Monday, March 31, 2008

கொத்தனாரின் டைரிக் குறிப்பு!



சனிக்கிழமை, மார்ச் 29, 2008

இன்று மதியம் நம்ம ஆன்மீகச் செம்மல் கேஆர்எஸ் சொன்ன அவரைக்காய் பொரிச்ச கூட்டுதான் மெனு. நல்லாவே இருந்தது. முக்கியமா அவரு சொன்னா மாதிரி காயை வெட்டினது வித்தியாசமா இருந்தது.

நம்ம ஜூனியர் நேத்து ஒரு விஷயம் சொன்னாரு. நம்ம ரீச்சர் பதிவிலும் அதைப் பத்தி பின்னர் படிச்சேன். அதாவது நேத்து பூமிக்காக ஒரு மணி நேரம் அப்படின்னு பூமி பற்றிய விழிப்புணர்வுக்காக ஒரு மணி நேரம் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு இருக்க வேண்டுமாம். எவ்வளவோ செஞ்சுட்டோம், இதைச் செய்ய மாட்டோமா அப்படின்னு நாங்களும் அந்த திட்டத்திற்கு சரி என்று சொல்லியாகிவிட்டது. வீட்டில் பொதுவாக மெழுகுவர்த்தி எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்காக போய் சிலவற்றை வாங்கிக் கொண்டு வந்தோம். சீக்கிரமே சாப்பாட்டை எல்லாம் முடித்துக் கொண்டு விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட்டு குடும்பமே அதனைச் சுற்றி அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினோம். நம்ம தங்கமணியின் தந்தை அவர் சிறுவயது நிகழ்வுகளை எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார். ரொம்ப சுவாரசியமா இருந்ததால ஒரு மணி நேரம் போனதே தெரியலை. இந்த ஒரு மணி நேரமும் குடும்பத்தில் எல்லாரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்ததே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. உலகத்தைக் காக்கறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இப்படிப் பேசவாவது மாசம் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க?



ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 2008

Horton hears a Who அப்படின்னு ஒரு திரைப்படம் போனோம். Dr.Seuss
என்பவர் குழந்தைகளுக்கான கதைகள் பலவற்றை எழுதி உள்ளார். எதுகை மோனையுடம் பாட்டுப் போல எழுதப்பட்டிருக்கும் இவரது கதைகள் குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி. இவருடைய கதைதான் இந்த திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காட்டில் ஒரு யானை. அதன் பெயர் ஹார்டன். அந்த யானையின் அருகே பறந்து செல்லும் ஒரு தூசில் இருந்து அபயக் குரல் ஒன்று கேட்டதாக நினைத்து அத்தூசின் பின் சென்று உதவ நினைக்கிறது ஹார்டன். தூசில் இருந்து குரல் கேட்பதாவது எனச் சொல்லி யானைக்குப் பயித்தியக்கார பட்டம் கட்ட நினைக்கின்றன சில மிருகங்கள். தூசினுள் ஒரு உலகம், அதில் ஹூ என்ற ஒரு வித உயிரினம், அவர்களின் வாழ்க்கை, அவர்களுக்கு உண்டான சோதனை எனப் படம் விரிகிறது. ஹார்டனால் ஹூக்களுக்கு உதவி செய்ய முடிகிறதா, பயித்திக்காரப் பட்டம் கிடைத்ததா என்பதுதான் படம்.








"I meant what I said, and I said what I meant" என்று பஞ்ச் டயலாக் பேசும் யானை அழகு! என் பையன் மட்டுமின்றி நானும் எங்களுடன் வந்திருந்த தங்கமணியின் தாயாரும் கூட ரசித்துப் பார்க்கும் வண்ணம் படத்தை எடுத்திருக்கும் குழுவினருக்கு ஒரு சபாஷ்!

இன்று இரவு ரீச்சரின் பள்ளிக்கூடத்தில் கற்றுத் தந்த பீர்க்கங்காய் வாட்டெவர் இட் இஸ் செய்தேன். நன்றாக இருந்தது. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாகவே இருக்கிறது.

