Thursday, March 13, 2008

விண்ணோடும் முகிலோடும்....

லாரா கண்டுபிடித்து இருக்கும் விண்கலத்தில் முதல் முதலாகப் பயணம் செய்ய நான் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி இப்பொழுதுதான் என்னை எட்டியது. இறுதிகட்டத்தில் என்னையும் சேர்த்து மூன்று பேர் இருந்தார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பின் நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். வரலாற்றில் என் பெயர் இடம் பெறப் போகிறது. சந்தோஷமாக மட்டுமே இருக்க வேண்டிய இந்த வேளையில் ஏனோ என் மனம் வெறுமையாக உணர்கிறது. இதற்குத்தான் எத்தனை சோதனைகள் எத்தனை வேதனைகள். இந்தப் பயணத்தை மேற்கொள்ளத்தான் வேண்டுமா, இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சம் மேலிட, அதனை மறக்க சற்றே பழைய காலத்தை அசைப் போடத் தொடங்குகிறேன்.

விஞ்ஞானிகள் பலர் இருந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என் தாய். எந்த வித சூதுவாதும் அறியாத, எளிமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரின் கருப்பையை நிறைத்துவிட்டுக் காணாமல் போன என் தந்தை. இதுதான் என் கதையின் ஆரம்பம். தந்தை யாரென்று அறியாமலே பிறந்தோம். ஆமாம் நான் தனியாகப் பிறக்கவில்லை. என்னுடன் பிறந்தவர் என் இரு சகோதரர்கள். எந்த விதமான கவலையும் இல்லாதபடி நல்லபடியாகத்தான் என் தாயார் எங்களை வளர்த்து வந்தார்கள். ஆனால் மூன்று குழந்தைகளையும் தனியாக வளர்ப்பது என்றால் சாதாரணமா? மூவரையும் சமாளிக்க முடியாமல் அம்மா கஷ்டப்பட, எங்களை தத்துக் கொடுக்க முடிவு செய்தனர் என் குடும்பத்தினர். மற்றவர்களை விட்டாலும் என்னைப் பிரிவதை சற்றும் தாங்க முடியாமல் மிகுந்த வருத்தத்தில் இருந்த இக்குடும்பத்தின் மூத்த பெண் லாராவின் பிடிவாதத்தினால் நான் மட்டுமே தத்துப் போகாமல் தப்பித்தேன். "உன் கண்ணின் அழகில் மயங்கித்தான் பெண்ணே, உன்னைத் தத்துக் கொடுப்பதைத் தடுத்தேன்" என்று இன்னும் என்னைக் கொஞ்சும் பொழுதுதெல்லாம் சொல்லி மகிழ்வாள் லாரா. இந்த கதை எல்லாமும் அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும், இல்லை என்றால் சிறு வயதில் நிகழ்ந்தது எல்லாம் எனக்கு எப்படித் தெரியும்.

சகோதரர்களை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்து கொண்டிருந்த என் வாழ்வில் அடுத்து வீசிய புயல் என் தாயின் சுகவீனம். நன்றாக இருந்த அவரின் சிறுநீரகங்கள் திடீரென்று பாதிக்கப்பட்டு, எந்த வித சிகிச்சையும் பயனளிக்காமல் சில நாட்களிலேயே போய் சேர்ந்துவிட்டாள். யாருமே இல்லாமல் நின்ற எனக்கு அன்று தாயாய் இருந்து பார்த்துக் கொண்டது லாராதான். அவள் மட்டும் இல்லாமல் இருந்தால் நான் இன்று இந்த நிலமைக்கு வந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். குடும்பத்தில் பலரைப் போல விஞ்ஞானத்தில் திறமையுடையவளான லாரா தேர்ந்தெடுத்த துறை விண்வெளி ஆராய்ச்சி. பூமியைத் தாண்டிச் சென்றால் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அவற்றின் ஒரு பகுதியையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும். நம் அண்டத்தின் எல்லைகளுக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பாள். அதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆராய்ச்சிக்கூடமே கதி என்று கிடப்பாள். எனக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் சுத்தமாய் புரியாது என்றாலும் அவளுக்குத் துணையாக நானும் அங்கேயே இருப்பேன். அவளின் ஆராய்ச்சி பற்றி எல்லாம் என்னிடம் பேசிக்கொண்டே இருப்பாள் லாரா. எனக்குப் புரிகிறதோ இல்லையோ நானும் கேட்டுக் கொண்டே இருப்பேன். உன்னிடம் வாய்விட்டுப் பேசும் பொழுது நான் செய்யும் தவறுகள் எனக்குத் தெரிகின்றன. நான் இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்றேன் என்றால் அதில் உனக்கு ஒரு பங்கு இருக்கிறது என்பாள். அவளே உலகம் என வளர்ந்து வந்த எனக்கும் அவள் அப்படிச் சொல்வது பெருமையாகவே இருக்கும்.

