Thursday, June 19, 2008

பதிமூன்றாம் ஆழ்வாருக்குப் பரபரப்புக் கேள்விகள்!!

இந்த மாதிரி தொடர் விளையாட்டுகள் தமிழ்மணத்தில் நிறைய பார்த்திருக்கிறேன். 'ஏம் வே! உமக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு?' என்று கேட்டா சிலருக்கு கோபம் வரலாம். ஆனால் 'ஐயா, weird தொடர்விளையாட்டில் உங்களையும் இணைத்திருக்கிறேன்' அப்படின்னு பதிவு போட்டா உடனே பதிவு போட நிறைய பேர் தயாரா இருக்காங்க. இந்த தொடர் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பது ஒரு நல்ல அனுபவம்.

இந்தியர்கள் கடைக்கு போய் கத்திரிக்காய் வாங்குவதால்தான் கத்திரிக்காய் விலையேறுகிறது என்று கண்டுபிடித்திருக்கும் கொத்தனார் -

இவர் ஒரு மூத்த பதிவர். நாலு விசயமும் தெரிஞ்ச நல்ல மனசுக்காரர். "நாலு பேர் பாக்குற மாதிரி நல்லா இரு"ன்னு சொல்லாம இப்படி நாலு பேரு பாக்குற மாதிரி கேள்வி கேக்குராரேன்னு யோசனையாத்தான் இருக்கு. இதில சோடி போட்டுகிட்டு வேற திரியறாங்கங்க. ஒருத்தர் கேள்வி கேப்பாராம். இன்னொருத்தர் பஞ்ச் கொடுப்பாராம்.

இதுகெல்லாம் அசந்துருவோமா. கைப்புள்ள! எடுறா உலாவியை! விடுறா மெயில்லை!

1. பதிவுலகில் தொடர்ந்து இயங்கும் நீங்க, பல பதிவர்களை விட பின்னூட்டங்களில் பட்டையைக் கிளப்பும் நீங்க ஏன் இதுவரை பதிவு தொடங்கலை?

பதிவு எழுத தேவை கொஞ்சம் எழுத்து திறமை, வாசகர் வட்டம் பற்றிய தெளிவு, கொஞ்சம் 'தடித்த தோல்' மற்றும் நிறைய்ய்ய்ய நேரம். நம்ம வேலை நேரம் பத்தி சொல்லவே முடியாது. அதான் இப்படியே இருந்திட்டு இருக்கேன். சோம்பேறியா :-)

2. பதிவுகள் எழுதும் நாங்களெல்லாம் வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்வது போல நீங்கள் படித்துப் பின்னூட்டமிடுவதற்காகவே வாங்கிக் கட்டிக் கொள்வது உண்டா?

இது வரைக்கும் நான் எதுவும் வாங்கிக் கட்டிக்கலை. பொதுவா அவங்கதான் 'வாங்கிக் கட்டிப்பாங்க'. நாம வெறும் டவுசர் பார்ட்டிதானே.

3. அடிப்படையில் ரஜினி ரசிகராக அறியப்படும் நீங்கள் தசாவதாரத்திற்கு கமலே நினைக்காத கோணங்களில் பின்னூட்டங்கள் போட்டு ஆதரவு திரட்டுவதின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன? (நான் ரஜினி ரசிகன் என்று யார் சொன்னது போன்ற மொக்கை பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)

புதிய செய்தி அறியத் தந்தமைக்கு நன்றி :-). ரஜினி ராம்கி சண்டைக்கு வந்திடப் போறார் அப்புறம்.

பொதுவாக நாம் ஒரு படைப்பை அணுகும்போது பல முன்முடிவுகளோடே அணுகுகிறோம். முதல் பார்வையில் மோனாலிசா ஒரு இத்தாலிய சீமாட்டியின் போர்டிரெய்ட் படம். இது மிகச் சுலபமான புரிதல். "இதில் என்ன பெருமை இருக்கிறது? ரவி வர்மா இதைவிட பிரமாதமா வரைவார்" என்றோ, "போர்டிரய்ட் எல்லாம் எலிமெண்டரி ஆர்ட்" என்றோ சொல்லிவிட்டு வந்து விடலாம். ஒரு மாட்ர்ன் ஆர்ட் தலைகீழா மாட்டினாலும் யாரும் கண்டுபிடிக்கமாட்டாங்க அப்படின்னு சுலபமா ஜோக் அடிக்கலாம்.

Dan Brown மோனாலிசா பத்தி நிறைய எழுதறார். பல புதிய கோணங்கள் கிடைக்கின்றன.

கமல்ஹாசன் பல திரைக்கதைகள் எழுதியிருந்தாலும், அதில் பின் வரும் மூன்றும் ஒரு சில புள்ளிகளில் ஒன்று சேர்கின்றன. ஹேராம், அன்பே சிவம் இப்பொழுது தசாவதாரம். பாத்திரங்களின் பெயர்களுக்கு அவர் தரும் முக்கியத்துவம், மனிதனின் அகப்பயணம், சித்தாந்தங்கள் மற்றும் மொழியின் ஊடே நடக்கும் வெளிப்பயணங்கள், மனிதனின் இருப்பு சார்ந்த அலசல்கள், இறை நம்பிக்கை பற்றிய கேள்விகள் போன்ற பல விசயங்களை ஒரு திரையில் தீட்டுகிறார். அந்த பெரிய திரை நிறைய பேர் கண்ணுக்கு தெரிவதில்லை.

அட நமக்கு முதலில் புரியவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே என்றுதான் நினைத்தேன். எழுதினேன் :-)

4. காலப் பயணம் செய்ய முடிந்து உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு சம்பவத்தை மாற்ற முடியும் என்ற சக்தி கிடைத்தால் எதனை மாற்றுவீர்கள்? எவ்வாறு மாற்றுவீர்கள்?