டிஸ்கி: என்னிடம் கேள்வி கேட்டுப் பதிவு போட்ட பொழுது ஆபாசப் பின்னூட்டங்கள் அதிகம் வருவதாக நண்பர் டிபிசிடி சொன்ன பொழுது மிக வருத்தமாய் இருந்தது. நான் இது வரை எழுதியது எதுவுமே கண்ணியம் குறைந்து இல்லை. என் நண்பர்கள் யாரும் அது போல செய்பவர்கள் இல்லை. இது வரை இந்த மாதிரி குற்றச்சாட்டு வந்ததும் இல்லை. அது பற்றிய விபரங்கள் (பெயர், ஐபி முகவரி போன்றவை) இருந்தால் அவைகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது எனக்கு அவற்றைப் பின்னூட்டமாக தந்தால் நான் வெளியிடுகிறேன். இப்படி ஒரு டிஸ்கி போட வேண்டிய நிலையில் தமிழ்வலையுலகம் இருப்பதற்காக வருந்துகிறேன்.

32 comments:

said...

ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்காம பதிவு போட்டு!! அடிச்சு ஆடும் மக்கள் எல்லாம் வாங்கப்பா!!

said...

//பூமி பற்றிய விழிப்புணர்வுக்காக ஒரு மணி நேரம் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு இருக்க வேண்டுமாம். எவ்வளவோ செஞ்சுட்டோம், இதைச் செய்ய மாட்டோமா அப்படின்னு நாங்களும் அந்த திட்டத்திற்கு சரி என்று சொல்லியாகிவிட்டது. //

நல்ல விஷயத்தை செஞ்சிருக்கீங்க :)

said...

நாங்களும் இதையே செய்தோம். எங்க தெருவுல நாங்க மட்டும்தான் செஞ்சோம்னு நினைக்கிறேன். 7:30 மணிக்கு எல்லா தொலைக்காட்சியையும் பார்த்தேன். எல்லாரும் தேர்தலைப் பத்தி மட்டுமே பேசிட்டு இருந்தாங்க. ஒரு அறிவிப்போ, அறிக்கையோ இல்லை. அப்படியே எட்டி பார்த்தேன் வழக்கம் போல மன்ஹட்டன் ஜெகதோதியா இருந்துச்சு, ESB தவிர.
வாழ்க அமெரிக்கா!

said...

//சீக்கிரமே சாப்பாட்டை எல்லாம் முடித்துக் கொண்டு விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட்டு குடும்பமே அதனைச் சுற்றி அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினோம். நம்ம தங்கமணியின் தந்தை அவர் சிறுவயது நிகழ்வுகளை எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார்.//

இதை படிச்சொடனே நினைவு வந்தது எங்கப்பா ராத்திரி சாப்பிட்ட அப்புறம் வெளியில் ஈசி சேரில் சாய்ந்தபடி ஆலாபனை செய்வது....அதெல்லாம் ஒரு காலம்.

//ஒரு மணி நேரம் போனதே தெரியலை//

கர்ர்ரெக்ட்டா ஒரு மணி நேரம் முடிஞ்சொடனே விளக்கையும்..டிவியயும் போட்டீங்களா?? இது தெரிஞ்சாதான் அவர் சொன்ன கதை உங்களுக்கு எவ்வளவு சுவாரசியமா இருந்ததுன்னு சொல்ல முடியும்.:):)

said...

பதிவுக்கு:

நான் இப்படி எதுவும் செய்யலை. ஆனா, இருட்டுல ஒக்காந்து பழங்கதை பேசற சுகமே தனிதான். இப்ப ஊர்க்கு போனாலும் குடும்பத்தோட செய்வோம். அப்புறம் ஏண்டா கரெண்ட் வந்துதுன்னு இருக்கும் :-)

டிஸ்கிக்கு::))))))))))))))))))

said...

//நம்ம தங்கமணியின் தந்தை //
//வந்திருந்த தங்கமணியின் தாயாரும் //

என்னமோ தூரத்து சொந்தம் மாதிரி சொல்றீங்களே...

