை எல்லாம் நாட் அலவுட். அப்புறம் வழக்கம் போல Quiz Master's decision is final. ஆட்டத்திற்கு ரெடியாகுங்க மக்கள்களே!! போட்டியில் கலந்து கொள்ள யாரெல்லாம் ரெடின்னு இந்த பதிவுக்கு பின்னூட்டமாப் போட்டு ரிஜிஸ்தர் பண்ணிக்குங்கப்பா.

Wednesday, October 24, 2007

நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

மனித இனத்திலும் சரி, வேறு பல வகை மிருகங்களிலும் சரி ஆண்கள்தான் பெண்களை விட வேகமாய் மூப்படைந்து இறந்து போகிறார்கள். நடிகைகள் எல்லாம் சீக்கிரம் அம்மா வேஷம் போட இன்னும் காலேஜ் மாணவனாகவே நடிக்கும் நடிகர்கள் எல்லாம் இந்த லிஸ்டில் சேர்த்தி கிடையாது. ஆராய்ச்சியாளர்கள் இதை, அட அந்த மூப்பு சமாச்சாரத்தை நடிகரை இல்லை, ஆராய்ச்சி செஞ்சு அதுக்குக் காரணம் கண்டுபிடிச்சிருக்காங்க. அதற்குக் காரணம் இனவிருத்திக்கான போட்டிதானாம்!

பார்னகிள் வாத்து, குள்ள கீரிப்பிள்ளை என ஒரே துணையைக் கொண்டு வாழும் இனங்களையும் பல துணைகளுடன் வாழும் சவானா பபூன் குரங்கு, சிகப்பு சிறகுடைய கருப்புப் பறவை (இப்படித்தாங்க பேர் போட்டு இருக்கு) போன்ற இனங்களையும் ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கிம் க்ளட்டம் ப்ராக் மற்றும் கவிதா ஈஸ்வரன் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்து பல்கலைக்கழம் சார்ப்பாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பலதார பழக்கமுடைய இனங்களில் ஆண்கள் விரைவில் வயதோகிகம் அடைந்து மடிந்துவிடுகிறார்கள் எனக் கண்டறியப் பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு முறை ஒரு ஆண் பெண்ணுடன் இணைய வரும் பொழுது அதற்கான போட்டி அதிகமாவதால் ஒரு ஆணிற்கு இனவிருத்திக்குக் கிடைக்கும் சராசரி நேரம் குறைகிறது. இதனால் அவற்றிக்கு நீண்ட ஆயுள் இல்லாமல் போகிறது. இன்று மனித இனத்திலும் பெண்களை விட ஆண்களே சீக்கிரம் மடிவது கற்காலத்தில் பலதார முறையில் மனித இனம் இருக்கும் பொழுது நம்மில் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதையே சாக்காக வைத்து பலதார மணம் புரிவது அல்லது பலருடன் உறவு வைப்பதோ தவறானது. அதனை இந்த ஆராய்ச்சி எந்த விதத்திலும் அங்கீகரிக்கவோ ஆதரவளிக்கவோ இல்லை என்றும் தெளிவாக சொல்லி இருக்கின்றனர்.

பல பெண்களைக் துணையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் ஆண்களைப் பற்றிய இந்த ஆராய்ச்சி பல ஆண்களுடன் இருக்கும் பெண்கள் இனத்தைப் பற்றியும் ஆராய்ச்சி செய்ததாகத் தெரியவில்லை.

டிஸ்கி : இப்போ இப்படித் தலைப்பு வைப்பது ஒரு ஃபேஷனாக இருப்பதால்தான் இந்தத் தலைப்பு. இதுக்கும் பதிவுக்கும் சம்பந்தமே கிடையாது. நம்ம லக்ஷ்மி அக்கா, மோகந்தாஸ் அண்ணாச்சி எல்லாரும் இந்த தலைப்பில் பதிவு போட்டாங்களேன்னுதான் நானும் போட்டது. ஒரு தொடர்புக்கு வேண்டுமானால் அந்தக் கேள்விக்கு ஆமாம் என்றால் உங்களுக்கு ஆயுசு கெட்டி.