இதுவரை அப்படி ஒரு சம்பவமும் நினைத்ததில்லை. ஆனால் வாழ்க்கையை ரிவர்ஸில் எப்படி இருக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம்.

தொண்டு கிழமாக இருந்துவிட்டு, மீண்டும் உடலில் வலு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து, 'தொல்லை கொடுக்கும் பெருசு'ல் இருந்து பிள்ளைகளுக்கு சூப்பர் மேனான அப்பாவாக மாறி, சப்பென்று இருக்கும் இல்லற வாழ்வில் மீண்டும் காதலை சந்தித்து, மீண்டும் கல்லூரி வாழ்க்கை வாழ்ந்து, பள்ளிப் பாடங்களை இப்பொழுதாவது புரிந்து படித்து, துன்பம் இல்லாத மழலைப் பருவத்தில் தவழ்ந்து, அந்த ஒரு நொடி சம்போகத்தில் ஒரு உயிரணுவாக மாறிப் பார்க்கலாம்.

நாம யாரை கேள்வி கேட்கிறது? அப்படியே கேட்டாலும் நம்மளை மதிச்சு யாரும் பதில் போடுவாங்களான்னு தெரியாது. 'ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்' அப்படின்னு வடிவேலுக்கு அப்புறம் இணையத்தில் இவரைத்தான் எல்லாரும் சொல்கிறார்கள்.

எங்கள் அருமை அண்ணன், சிலம்புச் செல்வன், கண்ணகியின் கோவலன், மாதவிப் பந்தலான், பதின்மூன்றாம் ஆழ்வார், இணைய தளபதி இப்படியெல்லாம் பில்டப் கொடுக்காமலே அவரைப் பத்தி நிறைய பேருக்கு தெரியும். இப்ப கேள்விகள் (இது வேறயா):

1. நான் வறட்டு ஆன்மீக பற்றாளன் இல்லை. ஆனால் உங்கள் எழுத்தில் இருக்கும் ஆன்மீகம் பல புதிய புரிதல்களை தருகின்றன. நீங்கள் இறை மறுப்பாளராக இருந்து பின்னர் மாற்றம் கண்டதாக அறிகின்றேன். மாற்றங்கள் வாழ்வில் இன்றியமையாதது. ஆனால் ஆன்மீகத் தேடலைத் தாண்டி நீங்கள் ஆன்மீகம் வளர்க்க நிறைய சிரத்தை எடுக்கிறீர்கள். எதனால் இந்த மாற்றம்?

2. இத்தனைப் பதிவுகள், பின்னூட்ட மட்டுறுத்தல், தொடர்ந்து விவாதம் என்று எப்படி நேரப் பங்கீடு செய்கிறீர்கள்?

3. இந்த மாதிரி ஒரு தொடர் விளையாட்டில் உங்களை மூன்று பேர் ஒரே சமயத்தில் அழைக்கிறார்கள். ஒரு சங்கிலியில் தான் நீங்கள் பங்கு பெற முடியும் என்று விதி இருந்தால் (அட இருக்குன்னு சொல்றேன்!) யாருடைய சங்கிலியை தொடர வைப்பீர்கள்? ஏன்?

உங்களை தொடரச் சொல்லும் அந்த மூன்று பதிவர்கள்

அ) கோ. இராகவன்

ஆ) கோவி கண்ணன்

இ) வெட்டிப் பையல் பாலாஜி

4. உங்கள் நினைவில் ஆழப் பதிந்து போன சிறுவயது கதை? யார் அந்த கதையை உங்களுக்கு சொன்னார்கள்?

டிஸ்கி: பதிவுக் கயமைத்தனம் செய்வதற்காகவே நான் பதிவெழுதா ஸ்ரீதரைக் கேள்வி கேட்டதாகப் பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டு ஸ்ரீதரின் பதில்களையும் கேள்விகளையும் இங்கு பதிவாய் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

Tuesday, June 17, 2008

வித விதமாய் நுண்ணரசியல் (பெனாத்தலுக்கு நன்றி!)

பதிவு போட விஷயமே இல்லைன்னு சொல்லறவங்களைக் கட்டி வெச்சு உதைக்கணும். நேரம் இல்லை, ஆணி அதிகம் அப்படின்னு சொன்னா விஷயம் வேற. ஆனா இந்த பதிவுலகத்தில் எத்தனையோ எழுதலாமே. அன்பே சிவம், சிவாஜி, தசாவதாரம் என அப்பப்போ எதாவது திரைப்பட சீசன் வருது. அப்புறமா கேள்வி பதில் என்ற பெயரில் நமக்கு நாமே விளையாடிக்கலாம். அதுவும் இல்லையா, தொடர் விளையாட்டுக்கள் எத்தனையோ வருது - சிவாஜி வாயில் ஜிலேபி, அதைத் தொடர்ந்து இந்த கேள்விக்கென்ன பதில் விளையாட்டு. அப்புறம் என்ன விஷயப் பஞ்சம் அதான் எனக்குப் புரியவே இல்லை. நிற்க.

மேலே சொன்ன கேள்விக்கென்ன பதில் விளையாட்டில் நம்மளை பாத்து நாலு கேள்வி கேட்டுப்புட்டாரு நம்ம பெனாத்தல். அதுல கருப்பு வெள்ளையில் எழுது, கலரில் எழுதுன்னு ஆயிரம் நுண்ணரசியல். இருந்தாலும் அவர் ஆசைப்படி என் பதில்களோட பஞ்ச் அண்ணாவின் கருத்துக்களையும் வாங்கிப் போட்டாச்சு.

1. எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்களை நேரிலும் சந்திக்க ஆசைப்படுவீர்களா? யார் யார் உங்கள் லிஸ்டில்?