//இன்று இரவு ரீச்சரின் பள்ளிக்கூடத்தில் கற்றுத் தந்த பீர்க்கங்காய் வாட்டெவர் இட் இஸ் செய்தேன்.//

இப்ப புரியுது... ஏன் அப்படி சொன்னீங்கன்னு :-)) (இதுக்கு உடனே ஒரு டிஸ்கி போடுங்கப்பு)

//பூமிக்காக ஒரு மணி நேரம் //

அதான் கூகுளாண்டவரே விளக்கை அணைச்சிட்டாரே நாள் பூரா...

இன்னமும் நமக்கு எனர்ஜி கன்வர்சேஷன் பற்றிய சரியான அறிவு (awareness) ஏற்படவில்லை.

இந்த no smoking day மாதிரிதான் இதுவும். அதான் நேத்திக்கு சிகரெட் பிடிக்கல இல்லை. இன்னிக்கு 2 கூட பிடிச்சா தப்பில்லைங்கற மாதிரிதான் இருக்கும்.

Daylight savings மாதிரி எனர்ஜி கன்வர்சேஷனுக்காக சில சட்டதிட்டங்கள் கொண்டு வருவது நல்லது. (உ-ம் - வீட்டிற்க்கு ஒரு கார்தான் வைத்திருக்க வேண்டும். அல்லது பொது போக்குவரத்தில் போய்வருகிறவர்களுக்கு சில இன்சென்டிவ்ஸ் etc)

இல்லையென்றால் ஆற்றோடு போற நீரை குவளையில் சேமித்து வைப்பது போல்தான் தோன்றுகிறது.

இதாவது சேமிக்கிறாங்களே -ன்னு சொல்றீங்களா, அப்ப சரி!

said...

டிஸ்கிக்கு :((.. மத்தபடி பழைய கதைகளை பேசுவது எப்பொழுதுமே சுகம் தான். இங்க சென்னையில் அவங்களாகவே விளக்கை அணைப்பார்கள் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தது ஏமாந்தோம்.

said...

அந்த யானைப் படம் நல்லா இருந்துதா??? போன வாரம் போக முடியல, இந்த வாரம் போலான்னு இருக்கோம்...

said...

யானையே அழகு. இதுலே பேசும் யானைன்னா கேக்கணுமா?:-)

பாருங்க ஒரு ச்சின்ன தூசியைப் பத்திக்கூட யானைக்கு எவ்வளவு கவலைன்னு?

புரிஞ்சாச் சரி:-))))

குடும்பத்தில் எல்லாரும்கூடி ஒண்ணா இருந்து கதைபேசி......

ஹூம்.... அந்த நாள் மீண்டும் வருமான்னு இருக்கு.


மாமியார் & மாமனார்களுக்கு எங்கள் அன்பான விசாரிப்புகள்.

said...

நல்ல காரியம் தான்..

அதுசரி. எர்த் ஹவரில் மெழுகுவர்த்தி பிடிச்சேன்னு சொல்றீரு. உம்ம ஒருத்தருக்காகவே தனியா ஒரு கமெண்ட்ஸ் சர்வர் நிறுவ வேண்டியதா போச்சுனு ப்ளாக்கர்ல சொல்றாங்களே.. அதுக்கு என்ன சொல்றீரு?

//அடிச்சு ஆடும் மக்கள் எல்லாம் வாங்கப்பா!//

பரிகாரமா இதுலயவாது விளையாடாம இரும்.

said...

//நல்ல விஷயத்தை செஞ்சிருக்கீங்க :)//

வாங்க ஆயில்யன். நல்ல விஷயமாத்தான் தோணுது. For more reasons than one!!

அப்புறம் ஆங்கிலத்தில் oilyen அப்படின்னு பேரு வெச்சுக்கிட்டா அட ஆயிலும் இருக்கும் யென்னும் இருக்கு அப்படின்னு கூட்டம் மொய்க்காது! :))

said...

:)) - டைரிக்குறிப்புக்கு.

:(( - டிஸ்கி சொல்லும் சேதிக்கு. சில பேர் இன்னும் வளர வேண்டுமோ?

said...

ரொம்ப நாளுக்கு பொறவு உங்க பதிவுக்கு வர்றேன்...

சந்தோசமான பதிவு....