ஒவ்வொரு முறை அவள் ஆராய்ச்சி தோல்வி அடையும் பொழுதும் துவண்டுவிடுவாள் லாரா. ஆராய்ச்சிக் கூடத்தின் பக்கமே செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடப்பாள். அவளை சமாதானப் படுத்தி மீண்டும் அங்கு செல்ல வைக்க வேண்டிய வேலை என்னுடையது. வேலையைத் தொடங்கிய பின் எனக்கு நன்றி சொல்லி அணைத்துக் கொள்வாள். ஆராய்ச்சி வெற்றியை நோக்கிச் செல்லும் பொழுதெல்லாம் ஆனந்தமாய் என்னைக் கட்டிக் கொள்வாள். இப்படி அவளுடனே இருப்பது எனக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. பல தோல்விகளுக்குப் பின் அவள் நினைத்ததை சாதித்து விட்டாள். விண்வெளிப் பயணத்திற்கான கலம் ஒன்றை தயார் செய்து விட்டாள். அதுவரை விண்ணில் ஏவப்பட்ட கலங்களை விட நேர்த்தியான கலம் ஒன்றை வடிவமைத்து விட்டாள். இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் பலராலும் சோதனை செய்யப்பட்டு லாராவின் கண்டுபிடிப்பு வெற்றி என்றே அறிவிக்கப்பட்டது. அதன் சோதனை ஓட்டத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. அப்பொழுதுதான் அந்த குண்டை வீசினாள் லாரா. அவளே அப்பயணத்தை மேற்கொள்ள ஆசைப்பட்டதாகவும் அதற்கு அரசாங்கம் அனுமதி தர மறுத்துவிட்டதாகவும் சொன்னாள்.

அந்த கலத்தில் முதன் முறையாகச் செல்லும் பெருமை அவளுக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அது நம் குடும்பத்தில் ஒருவருக்காவது கிடைக்க வேண்டும். அதனால் நீதான் போக வேண்டும் என்றும் சொல்லிவிட்டாள். இந்த ஆராய்ச்சியில் என்னை தொடர்ந்து ஈடுபட வைத்து என்னளவு ஆராய்ச்சிக் கூடத்தில் நேரம் செலவிட்டது நீதான். நான் போக முடியாத கட்டத்தில் நீதான் போயாக வேண்டும் என்று அவள் கூறும் பொழுது எனக்குப் பெருமையாகவே இருந்தாலும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமா என்று கவலையாகவே இருந்தது. ஆனால் நான் போயாக வேண்டும் என்பதில் லாரா உறுதியாகவே நின்றாள். அப்பொழுதுதான் அவள் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக வந்தான் அந்த ஆராய்ச்சிக் கூடத்தின் தலைவன்.