இது தொடர்புடைய சுட்டி.

Friday, October 19, 2007

இதுக்குப் பேரு இனவெறியா?

டிஸ்கி : இது கொஞ்சம் சீரியஸ் பதிவு.

கடந்த சில தினங்களாக கிரிக்கெட் உலகில் அடிபடும் ஒரு சொல் இனவெறி அதாவது ரேசிசம். விஷயம் என்னன்னா, அவுஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸைப் பார்த்து நாக்பூர், மும்பை எனச் சில இடங்களில் ரசிகர்கள் குரங்கு என அழைப்பதும் அவரைப் பார்த்து குரங்கினைப் போல் சேட்டைகள் செய்வதுமாய் கடுப்படித்து இருக்கிறார்கள். இதற்காக இவர்கள் மேல் இனவெறிக் குற்றச்சாட்டு பாய்ந்துள்ளது. அவுஸ்திரேலிய அணித் தலைவராகட்டும், ஐ.சி.சி ஆகட்டும் இது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம், இதனைப் பொறுப்பது ஆகாது என்பது போல் பேசி வருகின்றனர்.

மும்பை போலீஸரும் நான்கு ரசிகர்களை கைது செய்துள்ளனர். பொது இடங்களில் முறையற்று நடந்ததாக அவர்கள் மேல் குற்றம் சாற்றப்பட்டுள்ளது . தலா 1,200 ரூபாய்கள் அபராதம் செலுத்திய பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர். இது இனவெறியோ இல்லையோ ஒருவரின் புற தோற்றத்தை வைத்து அவரை கேலி செய்வதென்பது தவிர்க்க வேண்டிய செயல். அப்படிச் செய்பவர்களை தண்டித்தும் கண்டித்தும் வைக்க வேண்டியது அவசியம். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இந்த செயல் இனவெறிச் செயல் என கூறப்படுவதில்தான் எனக்கு சம்மதமில்லை. இனவெறிச் செயல் என்றால் என்ன? ஒருவர் ஒரு குறிப்பிட்ட இனத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக தனிப்படுத்தப் படுவதும், அதனால் ஒதுக்கி வைக்கப்படுவதும், சலுகைகள் / உரிமைகள் மறுக்கப் படுவதும்தான் இனவெறி. Racism refers to race-based bigotry, prejudice, violence, oppression, stereotyping or discrimination.

ஆனால் இங்கு நடந்தது அப்படிப்பட்ட ஒரு நிகழ்வா? சைமண்ட்ஸ் அவுஸ்திரேலிய பழங்குடி இனத்தவரைச் சார்ந்தவராம். உண்மையில் இன்று ஒரு நண்பர் சொல்லித்தான் எனக்கு இது தெரியும். அதனால் அவரது தோற்றத்தை வைத்து அவரை குரங்கென்று கேலி செய்கிறார்களாம் நம் ரசிகர்கள். அப்படி அவருடைய பழங்குடி இனத் தோற்றத்தை கேலி செய்வதால் இது இனவெறிச் செயலாம்.

ஆனால் நடப்பது என்ன என்று பார்த்தால், இதனைச் செய்பவர்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். ரசிகர்கள் எனச் சொல்வது மற்ற ரசிகர்களுக்கு இழுக்கு. அதனால் இந்திய கிரிக்கெட் வெறியர்கள். அவர்கள் விரும்பும் அணியின் வெற்றிக்கு குறுக்காக நிற்பவர்களை கண்டு எரிச்சலுற்று அவர்களைக் கேலி செய்து அதில் இன்பம் காண்பவர்கள். கேலி செய்வதற்கு வேறு விஷயம் கிடைக்காமல் அவர்களின் உருவத் தோற்றத்தை வைத்து கேலி செய்வது என்பது எங்கும் நடப்பதுதான். முன்பு கானடாவில் நடந்த போட்டியில் இன்சமாம் உக் ஹக்கை உருளைக்கிழங்கு என கேலி செய்ததும் இப்படித்தான். நம் வலையுலகிலேயே "டீமை விட்டு விலகாமல் அட்டை போல் ஒட்டிக் கொன்டு நம் மானம் எனும் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.. இந்த கிழவர்கள்." என்றெல்லாம் நமது அணியினரே வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா? அல்லது அஜீத் அகர்கரின் காதின் சைஸ் பற்றித்தான் யாரும் பேசியதே இல்லையா? இதுவே சைமண்ட்ஸ் நன்றாக விளையாடாமல் வேறு ஒருவர் நன்றாக விளையாடி இருந்தால் அவர் பருமனாக இருந்து அவரைப் பூசணிக்காய் என அழைத்திருந்தால் அது இனவெறிச் செயலா இல்லையா?