பதிவினால் பெற்ற பயன் யாதெனின் அப்படின்னு முன்னமே சொல்லி இருக்கேன் - "எந்த ஊர் போனாலும் பார்ப்பதற்கு நண்பர்கள். அதில் சிலர் பதிவுகளையும் தாண்டி நல்ல நண்பர்களாய் இருப்பது." அப்படிச் சொல்லி இருக்கும் போது பார்க்காம இருப்பேனா? லிஸ்ட் எல்லாம் இல்லை. எந்த ஊர் போனாலும் அங்க யார் இருக்காங்கன்னு பார்த்து முடிஞ்சா ஒரு சந்திப்பு போட்டுடறதுதான். முக்கியமா அதை வெச்சு நாலு பதிவு போட முடியுமே. அதுக்காகவாவது பார்க்க வேண்டாமா?

ஒரே ஒரு பிரச்சனை. அவங்க நம்மளைப் பார்க்க பிடிக்காம ஊரை விட்டே போயிடறாங்க நம்ம குமரன் மாதிரி . இல்லை நம்ம ஸ்ரீதர் வெங்கட் மாதிரி கடைக்குப் போனேன். கத்திரிக்காய் வாங்கினேன். அப்படின்னு தொலைபேசிக்கிட்டே அடுத்த முறை பார்க்கலாம் அப்படின்னு சொல்லிடறாங்க.

என்ன, நம்மை யாரு என்னான்னு தெரியாம, எதிர்வினைகளை முன்வைப்பதால் நம்மைப் பற்றிய முன்முடிவுகளுடன் காரசாரமாய் பதிவு / பின்னூட்டம் போட்டு காய்ச்சி எடுக்கிற பதிவர்கள் நேரில் பார்த்தா என்ன சொல்லுவாங்க. ஒரு முறை நேரில் பார்த்துப் பழகிய (பாப்பையா சொல்லும் பழகல் எல்லாம் இல்லை) பின் அந்த முன்முடிவுகளில் மாற்றம் இருக்குமான்னு தெரிஞ்சுக்க ஆசை.

பஞ்ச் அண்ணா: பெனாத்தலா கேள்வி கேட்டாரு? அந்த ஆளுக்கு கேள்வி கேக்கத் தெரியலையா இல்ல உம்மகிட்ட பயமான்னு தெரியல! இப்படி இருந்திருக்கணும் கேள்வி: எழுத்தில் மட்டும் சந்திக்கும் பதிவர்கள் உங்களை நேரில் பயமில்லாமல் சந்திப்பார்களா? இல்லை சாக்கு போக்கு சொல்லி ஓடிவிடுவார்களா?

2. திருநெல்வேலிலே ஆரம்பிச்சு அமேரிக்கா வரைக்கும் பல ஊர் பாத்திருக்கீங்க.. நேர்மையாச் சொல்லுங்க.. எந்த ஊர்லே சைட்டடிக்கும்போது தங்கமணிகிட்டே மாட்டினீங்க? அதன் பின் விளைவுகள் என்ன?


வைப்பாலஜியில் முனைவரான நீங்க என் கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்டது சிரிப்பாத்தான் இருக்கு. முதலில் மாட்டாமல் இருக்க முடியாது என்ற உண்மையை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய மனப்பக்குவம் வர வேண்டும். சரி. பார்த்தாச்சு, மாட்டியாச்சு. அடுத்தது என்ன செய்ய. முதலில் யாரைப் பார்த்தோமோ அவங்களை மட்டம் தட்டி விட வேண்டும். என்ன இது நீல சுரிதாருக்குப் பச்சை துப்பட்டா? அல்லது காதில் என்ன அது தோடா இல்லை கத்திச் சண்டைக்கு பயன்படும் கேடயமா? இப்படி எதாவது. இல்லையா, அந்த சேலையைப் பாரு. நீ வேண்டாம் என்று வீட்டில் வேலை செய்பவருக்குத் தந்தது மாதிரியே இருக்கே. இந்த மாதிரி வேற வியாபாரம் நடக்குதா? நீ அன்னிக்குப் போட்ட டிசைன் இன்னிக்கு இவங்க போட்டு இருக்காங்களே அப்படின்னு சொல்லணும். (நான் வந்து இன்னிக்கு இருக்கும் பேஷன் படி உடுத்தறது இல்லையா? என்ற கேள்வி வரலாம்).

எதுவும் வொர்க் அவுட் ஆகலைன்னா உனக்கு மனக்கஷ்டமா இருந்தா இனிமே பார்க்கலைன்னு சொல்லணும். அடுத்த முறை சினிமா போகும் போது படம் பூராவும் கண்ணை மூடிக்கிட்டு இருக்கணும். அதை அவங்களுக்குத் தெரியற மாதிரி செய்யணும். என்னன்னு கேள்வி வரும். கொத்ஸ் (இங்க உங்க பேரைச் சொல்லணும்) வாக்குக் குடுத்தா தவற மாட்டான். திரையில் வரும் பெண்களை எக்காரணம் கொண்டும் பார்க்க மாட்டேன் அப்படின்னு வசனம் பேசணும். நல்ல படமான சிரிச்சுக்கிட்டே பார்த்துத் தொலை அப்படின்னு வரும் இல்லை படம் குருவி ரேஞ்சுக்கு இருந்தா அந்தக் கடுப்பெல்லாம் சேர்ந்து ஒரு மிதி விட்டு இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. குடுத்த காசை வீணாக்காம நான் பெற்ற துன்பம் பெருக நீயும் என ஒரு பதில் வரும். ஆக மட்டும் பார்க்கலாம்.

தங்கமணியையும் பையனையும் கூட்டிக்கிட்டுக் கடைக்குப் போகும் போது எல்லாம் அவன் எதையாவது எடுக்க முனைந்தா 'Son, there are some rules in life. When you are in a public place, there are things you can see, but you can't touch!" அப்படின்னு சொல்லிக் குடுத்துடறது!