இந்தப் பயணத்திற்குத் தகுந்தவர் என என்னை விட அறிவு கூர்மையானவர், திறமையானவர் என ஒருவரைச் சொல்லி அவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வாதிடத் தொடங்கினான். அவனுக்கு ஆதரவாய் ஆராய்ச்சிக் கூடத்தில் பலரும் பேசத் தொடங்கினர். பிரச்சனை பெரிதாகத் தொடங்க அரசாங்கமும் இதில் பங்கு கொள்ளத் தொடங்கியது. இத்துறையின் அமைச்சர் தன் சார்பில் ஒருவரைக் கொண்டு வந்து அவர்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என மேலும் குட்டையைக் குழப்பினார். இப்படி ஆளாளுக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என குரல் கொடுக்கத் தொடங்க பிரச்சனை பெரிதாகத் தொடங்கியது. எனக்கு இந்த பயணத்தில் ஆசையே இல்லை. லாராவுடனே இருக்கத்தான் எனக்குப் பிடித்திருந்தது. அதே சமயம் அவள் வேண்டுமென்றதை மறுக்கவும் மனதில்லை. என்ன செய்ய என்று நான் குழம்பிக் கிடந்த அந்த வேளையில் நாடே இந்த விஷயத்தால் குழம்பி இருந்தது. இறுதியில் யாரைத் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்ய ஒரு நிபுணர் குழு ஒன்றை அமைத்து அவர்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரின் பெயர்கள் கொடுக்கப்பட்டன. லாராவின் சிபாரிசினால் அதில் ஒன்றாக என் பெயரும் இருந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு கடுமையான பயணத்தை மேற்கொள்ள முடியுமா என அறிவதற்காக வித விதமான சோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு இருக்கையில் கட்டி வைத்து மிகுந்த வேகத்தில் சுற்றுவது, தலைகீழாக நெடு நேரம் இருப்பது, எடையில்லாத சூழலில் இருப்பது என எத்தனையோ சோதனைகள் நடத்தப்பட்டன. இரத்தம் தலைக்குப் பாயும் போதும், தலைசுற்றி வாந்தியும் மயக்கமும் வரும் போதும், என்னை விட்டு விடுங்கள் எனச் சொல்லிவிட்டு விலக நினைத்தாலும் லாராவின் ஆசை நிறைவேற வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டு இருந்தேன். அவ்வளவு சோதனைகளையும் முடித்த பின் தேர்வுக்குழு தன் பரிந்துரையை இன்று அளித்துள்ளது. கடைசி வரை பரிசீலிக்கப்பட்ட மூவரில் என் பெயரைச் சொல்லி இருக்கிறார்கள். என்னைத் தேர்ந்தெடுத்ததை விட லாராவின் எண்ணம் ஈடேறியதனால் எனக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் அவளை விட்டு பிரிந்து செல்லப் போகிறோம் என்ற எண்ணமும் உடன் வருவதால்தான் மனதில் அத்தனை வெறுமை.

அப்பொழுது குதூகுலமாக வந்து "லாய்கா, என் கனவு பலித்து விட்டது! என் கலத்தில் முதன் முதலில் செல்லப் போவது நீதான்!" எனச் சொல்லி என்னை ஆரத் தழுவும் லாராவிற்குத் தெரியாமல் என் கண்ணீரை அடக்கிக் கொண்டு நானும் வாலாட்டி, அவள் முகத்தை நக்கி என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.

நவம்பர் 1957

56 comments:

said...

போன பதிவில் மேற்குக் கடற்கரை சென்றதாகச் சொல்லி இருந்தேன். திரும்ப வருகையில் விமானத்தில் எழுதியது. லாய்காவின் உண்மைக் கதை தெரிந்தாலும் அதற்கு நம்ம ஊர் செண்டிமெண்டோடு ஒரு பின்புலம் அமைத்து எழுதலாமே என நினைத்து எழுதினேன்.

said...

நல்ல கதை. நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்.

//ஆனால் மூன்று குழந்தைகளையும் தனி ஆளாக வளர்ப்பது என்றால் சாதாரணமா?//

தனி ஆளாக வளர்ப்பதா? இது கொஞ்சம் mis-leading-ஆ இருக்கே. நாய்கள் தங்கள் குட்டிகளை வளர்க்கும் அளவுக்கு அறிவு பெற்றிருக்குமா என்ன?

said...

தலைப்புக்கு தனியாக ஒரு பாராட்டு!

பெனாத்தலார் உபயமா என்ன? அருமையான தேர்வு.

said...

நாய் என்று தெரியும் அதன் பெயர் எல்லாம் தெரியாது,படித்து (நிஜமாக) தெரிந்துகொண்டேன்.
கதை ஓட்டம் அட்டகாசமாக இருந்தது.

said...