அப்புறம் தலைவரே வாழ்த்துக்கள் எதுக்குன்னு எல்லாம் கேக்கப்பிடாது சொல்லிட்டேன்...

சீக்கிரம் விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க

அதுல்ல எல்லா சமையல் குறிப்பு ஐட்டமும் போட்டுத் தாக்குங்க..

said...

//நாங்களும் இதையே செய்தோம். எங்க தெருவுல நாங்க மட்டும்தான் செஞ்சோம்னு நினைக்கிறேன். //

எது? பீர்க்கங்காயா அவரைக்காயா? ஏன் உங்க தெருவில் வேற பதிவரே இல்லையா? :)

//7:30 மணிக்கு எல்லா தொலைக்காட்சியையும் பார்த்தேன். எல்லாரும் தேர்தலைப் பத்தி மட்டுமே பேசிட்டு இருந்தாங்க. ஒரு அறிவிப்போ, அறிக்கையோ இல்லை. //

ஆனாலும் வலைப்பதிவில் போடறதே கொஞ்சம் டூ மச்சா இருக்கு. இதை எல்லாமா ரீவியில் சொல்லுவாங்க?

/அப்படியே எட்டி பார்த்தேன் வழக்கம் போல மன்ஹட்டன் ஜெகதோதியா இருந்துச்சு, ESB தவிர.
வாழ்க அமெரிக்கா!//

ஓ! நீங்க விளக்கணைப்பைச் சொல்லறீங்களா? ஆமாம். இவனுங்க ஆரம்பிக்கலைல்ல, அதான். அப்படி இருந்தா அதுக்கு விளம்பரம் என்ன, வாழ்த்து அட்டை என்னான்னு ஜமாய்ச்சிருப்பாங்க. என்னத்த சொல்ல!

said...

//இதை படிச்சொடனே நினைவு வந்தது எங்கப்பா ராத்திரி சாப்பிட்ட அப்புறம் வெளியில் ஈசி சேரில் சாய்ந்தபடி ஆலாபனை செய்வது....அதெல்லாம் ஒரு காலம்.//

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் நினைவுகள்!! :))

//கர்ர்ரெக்ட்டா ஒரு மணி நேரம் முடிஞ்சொடனே விளக்கையும்..டிவியயும் போட்டீங்களா?? இது தெரிஞ்சாதான் அவர் சொன்ன கதை உங்களுக்கு எவ்வளவு சுவாரசியமா இருந்ததுன்னு சொல்ல முடியும்.:):)//

விளக்கு - எஸ்! (பையன் பிறந்த நாள் மாதிரி ஊதி அணைக்கத் தயாரா இருந்தான். அதுக்காக Happy Earth Day to you! அப்படின்னு பாட வேறா பாடினோமே!!)

ரீவி - நோ. அன்னிக்கு முழுவதுமே ரீவி போடலை!

said...

//நான் இப்படி எதுவும் செய்யலை. ஆனா, இருட்டுல ஒக்காந்து பழங்கதை பேசற சுகமே தனிதான். இப்ப ஊர்க்கு போனாலும் குடும்பத்தோட செய்வோம். அப்புறம் ஏண்டா கரெண்ட் வந்துதுன்னு இருக்கும் :-)//

எல்லாருமே எப்பவாவது இப்படி இருந்திருக்கோம் இல்லையா!!

//டிஸ்கிக்கு::))))))))))))))))))//

நான் வருத்தமாச் சொன்னா உமக்கு சிரிப்பா இருக்கா? வேணாம், அழுதுடுவேன்....

said...

//என்னமோ தூரத்து சொந்தம் மாதிரி சொல்றீங்களே...//

ஆமாம். இந்தியாவில் இருந்து வந்திருக்காங்க. எம்மாந்தூரம்... யோவ் மாமனார் மாமியாருன்னு எழுதி இருப்பேன். அப்புறம் தங்கமணின்னு எப்படி எழுதறது? பதிவு எழுதலைனாலும் பரவாயில்லை, அப்படியே எழுதினாலும் டிஸ்கி போடலைன்னாலும் பரவாயில்லை. ஆனா தங்கமணின்னு சொல்லாம இருக்க முடியுமோ? அதான் இப்படி! :))

//இப்ப புரியுது... ஏன் அப்படி சொன்னீங்கன்னு :-)) (இதுக்கு உடனே ஒரு டிஸ்கி போடுங்கப்பு)//

இதுக்கு எதுக்கு டிஸ்கி? அடுத்தது மூச்சு விட்டதுக்கு எல்லாம் டிஸ்கி போடச்சொல்லி கேட்பீரு போல!