பஞ்ச் அண்ணா: நல்லாத்தான்யா ப்ளான் எல்லாம் பண்றீங்க.. ஆனா பேக்பயர் ஆச்சுன்னா வாழ்நாள் ஆப்பு ப்ரீ! இதே சிச்சுவேஷன்லே "அட.. ரொம்ப நல்லவன் தான்யா நீ.. எனக்காகத்தான் எல்லாத்தையும் சைட் அடிச்சே சரி.. அப்படித்தான் போற வற பொம்பளைங்க என்ன தோடு போட்டிருக்காங்க, எது லேடஸ்ட் டிசைன், துப்பட்டா போட்டிருக்காங்களா இல்லியான்னு டீட்டெயிலா நோட் பண்ணுவியா? என்னோட பேட்டைக்கு வா" ன்னு சொன்னா கொத்தனார் கொத்துக்கறியனார்!

3. நுண்ணரசியல்: சாதா பிராண்ட், பி ந பிராண்ட், இன்னும் வேற எதாச்சும் இருந்தா அதைப்பத்தியும் படம் வரைந்து பாகங்களைக் குறியுங்கள் பார்க்கலாம்?

அரசியல் என்றால் என்ன என்பது நமக்கெல்லாம் நல்லாவே தெரியும். திமுக, அதிமுக என பெரிய அளவில் செய்யும் அரசியல் நமக்கெல்லாம் ஓரளவு தெரியும். அலுவலகத்தில் ஒருத்தனுக்குப் பதவி உயர்வு கிடைத்தால் அதற்கு நாம் கற்பிக்கும் காரணமோ அல்லது வீட்டில் நம் மைத்துனர் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு நாம் கற்பிக்கும் காரணமோ நாம் நம்மளவில் செய்யும் அரசியல். இதெல்லாம் வெளிப்படையா நடப்பது.

இவ்வளவு வெளிப்படையா இல்லாம கொஞ்சம் நுணுக்கமா கொஞ்சம் யோசிச்சால் மட்டுமே புரிபடற மாதிரி செய்யும் அரசியல் நுண்ணரசியல். இன்றைக்குப் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் பாடு படுவது திமுக அரசு அப்படின்னு ஒரு அறிக்கை வெளிவந்தா, அதை விமர்சனம் பண்ணி ஒரு பதிவு போடும் பொழுது, "அதுக்கு தமிழகத்தில் இன்று மதுரைதான் ஆட்சி!!" அப்படின்னு தலைப்பு வெச்சீங்கன்னா அது பல அடுக்குகளில் வேறு வேறு விதமான பொருள் தரும். பெண்கள்தான் சக்திவாய்ந்தவர்கள் என்ற நேரடி விளக்கம், அதற்கு ஒரு படி கீழே போனால் இன்று அமைச்சகத்தில் நடப்பதை விட கலைஞரின் வீடுகளில்தான் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஒரு கோணம். அதையும் தாண்டி அழகிரி கை ஓங்கி இருப்பதை சொல்லும் வேறு ஒரு கோணம். இப்படி பல விதமான கோணங்கள் பல விதமான முடிவுகளைத் தருவது என்பது நுண்ணரசியல். ஆனா இது எல்லாம் சாதா நுண்ணரசியல்.

அடுத்து வருவது கலர்கண்ணாடி நுண்ணரசியல். இதில் பல வலையுலக ஜாம்பவான்கள் எல்லாம் இருக்காங்க. ஒரு விளையாட்டு இருக்கும். ஒரு அட்டையின் ஒரு பகுதியில் கேள்வி இருக்கும். அதன் விடை அந்த அட்டையின் பின்புறத்தில் இருக்கும். ஆனா அது தெளிவாகத் தெரியாது. அந்த விளையாட்டோட ஒரு சிகப்புக் கண்ணாடி தருவாங்க. அதைப் போட்டுக்கிட்டுப் பார்த்தா விடை பளிச் எனத் தெரியும்.

அந்த மாதிரி இந்த க.க.நுண்ணரசியலில், முதலில் நீங்க முன்முடிவுகள் பலவற்றோட இருக்கணும். எந்த பதிவையும், எந்த நிகழ்வையும் இந்த முன் முடிவோடதான் அணுகணும். அப்படிச் செய்யும் போது, இந்த கலர் கண்ணாடியைப் போடாதவங்களுக்குத், அதாங்க அந்த முன்முடிவுகள் இல்லாதவங்களுத், தெரியாத பல விஷயங்கள் இவங்களுக்குத் தெரியும்.

உண்மையாச் சொல்லப்போனா இதுக்கும் வேண்டாத மருமக கைபட்டா குத்தம் -கால்பட்டா குத்தத்துக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. பிடிச்ச ஆளு காளை மாட்டுக்கு நாலு கொம்பு ன்னு சொன்னாக் கூட "100% உடன்படுகிறேன்" என்பதும், பிடிக்காத ஆளு ஜூலை மாசத்துக்கு 31 நாள்னாக்கூட சண்டை பிடிக்கறதும் நடக்கிறதைத்தான் பார்க்கறீங்களே.

மூணாவது பி.ந.நுண்ணரசியல். இது ஒரு பெரிய வாசாப்பு. இந்த நுண்ணரசியல் எழுதறவனுக்கும் ஒண்ணும் புரியாது. படிக்கிறவனுக்கும் ஒண்ணும் புரியாது. ஆனா எழுதறவன் தான் என்னமோ சாக்ரடீஸ் மாதிரி நினைப்பில் எழுதுவான். படிக்கிறவன் புரிஞ்சா மாதிரி பட்டையைக் கிளப்பிட்டீங்க வாத்தியாரே அப்படின்னு பின்னூட்டம் போடுவான். அதுவும் சில சமயங்களில் அவனுக்கும் அறிவு ஜீவி வியாதி தொத்திக்கும். அப்போ அவ்வளவுதான் ரெண்டு பேரும் மாறி மாறி எழுதிக்கிறதைப் படிச்சா நமக்கு மண்டையில் முடி எல்லாம் கொட்டிப் போயி உடம்பு சூடேறி கண்ணைக் கட்டிக்கிட்டு மயக்கமா வரும். இது உதாரணமா எதையாவது சொல்லப் போக உங்களுக்கு எதாவது ஆயிடிச்சுன்னா என்ற கவலையில் அதை எல்லாம் செய்யலை.