ஆகா இது பைரவரு கதையா... நாங்கூட என்னடா ஏதோடான்னு நெனச்சேன். முடிவுல சொல்லீருக்கீங்க பாருங்க முடிவு...

நாயை நாற்காலீல கட்டிச் சுத்துனா சும்மாயிருக்குமா? எப்படிச் செஞ்சிருப்பாங்க? ம்ம்ம்ம்...

said...

//பெனாத்தலார் உபயமா என்ன? அருமையான தேர்வு.//


ஸ்ரீதர் உங்களுக்கு நேரம் சரியில்லன்னு நினைக்கரேன்......கொத்ஸ்சுகிட்டருந்து இருக்கு உங்களுக்கு:):)

கொத்ஸ், இன்னும் கதைய படிக்கல......நாளைக்குதான்.!!!

//போன பதிவில் மேற்குக் கடற்கரை சென்றதாகச் சொல்லி இருந்தேன்//

தகவல் சொல்லியிருக்ககூடாதா??

said...

தல
குட்டிச் செல்லம் லாய்கா பற்றிய குறும்படமோ-ன்னு நினைச்சிட்டேன்! டுபுக்கு அண்ணாத்த அடுத்த படத்துக்கு திரைக்கதை எழுதிக் கொடுக்கச் சொன்னாரா என்ன?

சூப்பரோ, சூப்பர்!

said...

இந்த வீடியோவையும் பாருங்க!
http://youtube.com/watch?v=Iiv4MPsYFv4

said...

”லொள்”ளு கதை :)

said...

கதையும் தலைப்பும்...நல்லா இருந்துச்சுங்க..

said...

கதை ந்ல்லா இருந்தது. ஆனால் பாதி படிக்கும் போதே ஒரு ச்ந்தேகம் இதில் மனித வாடைவரவில்லையே என்று.

said...

//ஆமாம் நான் தனியாகப் பிறக்கவில்லை. என்னுடன் பிறந்தவர் என் இரு சகோதரர்கள்.//

இந்த வரிகளில் லேசா ஒரு சந்தேகம் வந்துச்சு. அப்புறம் ஆராய்ச்சிக் கூடத்தில் கூடவே இருந்ததும் உறுதியாகியது.

ஆனாலும், நல்லா எழுதி இருக்கீங்க.

said...

முதல்லேயே முடிவைப் படிச்சுட்டேன், அதனாலே முழுக்கதையையும் படிக்கலை, திரைப்படமாய் வந்ததோ? எப்போவோ விமரிசனம் படிச்சேனா? நினைவில்லை! :)))))))))

said...

//எந்த வித சூதுவாதும் அறியாத, எளிமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரின் கருப்பையை நிறைத்துவிட்டுக் காணாமல் போன என் தந்தை.//

இந்த வாக்கியம் எச்சமாக நிற்கிறது. கதையை மீண்டும் படிக்கும் போது பல தவறுகள் தென்படுகின்றன. வாசகனை தவறான எண்ணத்துக்கு இட்டுச் சென்று முடிவில் எதிர்பாராத ஒன்றைச் சொல்லும் நோக்கில் எழுதப்படும் கதையில் ஏரணக் குறைவு எள் முனையேனும் வரலாமா? இவ்வகைக் கதைகள் முடிவறிந்த பின்னர் மீண்டும் படிக்கும்போது தனிச்சுவை தரவேண்டுமென்பது கட்டாயமில்லையா?

(கொத்தனாரை வாரக்கூடிய வாய்ப்பை வளமாக வழங்கியதற்கு வந்தனம்)

said...

தலைப்பு பிரமாதம். சிவாஜி பத்மினி பாட்டாச்சே,
இதிலேயும் ஏதாவது தமிழ்
விளையாட்டு இருக்குனு
பார்த்தேன்.
லைகா கதையா. சரி.
சுவாரஸ்யமாத்தான் எழுதி இருக்கீங்க கொத்ஸ்.

said...

ஆனாலும், நல்லா எழுதி இருக்கீங்க.



இதுக்கு நிஜமான Meaning என்ன?
:))

said...

நல்லா எழுதி இருக்கீங்க!!..

said...