//இன்னமும் நமக்கு எனர்ஜி கன்வர்சேஷன் பற்றிய சரியான அறிவு (awareness) ஏற்படவில்லை. //

அது என்ன எனர்ஜி கன்சர்வேஷன் பத்தின்னு தனியாச் சொல்ல வேண்டி இருக்குன்னு தங்கமணி சொல்லறாங்க. போய் நிம்மதியா தூங்கும்!

//Daylight savings மாதிரி எனர்ஜி கன்வர்சேஷனுக்காக சில சட்டதிட்டங்கள் கொண்டு வருவது நல்லது. //

இது நல்ல திட்டம் இல்ல என்பது பரவலான அபிப்பிராயம்! :)

//இதாவது சேமிக்கிறாங்களே -ன்னு சொல்றீங்களா, அப்ப சரி!//

இது ஒரு அடையாளக் குறியீடு. அம்புட்டுதான்.

said...

//டிஸ்கிக்கு :((.. //

என்னாத்த சொல்ல!

//மத்தபடி பழைய கதைகளை பேசுவது எப்பொழுதுமே சுகம் தான்.//

ம்!

//இங்க சென்னையில் அவங்களாகவே விளக்கை அணைப்பார்கள் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தது ஏமாந்தோம்.//

அப்படி ஏமாறாம நீங்களே ஒரு நிமிஷம் முன்னாடி எழுந்து போய் அணைச்சு இருக்கலாமே!

said...

//அந்த யானைப் படம் நல்லா இருந்துதா??? போன வாரம் போக முடியல, இந்த வாரம் போலான்னு இருக்கோம்...//

சூப்பரா இருக்கு. கட்டாயம் போங்க.

said...

//புரிஞ்சாச் சரி:-))))//

புரியுது புரியுது!!

//குடும்பத்தில் எல்லாரும்கூடி ஒண்ணா இருந்து கதைபேசி......

ஹூம்.... அந்த நாள் மீண்டும் வருமான்னு இருக்கு.//

அந்த நாளும் வந்திடாதோ!! அந்த நாளும் வந்திடாதோ!! :)


//மாமியார் & மாமனார்களுக்கு எங்கள் அன்பான விசாரிப்புகள்..//

பாஸ் ஆன் பண்ணிட்டேன். ரொம்ப நன்றின்னு சொன்னாங்க. :)

said...

//உம்ம ஒருத்தருக்காகவே தனியா ஒரு கமெண்ட்ஸ் சர்வர் நிறுவ வேண்டியதா போச்சுனு ப்ளாக்கர்ல சொல்றாங்களே.. அதுக்கு என்ன சொல்றீரு?//

எல்லாரும் அந்த காலத்தில் குடும்பக் கதை பேசின மாதிரின்னு சொல்லறாங்க. நீர் சொல்லறது எல்லாம் அது மாதிரி அந்தக் காலம். ஹூம்.

//பரிகாரமா இதுலயவாது விளையாடாம இரும்.//

நான் விளையாண்டா மட்டும்... சரி விடுங்கடே. சும்மா கிளறி விட்டுக்கிட்டு..

said...

//எது? பீர்க்கங்காயா அவரைக்காயா? ஏன் உங்க தெருவில் வேற பதிவரே இல்லையா? :)//

தெருவுக்கு நாலு பதிவர்ன்னு கணக்கு இருக்கா?

இங்கே எங்கூருலே, இன்னும் சொன்னா நியூசியின் தெற்குத்தீவில் நான் மட்டுமே 'பதிவரா' இருக்கேன்:-)

said...