கடைசியா, (நுண்ணரசியல் பத்திப் பேசும் போது கடைசியான்னு சொல்லறதே தப்பு. ஏன்னா இதையும் தாண்டிப் புனிதமானது ஒண்ணு வரலாம்!) நாம பண்ணற நுண்ணரசியல். இதுல என்ன விசேஷமுன்னா செய்யறவங்களுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. ஆனா நம்ம கண்ணுக்கு இதெல்லாம் பளிச்சுன்னு படும். அதைச் சொன்னா அப்போதான் அதைச் செஞ்சவருக்கு நாமா இதெல்லாம் செஞ்சோம் அப்படின்னு தோணும். உதாரணத்திற்குப் போன பதிவில் நாம சொன்ன மாதிரி ஆஸ்கார் பிலிம்ஸ் என தசாவதாரத்தில் வரும் பொழுது அந்தப் பையன் சட்டையில் 'கேப்டன்' அப்படின்னு எழுதி இருக்கும். அது எதேச்சையா நடந்திருப்பது. அதன் மூலம் கமலை விட விஜயகாந்த் எவ்வளவோ மேல் அப்படின்னு ரவிசந்திரன் சொல்ல வராரு அப்படின்னு ஒரு பதிவு போட்டா அது இந்த மாதிரி நுண்ணரசியல்.

இதுல முக்கியமானது இதை வெளிப்படுத்தும் பொழுது உம் நுண்ணரசியல் என்னை பிரமிக்க வைக்கிறது, உமது நுண்ணரசியல் கண்டு பிரமித்து நிற்கிறேன் எனச் சொல்வது அவசியம். ஆனா ஒண்ணு, இதுதாங்க இருக்கிறதுலேயே ஆபத்தில்லாதது. படிச்சுட்டு சிரிச்சுட்டு, பின்னூட்டமா ஒரு சிரிப்பானாவது போட்டுட்டு போனா முடிஞ்சுது வேலை.

பஞ்ச் அண்ணா: யானையக் குருடனுங்க தொட்டு என்னவோ சொன்ன மாதிரி எங்கயோ ஒரு மேட்டரைப்பாத்துட்டு என்னவோ வாய்க்கு வந்தபடியோ மனசுக்கு வந்தபடியோ பேசறதுதான் நுண்ணரசியல் - அப்படின்னு ஒரு வரிலே முடிக்கவேண்டிய பதிலை வச்சுகிட்டு ஜிலேபி சுத்தியிருக்கீரே .. உம்மை!

4. பின்னூட்டப் பிதாமகரே, நீங்களும் பார்த்து வெறுத்து ஒதுக்கும் பதிவுகள் என்னவோ, ஏனோ?

முதல் இரண்டு வார்த்தைகள் என்னை ரீச்சருக்கு எதிரா கொம்பு சீவற மாதிரி இருக்கு. ஏன்யா இப்படி (நுண் இல்லாத)அரசியல் பண்ணறீரு. அது மட்டுமில்லாம வெறுத்து ஒதுக்கும் அப்படின்னு பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லறீங்களே!! அதிகம் படிக்காத பதிவுகள் அப்படின்னு வேணா சொல்லிக்கலாமா? அப்படிப்பட்ட பதிவுகளில் சில வகைகள் இருக்கு.

முதலாவது ஒருத்தர் எதாவது சொல்ல வந்த அவரு என்ன சொல்லறாரு என்பதை விட அவர் யாரு என்பதற்கு அதிக கவனத்தைக் குடுத்து நமக்குப் பிடிக்காதவரா இருந்தா அவரை விமர்சனம் செய்வதையே பதிலாகத் தருவது. இந்த மாதிரி தனிமனித தாக்குதல்களால் சொல்ல வந்த கருத்து காணாமப் போகுது. இது மாதிரி தொடர்ந்து நடக்கும் பதிவுகள் சிலவற்றின் பக்கம் போறது இல்லை. அனானியா வந்து ஒருத்தர் கேள்வி கேட்டா, பெயர் போடக்கூட பயப்படும் உனக்கெல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும் என்ற மேட்டிமைத்தனமும் இதில் அடங்கும்.

இரண்டாவது போன பதிவில் செல்லமா உவ்வேக் என அறியப்பட்ட வகை எழுத்துக்கள் இருக்கும் பதிவு. அதுக்கும் நமக்கும் ஏழாம் பொருத்தம். அதனால அந்தப் பக்கம் எல்லாம் போறது இல்லை.

மூணாவது இந்த ரொம்ப இலக்கியங்கள் மற்றும் ஆத்திகம் பற்றிய பதிவுகள். இதெல்லாம் நமக்கு ஏணி வெச்சாலும் எட்டாது. ரொம்பவே தீவிரமா விவாதங்கள் நடக்குற இடத்தில் நம்ம என்ன கும்மி ஆட்டையா போட முடியும். அதனால பொதுவா ஒண்ணு ரெண்டு பதிவு படிச்சாலும் அப்படியே சத்தம் காட்டாம நகர்ந்து போயிடறது.