தல

நல்லா எழுதியிருக்கிங்க..அருமை ;))

said...

என்னுடைய முந்தய பின்னூட்டுக்கு என்னுடைய பதில்:

ஏரணமும் பொருந்திவர மீண்டும் படிக்கையில் தனிச்சுவைவர சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

said...

ஓக்கே ஓக்கே!

said...

:)

said...

//தகவல் சொல்லியிருக்ககூடாதா??//

தகவல் சொன்னாலும்.... அட நீங்க வேற... Flying Visit கூட இல்லையாம். Flying மட்டும்தானாம்.

//பினாத்தல் சுரேஷ் said...
ஓக்கே ஓக்கே!
//

இதென்னவோ காமராஜர் பாணி மாதிரி தெரியுதே. அப்ப பெயில் மார்க்கா? :pppp

//ஓகை said...
இவ்வகைக் கதைகள் முடிவறிந்த பின்னர் மீண்டும் படிக்கும்போது தனிச்சுவை தரவேண்டுமென்பது கட்டாயமில்லையா?//

அதே... அதே...

//என்னுடைய முந்தய பின்னூட்டுக்கு என்னுடைய பதில்:

ஏரணமும் பொருந்திவர மீண்டும் படிக்கையில் தனிச்சுவைவர சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
//

இதுதான் புரியல. அதுக்குள்ள கொத்தனார் இன்புளூயன்ஸ் பண்ணிட்டாரா? :-))...

"ஏரணம்" என்னும் புதிய வார்த்தை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி ஓகையாரே!

said...

//நல்ல கதை. நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். //

நன்றி தல!

//தனி ஆளாக வளர்ப்பதா? இது கொஞ்சம் mis-leading-ஆ இருக்கே. நாய்கள் தங்கள் குட்டிகளை வளர்க்கும் அளவுக்கு அறிவு பெற்றிருக்குமா என்ன?//

ஆள் என்பது தவறுதான். அதனை மாற்றிவிட்டேன்! ஆனால் கொஞ்ச நாட்களுக்காவது அம்மா நாய் குட்டிகளை வளர்ப்பது இயற்கையானதுதானே...

said...

//தலைப்புக்கு தனியாக ஒரு பாராட்டு!

பெனாத்தலார் உபயமா என்ன? அருமையான தேர்வு.//

அடப்பாவிகளா!!

ஆமாம் தலைப்பு அவர் குடுத்ததுதான். நான் முதலில் வைத்திருந்தது

நான் பறந்து போனேனே.....

அவர்தான் அதை மாற்றச் சொல்லி உத்தரவு போட்டார்.

said...

//நாய் என்று தெரியும் அதன் பெயர் எல்லாம் தெரியாது,படித்து (நிஜமாக) தெரிந்துகொண்டேன்.
கதை ஓட்டம் அட்டகாசமாக இருந்தது.//

வினையூக்கி சுட்டி குடுத்து முன்னமே ஒரு கதை எழுதி இருக்கார். அப்ப இருந்தே அந்த மாதிரி எதாவது எழுதணுமுன்னு நினைச்சேன்.

நீங்க ஒருத்தர் புதுசா தகவல்கள் கிடைச்சுதுன்னு சொல்லிட்டீங்க. இது போதும்.

said...

கதைல ஏதோ மிஸ்ஸாகற மாதிரி இருக்கே :-(

said...

//ஆகா இது பைரவரு கதையா... நாங்கூட என்னடா ஏதோடான்னு நெனச்சேன். முடிவுல சொல்லீருக்கீங்க பாருங்க முடிவு...//

ஜிரா, கதை நல்லா இருந்துதா? என்ன போன பதிவுக்கு வராம எஸ் ஆகிட்டீங்க? :)

//நாயை நாற்காலீல கட்டிச் சுத்துனா சும்மாயிருக்குமா? எப்படிச் செஞ்சிருப்பாங்க? ம்ம்ம்ம்...//

அப்படி எல்லாம் செஞ்சாங்களான்னு தெரியாது தல. நானா சும்மா மனுசங்களுக்கு அப்படி செய்வாங்கன்னு படிச்சதை நாய்க்கும் சேர்த்து போட்டுட்டேன், :)

said...