//இது தெரிஞ்சாதான் அவர் சொன்ன கதை உங்களுக்கு எவ்வளவு சுவாரசியமா இருந்ததுன்னு சொல்ல முடியும்//

அழகா வலைய விரிச்சு இருக்கீங்க ராதக்கா.
இதுக்கு நமது கொத்ஸ் ச்ரியான விளக்கம் அளிக்க வில்லையானால் என்ன நடக்கும்?னு அவருக்கே தெரியும். :))


அது என்ன அண்ணாச்சி, செய்தேன்! அப்ப உங்க வீட்லயும்...? :D

said...

//:)) - டைரிக்குறிப்புக்கு.//

:))

//:(( - டிஸ்கி சொல்லும் சேதிக்கு. சில பேர் இன்னும் வளர வேண்டுமோ?//

அதெல்லாம் ஒரு க்ரூப்பாதான் அலையறாங்க. என்னாத்த சொல்ல!

said...

//ரொம்ப நாளுக்கு பொறவு உங்க பதிவுக்கு வர்றேன்...//

வாங்க வாங்க.

//சந்தோசமான பதிவு....//

ஆமாங்க. டிஸ்கியைத் தவிர இல்லையா!!

//அப்புறம் தலைவரே வாழ்த்துக்கள் எதுக்குன்னு எல்லாம் கேக்கப்பிடாது சொல்லிட்டேன்...//

வாழ்த்து சொன்னா நன்றி சொல்ல வேண்டியதுதானே. ஏன் எதுக்கு அப்படின்னு கேட்கணும்?!

//சீக்கிரம் விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்க//

பண்ணிட்டா போச்சு! எப்போ வரப்போறீங்க? :)

//அதுல்ல எல்லா சமையல் குறிப்பு ஐட்டமும் போட்டுத் தாக்குங்க..//

அவரைக்காயும் பீர்க்கங்காயும்தானே. தாக்கிட்டாப் போச்சு!

said...

//இங்கே எங்கூருலே, இன்னும் சொன்னா நியூசியின் தெற்குத்தீவில் நான் மட்டுமே 'பதிவரா' இருக்கேன்:-)//

ரீச்சர், இப்படியா சொல்லறது? அஞ்சு பேர் போற காரில் ஏறினா நாலு பேர் கம்மி அப்படின்னு இல்ல சொல்லணும்! :))

said...

//அழகா வலைய விரிச்சு இருக்கீங்க ராதக்கா.//

வந்து விழுந்துட்டாரு பாருங்க நம்ம அம்பி!

//இதுக்கு நமது கொத்ஸ் ச்ரியான விளக்கம் அளிக்க வில்லையானால் என்ன நடக்கும்?னு அவருக்கே தெரியும். :))//

விளக்கம் குடுத்தாச்சே பாருங்க!

//அது என்ன அண்ணாச்சி, செய்தேன்! அப்ப உங்க வீட்லயும்...? :D//

அம்பி, இவ்வளவு நாளா நம்ம பதிவுக்கே வரதில்லை அப்படின்னு நல்லாத் தெரியுது. அது மட்டுமில்லை நீர் புதுசாக் கல்யாணம் ஆனவரு அப்படின்னு இன்னுமே நல்லாத் தெரியுது.

said...

வணக்கம்.தங்களின் மின்னஞ்சல் முகவரி தர முடியுமா?

said...

பிரேம்ஜி, உங்கள் வலைப்பூவில் என் மின்னஞ்சல் முகவரியைப் பின்னூட்டமாகத் தந்துள்ளேன்.

said...

மன்னா! அள்ளிட்டீங்க மன்னா!
எப்பிடிங்க இப்பிடில்லாம்...........

ரொம்ப 'டச்சிங்கா' இருந்திச்சு!

செம செம செமை!
:))

said...

வீஎஸ்கே ஐயா, ஏப்ரல் ஒண்ணாம் தேதி இந்த மாதிரி பின்னூட்டம் எல்லாம் போட்டா ரொம்ப ரென்சனா இருக்கு...:))

said...

யானை பாலத்தைக் கடந்துடுமானு பயமாப் போச்சு, நல்லவேளையா மேலே வந்துடுச்சு, யானை அழகோ அழகு! இந்தியாவுக்கு எப்போ வருமோ இந்தப் படம் எல்லாம்? :P நல்லா கவலைப் படுது போங்க! :)