கடைசியா இப்போ வர நிறையா பதிவுகளில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். நிலக்கடலை சாப்பிடும் போது நடுவில் கெட்டுப் போன பருப்பு மாட்டினா மாதிரி படிக்கும் பொழுது என்னவோ செய்யுது. அதுவும் எதோ ஒண்ணு ரெண்டு இருந்தாலும் பரவாயில்லை. தட்டச்சுப் பிழைகள் அப்படின்னு ஒதுக்கிடலாம். ஆனா வரிக்கு வரிக்கு இதே மாதிரி தப்பு இருந்தா படிக்கவே பிடிக்க மாட்டேங்குது. "ற்" என்ற எழுத்துக்குப் பின் வரும் மெய்யெழுத்துக்கள், "ண,ந,ன' தவறுகள், "ற,ர" தவறுகள் எல்லாம் படிச்சா ரொம்பவே கடுப்பா இருக்கு. எவ்வளவுதான் சொல்லறது. அதனால இந்த மாதிரி எழுத்துப் பிழைகள் இருக்கும் பதிவுகளை இப்போ எல்லாம் புறக்கணிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப தெரிஞ்ச நண்பர்களா இருந்தால் மட்டும் சுட்டிக் காட்டறது.

பஞ்ச் அண்ணா:
அதாவது உங்களுக்கு பின்னூட்டம் போடாத பதிவர்கள் பக்கம் போறதில்லைன்னு சிம்பிளா முடிவெடுத்துட்டு, அதுக்கு காரணமா சந்திப்பிழை, மரியாதை இல்லை ன்னு தேடித்தேடி சொல்றா மாதிரி இல்ல இருக்கு!


கடைசியா நானும் யாரையாவது கேள்வி கேட்கணுமாமே. பதிவர்களில் பாதி பேர் கேள்வி பதில் எழுதும் பொழுது நாம யாரைன்னு போய் கேட்கன்னு யோசிச்சேன். பதிவு எழுதறவங்களை விட்டுட்டு பதிவே இல்லாதவரைக் கேட்டா என்னான்னு நினைக்கும் போது முதலில் நம்ம நினைவுக்கு வந்தது ஸ்ரீதர் வெங்கட்தான். ஸ்ரீதரே, நம்ம கேள்விக்கு பதிலை எல்லாம் எழுதி மின்னஞ்சல் பண்ணுங்க. நானே பதிவாப் போடறேன். இல்லை இதையே சாக்கா வெச்சு நீங்க பதிவு போடத் தொடங்கினாலும் சரிதான். உங்களுக்கான கேள்விகள்

  1. பதிவுலகில் தொடர்ந்து இயங்கும் நீங்க, பல பதிவர்களை விட பின்னூட்டங்களில் பட்டையைக் கிளப்பும் நீங்க ஏன் இதுவரை பதிவு தொடங்கலை?
  2. பதிவுகள் எழுதும் நாங்களெல்லாம் வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்வது போல நீங்கள் படித்துப் பின்னூட்டமிடுவதற்காகவே வாங்கிக் கட்டிக் கொள்வது உண்டா?
  3. அடிப்படையில் ரஜினி ரசிகராக அறியப்படும் நீங்கள் தசாவதாரத்திற்கு கமலே நினைக்காத கோணங்களில் பின்னூட்டங்கள் போட்டு ஆதரவு திரட்டுவதின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன? (நான் ரஜினி ரசிகன் என்று யார் சொன்னது போன்ற மொக்கை பதில்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது)
  4. காலப் பயணம் செய்ய முடிந்து உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு சம்பவத்தை மாற்ற முடியும் என்ற சக்தி கிடைத்தால் எதனை மாற்றுவீர்கள்? எவ்வாறு மாற்றுவீர்கள்?

Friday, June 13, 2008

Kamal, I spent $34.50 (plus extras) on you!

முன்னுரை
நாங்க தசாவதாரம் பார்த்தாச்சு. வீட்டில் இருந்து ஒரு 5 நிமிஷம் தள்ளி இருக்கும் திரையரங்கில்தான் போட்டு இருக்காங்க. வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்க தாத்தா பாட்டி இருந்ததால் நானும் தங்கமணியும் முநாமுகா (அதாங்க முதல்நாள் முதல்காட்சி) பார்க்க போயிட்டோம். உள்ளூர் விலையைக் கொஞ்சம் ஏத்திட்டாங்க. அதுவும் இணையத்தில் வாங்கியதற்காக $2.50 வேற தனியா வாங்கிக்கிட்டாங்க. அலுவலகத்தில் இருந்து நேராப் படம் பார்க்கப் போன இந்த யானையின் பசிக்கு வாங்கின சோளப்பொரி எல்லாம் சாய்ஸில் விட்டுடலாம். ஆனாலும் வடை என்ற பெயரில் தந்த வஸ்துவிற்கும் சமோசாவிற்கும் விலை ரொம்பவே அதிகம் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

நிறைகள்
எல்லாரும் எழுதிட்டாங்க. படம் நல்லா இருக்கு. ஒளிப்பதிவு உலகத்தரம். வரைகலை நல்லா இருக்கு. முக்கியமா முதலிலும் முடிவிலும். ஒவ்வொரு காட்சியிலும் கமல் மற்றும் மற்ற கலைஞர்களின் உழைப்பு தெரியுது. முக்கியமா மேக்கப்பில் எடுத்து இருக்கும் கவனம். அந்தப் பாட்டியின் கைகளில் என் பாட்டியின் கைகளில் இருப்பது போல சுருங்கிய தோலும் அதில் கரும்புள்ளிகளும் இருப்பதைப் பார்த்தீர்களா? இன்று நகைச்சுவை என்ற பெயரில் வழங்கப்படும் கடுப்பேற்றும் விஷயம் கிடையாது. இரட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. விரலைச் சுத்திக்கிட்டுச் சின்ன பசங்க எல்லாம் பேசும் பஞ்ச் வசனம் கிடையாது. குத்தாட்டம் கிடையாது. கனவில் ரீச்சர் வீட்டுக்குப் பின்னாடி போய் ஆடுவது எல்லாம் கிடையாது. வசனங்களில் இழைந்தோடும் நுட்பமான நகைச்சுவை.