//ஸ்ரீதர் உங்களுக்கு நேரம் சரியில்லன்னு நினைக்கரேன்......கொத்ஸ்சுகிட்டருந்து இருக்கு உங்களுக்கு:):)//

அவரு விஷயம் தெரிஞ்சுதான் வாயை விட்டு இருக்காரு ராதாக்கா. அதனால ஒண்ணும் செய்யறதுக்கு இல்லை!

//கொத்ஸ், இன்னும் கதைய படிக்கல......நாளைக்குதான்.!!!//

இப்படி ஒரு பின்னூட்டமா! சபாஷ்!! ஆனா நாளைக்கு படிச்சுட்டு பின்னூட்டம் போட்டுறுங்க. இல்லைன்னா நான் தப்பா நினைக்க வேண்டியது வரும்.

//போன பதிவில் மேற்குக் கடற்கரை சென்றதாகச் சொல்லி இருந்தேன்//

தகவல் சொல்லியிருக்ககூடாதா?? //

வந்தது ஒரே ஒரு நாள்தான். அப்புறம் என்னாத்த தகவல் சொல்லறது. அடுத்த முறை சொல்லிட்டாப் போச்சு!

said...

//தல
குட்டிச் செல்லம் லாய்கா பற்றிய குறும்படமோ-ன்னு நினைச்சிட்டேன்! டுபுக்கு அண்ணாத்த அடுத்த படத்துக்கு திரைக்கதை எழுதிக் கொடுக்கச் சொன்னாரா என்ன?

சூப்பரோ, சூப்பர்!//

திரைக்கதையா வேண்டாம்பா வேண்டாம். ஏற்கனவே ஒருத்தர் திரைக்கதை எழுதினதை அவரு போன பின்னாடி கூட புடிச்சு தொங்கிக்கிட்டு இருக்காங்க நீங்க வேற!!

said...

//இந்த வீடியோவையும் பாருங்க!
http://youtube.com/watch?v=Iiv4MPsYFv4//

கடைசியா வந்த ஊளைச் சத்தம் என்னமோ செய்யுது இல்ல? சுட்டிக்கு நன்றி தல!

said...

//”லொள்”ளு கதை :)//

நல்லா இருக்குன்னே சொல்லறதா எடுத்துக்கறேன்!!

said...

//கதையும் தலைப்பும்...நல்லா இருந்துச்சுங்க..//

ரொம்ப நன்றி பாசமலர்.

said...

//கதை ந்ல்லா இருந்தது. ஆனால் பாதி படிக்கும் போதே ஒரு ச்ந்தேகம் இதில் மனித வாடைவரவில்லையே என்று.//

ஏங்க லாரா பேரு அம்புட்டு தடவை வந்துச்சே. அது மனுச வாடை இல்லையா?!

சும்மா லூசில் விடுங்க. என்னமோ முயற்சி செஞ்சேன். இன்னும் நாலு கதை எழுதினா கொஞ்சம் பெட்டர் ஆகாது? :)

said...

//இந்த வரிகளில் லேசா ஒரு சந்தேகம் வந்துச்சு. அப்புறம் ஆராய்ச்சிக் கூடத்தில் கூடவே இருந்ததும் உறுதியாகியது.

ஆனாலும், நல்லா எழுதி இருக்கீங்க.//

ரீச்சர் பாஸ் மார்க்தானே? அப்புறம் மூணு குழந்தைகள் பிறக்கறது எல்லாம் நடக்கறதுதானே...

said...

//முதல்லேயே முடிவைப் படிச்சுட்டேன், அதனாலே முழுக்கதையையும் படிக்கலை, திரைப்படமாய் வந்ததோ? எப்போவோ விமரிசனம் படிச்சேனா? நினைவில்லை! :)))))))))//

இது வேற!

இப்படி எல்லாம் செஞ்சா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்படின்னு சொல்லிடுவேன். ஜாக்கிரதை.

said...