சைமண்ட்ஸ் பழங்குடி இனத்தவராக இருந்ததால் அவரது தோற்றத்தை வைத்து செய்த கேலி இனவெறிச் செயலாக மாறிவிட்டதா? எனக்கு இது விளையாட்டினை ஒட்டிய கலகம் செய்யும் செயலாகவே தெரிகிறது. This sounds more of hooliganism rather than racism. மீண்டும் சொல்கிறேன். இது தவறென்பதில் இரு கருத்து இல்லை. ஆனால் இது இனவெறிச் செயல் என்றும் அதனை ஒட்டிய பிரச்சாரங்களும் தவறு என்பது என் எண்ணம். உங்கள் கருத்து என்ன?

Wednesday, October 10, 2007

உங்களுக்கு ராஜ் படேலைத் தெரியுமா?

நம்ம ஸ்கூலில் படிக்கும் பொழுது இப்படி ஒரு ஸ்கூலில் படிக்க மாட்டோமா? நமக்கு இப்படி ஒரு நண்பர்கள் குழாம் அமையாதா? நம்ம கூடவும் இப்படி அழகான பொண்ணுங்க படிக்க மாட்டாங்களான்னு ஏங்க வைத்தது ஆர்ச்சியும் அவனது நண்பர்களும். ரிவர்டேல் என்ற ஊரில் ஆர்ச்சி ஆண்ட்ரூஸ் என்பவனும் அவனது நண்பர்கள் பெட்டி, வெரானிகா, ஜக்ஹெட், ரெக்கி மற்றும் பலர் அடிக்கும் கூத்துக்கள் நம் நினைவை விட்டு அகலாதவை அல்லவா!

இப்பொழுது இந்த நண்பர்கள் குழாமில் புதிதாக அறிமுகம் ஆகி இருக்கும் நபர்தான் ராஜ் படேல். மாறி வரும் அமெரிக்க சமுதாயத்தில் இந்தியர்களின் பங்கினை பறைசாற்றும் விதமாகவே இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது. ராஜின் தந்தை ஒரு மருத்துவராகவும், அவனது தாயார் ஒரு விஞ்ஞானியாகவும், அவனது தமக்கை நம்மூர் சொல்லாடலில் டபுள் பிரமோஷன் பெறும் அளவு புத்திசாலியாகவும் காண்பிக்கப் படுகிறார்கள். ராஜுக்கு ஸ்கேட்டிங் செய்வதிலும், சினிமா எடுப்பதிலும்தான் ஆசை. எங்கு சென்றாலும் விடியோ காமிராவுடன் அலைவது போன்ற பாத்திரப் படைப்பு!



ராஜ் படேல் தொடர்ந்து வரும் ஒரு பாத்திரமா அல்லது சில இதழ்களுடன் விடைபெற்று விடுவானா என்பது ஆர்ச்சி காமிக்ஸ் ரசிகர்கள் இடையே உலா வரும் கேள்வி. ஹாரி பாட்டர் புத்தகங்களில் கூட பார்வதி, பத்மா என்ற சகோதரிகள் வந்தாலும் அவர்களுக்குப் பெரும் அளவில் பாத்திர படைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இந்தியர்கள் எங்கும் வியாபித்து வருவதை காண்பிக்க இப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்கிய ஆர்ச்சி காமிக்ஸ் நிறுவனத்தாருக்கு நமது பாராட்டுக்கள். மேல் விபரங்களுக்கு இந்தச் சுட்டியைப் பாருங்கள்.