எனக்குப் பிடிச்ச கமல் நம்ம பல்ராம் நாயுடுதான். மனுசன் பட்டையைக் கலக்கறாரு. எல்லாரும் இதைப் பத்தி எழுதறாங்க. அதனால இது போதும்.

குறைகள்
இது பத்தியும் நிறையா பேர் எழுதியாச்சு. ஆனா நான் நிறைகளை எழுதிட்டுக் குறைகளை எழுதலைனா என் நடுநிலமைவியாதி சரியாப் போச்சு அப்படின்னு மத்தவங்க நினைப்பாங்களே. அதுக்காக நானும் சொல்லறேன்.

மைக்கேல் மதன காமராஜனாகட்டும், அவ்வை ஷண்முகியாகட்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களில் கமல் நடிக்க ஒரு காரணம் இருந்தது. அப்படி ஒரு காரணம் இல்லாது போனது ஒரு பெருங்குறையே. அதனால் எதற்காக இத்தனை பாத்திரங்களை இவர் செய்ய வேண்டும் என்பது புரியவே இல்லை.

அதிலும் அந்த வெள்ளைக்கார வில்லன் (கொஞ்சம் ஷேன் வார்ன் மாதிரி இல்ல?), புஷ், கலங்கரைவிளக்க முஸ்லீம், ஜப்பானில் கல்யாணராமன் எல்லாம் முகமூடி போட்டுக்கிட்டு அசிங்கமாவே இருக்காங்க. (பூவராகவனை இந்த லிஸ்டில் சேர்க்கலைப்பா!)

இப்படி இவரே இவ்வளவு வேஷம் கட்டினதுனாலதான் கேப்டன் மாதிரி துப்பாக்கியால கேன்சர் ஆப்பரேஷன் பண்ண வேண்டிய துரதிருஷ்டங்கள் எல்லாம். என்னவெல்லாமோ குறை எல்லாம் கண்டுபிடிச்சவங்க கண்ணில் இது படாம போச்சா இல்லை மத்த படங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிப் போச்சா? வேற யாருமே எழுதலையே.

மொத்தத்தில் 10 கமலில் ஐந்து ஆறு பாத்திரங்களாவது அனாவசிய திணிப்பு. அதுவும் அந்த பூவராகவன் / அவதார் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே திணிப்புதான்.

நுண்ணரசியல்கள்

  • AASCAR நிறுவனம் பற்றிய தலைப்பு வரும் பொழுது அதில் வரும் சிறுவனின் சட்டையில் Captain என்று எழுதி இருப்பது.
  • அவனவன் பத்தி பத்தியாய், பக்கம் பக்கமாய் பதிவு எழுதி சிதம்பரம் சர்ச்சையில் தன் சார்பு நிலையை விளக்க முயல்கையில் "Chee Tam Brahm" எனச் சொல்லி தன் கருத்தைப் பதிவு செய்தது
  • தன் தாலி வீசி முட்டிச் செத்த அதே சிங்கத்தலையில் இக்கால அசினை முட்டிக்கொள்ள வைத்து அதன் மூலம் பெண்களுக்கு முட்டிக் கொள்வதுதான் வழி என ஈயம் பித்தளை இளிக்க வைத்தது.
  • இன்னும் இருந்தாலும் நிறுத்திக்கறேம்பா.
சபாஷ்
ஒரு கமல் இருந்தாலே திரையில் மத்தவங்களுக்கு இடம் இருக்காது. இங்க தசாவதாரம். அதுவும் போக நாகேஷ் முதற்கொண்டு பல ஜாம்பவான்கள். இத்தனை பேருக்கும் நடுவே தனக்கென இடம் பிடித்திருக்கும் எம். எஸ். பாஸ்கருக்கு.

முடிவுரை
சமகால படங்களோடு சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது பல கட்டங்களில் தமிழ்த்திரைப்படங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றிருக்கிறது இப்படம் என்பதில் சிலரைத் தவிர மற்றவர்களுக்குச் சந்தேகம் இல்லை என்கின்ற பொழுதில்... எப்படித்தான் இப்படி எல்லாம் எழுதறாங்களோ!! படம் நல்லாத்தான் இருக்கு. சில குறைகளை பெரிதாக எண்ணாமல், படத்தை சமுதாய அவலங்களுக்கு விடை தரும் சாதனமாக எல்லாம் எண்ணாமல் பொழுதுபோக்கா பாருங்க. நல்லாவே இருக்கு.

என்னளவில் கமல் இப்படி எல்லாம் ஒரு படம் பண்ணினால் அதனை அடுத்து ஒரு நகைச்சுவை படம் குடுப்பாரு. அதனை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்.

பஞ்ச் அண்ணா
பதிவை எழுதிட்டுப் பஞ்ச் அண்ணா கிட்ட அனுப்பினேன். அவர் சொன்னது

இந்தப்படத்தில் நுண்ணரசியல் மொழியின் மௌனங்களை க் கட்டமைக்கும் காட்சிகள் மெல்லியல் பார்வையற்று இருந்தாலும் வல்லியல் பார்வையோடு அழகியலும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன. "சவுஞ்சாலயமும் ஒரு ஆலயம்தானே என்னும் நாயகன், அறிவாலயத்தையும் சேர்த்தே சாடல் பார்வை வீசுகிறான் என்பது நுண்ணிய நோக்கர்களின் பார்வைக்குத் தப்பாது. இப்படிப்பட்ட காட்சிவன்முறைகளின் ஊடே, ஆதங்க்வாதி என்று தேவபாடை பேசுபவர்களின் தீவிரவாதத்தையும் தோலுரித்துக்காட்டத் தவறவில்லை. மோடி வகையறாக்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? கடலில் பள்ளிகொண்ட கோவிந்தராஜப்பெருமாள் கரையொதுங்கக் கொண்டு வந்த சுனாமி சர்ப் எக்ஸல் கரை போல நல்லது எனக்காட்ட கிருமிகளையும் அதையொழிக்க சோடியம் குளோரைடையும் சேர்த்தே கொண்டு வருவதன் பின்னால் உள்ள நோய்க்குறிகளையும் புறந்தள்ளிவிடலாகாது.