//இந்த வாக்கியம் எச்சமாக நிற்கிறது. கதையை மீண்டும் படிக்கும் போது பல தவறுகள் தென்படுகின்றன. வாசகனை தவறான எண்ணத்துக்கு இட்டுச் சென்று முடிவில் எதிர்பாராத ஒன்றைச் சொல்லும் நோக்கில் எழுதப்படும் கதையில் ஏரணக் குறைவு எள் முனையேனும் வரலாமா? இவ்வகைக் கதைகள் முடிவறிந்த பின்னர் மீண்டும் படிக்கும்போது தனிச்சுவை தரவேண்டுமென்பது கட்டாயமில்லையா?//

அதாவதுங்க தெருநாய் ஒண்ணு வந்து சில்மிஷம் செஞ்சுருச்சுன்னு சொல்ல வந்தேன். அதான் அப்படி. வேற என்ன தவறுகள். கொஞ்சம் சொல்லுங்க. திருத்திக்கறேன்.

//(கொத்தனாரை வாரக்கூடிய வாய்ப்பை வளமாக வழங்கியதற்கு வந்தனம்)//

அதுக்குத்தான் போன பதிவு மாதிரி அடிக்கடி போடறோமே... :))

said...

//தலைப்பு பிரமாதம். சிவாஜி பத்மினி பாட்டாச்சே,
இதிலேயும் ஏதாவது தமிழ்
விளையாட்டு இருக்குனு
பார்த்தேன்.
லைகா கதையா. சரி.
சுவாரஸ்யமாத்தான் எழுதி இருக்கீங்க கொத்ஸ்.//

ஆமாம். படம் பேரு புதையல் இல்லீங்களா? ஆனா இந்த தலைப்பை வெச்ச பெருமை நம்ம பெனாத்தலாருக்குத்தாங்க.

கதை நல்லா இருந்ததா. நன்றி!

said...

//ஆனாலும், நல்லா எழுதி இருக்கீங்க.



இதுக்கு நிஜமான Meaning என்ன?
:))//

அதானே. என்ன ரீச்சர் இது? வந்து விளக்கம் குடுங்க.

said...

//நல்லா எழுதி இருக்கீங்க!!..//

நன்றி கயல்விழி முத்துலெட்சுமி!

said...

//தல

நல்லா எழுதியிருக்கிங்க..அருமை ;))//

நன்றி கோபிநாத்.

said...

//ஏரணமும் பொருந்திவர மீண்டும் படிக்கையில் தனிச்சுவைவர சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.//

என்னங்க. இப்போ நல்லா இருக்குன்னு சொல்லறீங்களா இல்லைன்னு சொல்லறீங்களா? ஒரே குழப்பமா இருக்கே....

said...

//ஓக்கே ஓக்கே!//

யோவ் இப்போ என்ன சொல்ல வறீரு?

said...

//கப்பி பய said...

:)//


கப்பி, :)

said...

//தகவல் சொன்னாலும்.... அட நீங்க வேற... Flying Visit கூட இல்லையாம். Flying மட்டும்தானாம்.//

ஆமாய்யா. அங்க இருந்ததை விட அங்க வர பறந்த நேரம்தான் அதிகம்.

///இதென்னவோ காமராஜர் பாணி மாதிரி தெரியுதே. அப்ப பெயில் மார்க்கா? :pppp//

அவரு பெயில் அப்படின்னு சொல்லிட்டாருப்பா.

//இதுதான் புரியல. அதுக்குள்ள கொத்தனார் இன்புளூயன்ஸ் பண்ணிட்டாரா? :-))...//

அதான் பாருங்க. நானும் குழம்பிப் போயி இருக்கேன்.

//"ஏரணம்" என்னும் புதிய வார்த்தை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி ஓகையாரே!//

ஏரணம் என்றால் நம்ம தமிழ்ல லாஜிக் அப்படின்னு சொல்லறோமே. அதான்! :))

said...

//கதைல ஏதோ மிஸ்ஸாகற மாதிரி இருக்கே :-(//

வெட்டி நான் தங்கமணி சமைச்சா சொல்லும் கமெண்டை எல்லாம் இங்க வந்து சொல்லறீரு. என்ன மிஸ்ஸிங். சரியாச் சொல்லுமய்யா!!

said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதவும்.

said...

ஊக்கத்திற்கு நன்றி ரவி!

said...

/// வேற என்ன தவறுகள். கொஞ்சம் சொல்லுங்க. திருத்திக்கறேன். ///

மீண்டும் படிக்கும்போது தென்பட்ட தவறுகளை மொத்தமாகக் கூறினால் கதைநாயகு சிந்திப்பதெல்லாம் நாயின் சிந்தனயாகத் தோன்றவில்லை. எனக்கு நாயின் சிந்தனை எப்படியிருக்கும் என்று தெரியாது. உங்களுக்கும் தெரியாது(என்று நினக்கிறேன்) என்பதால் இதை பொருட்படுத்தாமல் விட்ட போது கதை நன்றாக இருந்தது. அதையே இரண்டாவது பின்னூட்டில் தெரிவித்தேன்.

said...

ஓகை,

நாய் எப்படிச் சிந்திக்கும் என்பது எனக்கும் தெரியாதுதான். எல்லாம் தெரிந்த சில பேர் இருக்காங்க நம்ம தமிழ் வலையுலகில். அவங்களை வேணா கேட்டுப் பார்க்கணும்.

ஆனா நம்ம நினைக்கிற மாதிரி நாயின் எண்ணங்களும் இருந்தால் இப்படி இருக்குமோ என்று எழுதியதுதான். அப்புறம் நாய் பேசாது என்பதால் அதற்கு நேரடியாக எந்த வசனமும் இல்லை. கதையில் பேசியது லாரா மட்டும்தானே!! :))

இந்த மாதிரி என் கதையையும் மதிச்சுப் பேசினதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றிங்க.

said...

'நச்'சுன்னு ஒரு கதைக்கு எழுதிட்டு இப்ப போட்ட மாதிரி இருக்கு!:))

ஆனாலும் நல்லா இருக்கு!

தமிழ்மணம் வீசலை!

ஏதோ ஒரு ருஷ்ய நாட்டுக் கதையின் மொழிபெயர்ப்பைப் படித்த உணர்வுதான் தொடக்கத்திலிருந்து இறுதி வரை!

ஆனாலும் நல்லாவே இருந்தது!

தொடர்ந்து எழுதுங்க!:))

said...

//நச்'சுன்னு ஒரு கதைக்கு எழுதிட்டு இப்ப போட்ட மாதிரி இருக்கு!:))//

இன்னும் அந்த இன்புளூயன்ஸ்தான் போல! ஆனா சர்வேசன் வந்து கருத்து சொல்லவே இல்லையே....

//ஆனாலும் நல்லா இருக்கு!//

நீங்களுமா?

//தமிழ்மணம் வீசலை!//

எங்க ஊர் பாஷையில் வீசுதுன்னா துர்நாற்றம் அடிக்குதுன்னு அர்த்தம். இப்போ எல்லாம் தமிழ்மணம் வீசுதே!! :)))

//ஏதோ ஒரு ருஷ்ய நாட்டுக் கதையின் மொழிபெயர்ப்பைப் படித்த உணர்வுதான் தொடக்கத்திலிருந்து இறுதி வரை!

ஆனாலும் நல்லாவே இருந்தது!

தொடர்ந்து எழுதுங்க!:))//

சப்ஜெக்ட் ரஷ்யாவா ஆனதுனால அப்படி இருக்கோ? அடுத்த கதையில் இன்னும் முயற்சி செய்யறேன். :)

said...

சூப்பரூ......

said...

நான் இது உங்க்ள் friendடோட நிஜ கதை என்று நினைத்தேன்

said...

//இராம்/Raam said...

சூப்பரூ......//

நன்னி தலைவா!!

said...

//jaisankar jaganathan said...

நான் இது உங்க்ள் friendடோட நிஜ கதை என்று நினைத்தேன்//

நான் பிறக்கறதுக்கு முன்னாடியே இவங்க போய் சேர்ந்துட்டாங்க அப்புறம் எங்க இருந்து நண்பனாகறது!! :))

said...

கொத்ஸ்,

கதையைப் படித்தேன். பின்னூட்டங்களை வேக வேகமாகப் பார்த்து வரும் போது 'ஏரணத்தை'ப் பற்றி பேசியிருப்பதை மட்டும் படித்தேன்.