டிஸ்கி (நீ போடாம விட்டதால) : இதையெல்லாம் எழுதின பிறகு படிச்சுப்பாத்தா எனக்கே பைத்தியக்காரத்தனமாத்தான் தெரியுது.. இருந்தாலும் இந்த நுண்ணரசியல் எல்லாம் நாம பீராயாட்டி வேற யாரு செய்வாங்க?

Saturday, June 07, 2008

மீண்டும் சிவாஜி வாயிலே ஜிலேபி!

நம்ம வெண்பா வாத்தி ஜீவா இருக்காரே. எதையாவது ஆரம்பிச்சு வைக்கிறதுல வல்லவருப்பா. வெண்பாப் பதிவு ஆரம்பிச்சாரு. அப்புறம் என்னமோ ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமானம் அப்படின்னு படம் பிடிக்கப் போயிட்டாரு. இப்போ அதையெல்லாம் தாண்டி கதை எழுதச் சொல்லி அழைப்பு விட்டு இருக்காரு.

"சிவாஜி வாயிலே ஜிலேபி" - இதுதாங்க தலைப்பு. இந்தத் தலைப்பில் அவர் எழுதி இருக்கும் ஒரு கதையைப் போட்டு இதே மாதிரி நீயும் எழுதுடா ராஜான்னு நம்மளைக் கூப்பிட்டு இருக்காரு. அவர் ஒரு மீள் பதிவு போட்டு அதே மாதிரி எழுதச் சொன்ன காரணத்தினாலும், ஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு ஒண்ணு போட்டு இருக்கும் காரணத்தினாலும், இப்போ இருக்கும் ஆணி புடுங்கல்ஸில் இதுதான் முடியும் என்ற காரணத்தினாலும் நானும் ஒரு மீள்பதிவு செஞ்சுக்கறேன்.

நிறையா படங்கள் இருக்கும் பதிவானதுனால அதை எல்லாம் எடுத்து இங்க போடுவதுக்குப் பதிலா அந்தப் பதிவின் சுட்டியைத் தரேன். சங்கடப்படாமல் ஒரு சொடுக்கு சொடுக்கி அங்க போய் ஒரு பார்வை பார்த்திட்டு வந்திடுங்கப்பா.



இன்னிக்கு நம்ம வலையுலகில் பேசப்படும் ஒரு விஷயம் டிப்ஸ் (இதுக்குத் தமிழில் என்ன?) டிப்ஸ் தருவது தப்புன்னு ஒரு பக்கமும் குடுக்காமல் போனால்தான் தப்பு என்று பேசாமல் அப்போ அவனுக்குக் குடுத்தா சரியா என்று மறு பக்கமும் பேசப்படுவதை எல்லாரும் படித்து இருப்பீர்கள். டிப்ஸ் குடுக்க மாட்டேன் எனச் சொன்னால் முத்திரை குத்தப்படும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் மேலே சொன்ன பதிவோடு இதோ என் டிப்ஸ்!

என்ன இதுவும் மீள்பதிவுதான். நம்ம பாபா வந்து ஒரு சமயம் ஆறு வார்த்தைகளில் கதை எழுதுவது பத்தி ஒரு பதிவு போட்டு இருந்தாரு. அந்த சமயத்தில்தான் நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை வைப்பது பத்தி எல்லாம் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதையொட்டி நான் எழுதியது

முடிந்தது போராட்டம். இனி சிவாஜி தலையிலும் எச்சம்!

கடைசியா இந்த மாதிரி தொடர் விளையாட்டுக்களின் பாரம்பரியத்தின் படி நாமும் மூணு பேரைக் கூப்பிட்டு யான் பெற்ற இன்பம் பெறுவீரே நீர் மூவரும் அப்படின்னு சொல்லணுமாம். அந்த முறையில் நான் அழைக்கும் மூவர்
  1. பெனாத்தல் சுரேஷ் (எழுத மேட்டர் கிடைக்காமல் சங்கடப்படுவது போல் தெரிவதால்)
  2. சென்னைக் கச்சேரி தேவ் (செயல் படாத தலைவர் என்ற அவப்பெயரைத் துடைத்தெறிய ஒரு வாய்ப்பு)
  3. வல்லிம்மா (அப்பாடா 33.33 சதவிகிதம் குடுத்தாச்சு!)

ஐயாமார்களே, அம்மாமார்களே! நீங்களும் சிவாஜி வாயிலே ஜிலேபி என்ற தலைப்பில் கதை / உவ்வேக் / கட்டுரை என்று எதாவது எழுதித் தொலைத்து மேலும் மூவரையும் அழைத்து அவர்களிடம் திட்டு வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

டிஸ்கி 1 (இது போடாம எப்படி?): மேல சிவப்பில் இருக்கும் உவ்வேக்கிற்கு பொருள் தெரியாமல் நீங்களா எதாவது எடுபட்டவை, விடுபட்டவைன்னு எதையாவது எழுத ஆரம்பிக்காம என்கிட்ட கேளுங்க. விஷயம் என்னான்னு சொல்லறேன்.

டிஸ்கி 2: தசாவதாரம் வெளிவரும் இந்த சமயத்தில் சிவாஜியை மறு வெளியீடு செய்யும் வெண்பா வாத்தியின் நுண்ணரசியலைக் கண்டு நான் பிரமித்து நிற்கிறேன். ஆனால் நட்பின் அடிப்படையில் அவருடைய சதி வேலைக்கு உடன்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால்தான் இந்தப் பதிவு. இதனால் வரும் எல்லா வினைகளும் அவருக்கே!