Sunday, September 28, 2008

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - செப்டம்பர் 2008

போன தடவை சீக்கிரமாவே விடைகளை வெளியிட்டு விட்டேன். ஒரு வாரயிறுதியில் உட்கார்ந்து போடக் கூட வாய்ப்பில்லை என்று எல்லாம் மக்கள் ரொம்பவே திட்டினாங்க. அதனால இந்த முறை மொத்தமா பத்து நாட்கள் அவகாசம் தந்தாச்சு. அதுக்கு அப்புறமும் கீதாம்மாவுக்காக இன்னும் நாலு நாள் கூடுதலா அவகாசம் தந்தாச்சு. செஞ்சதுக்கு ஏத்த மாதிரி போன தடவை கலந்துக்கிட்டவங்களை விட இந்த முறை கலந்துக்கிட்டவங்க எண்ணிக்கை அதிகம். நுகர்வோர் சொல்வதை நினைவில் நிறுத்துங்கள் என்ற பாடத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

சென்ற முறை நான்கு பேர்கள் எல்லா விடைகளையும் சரியாகச் சொல்லி இருந்தார்கள். இந்த முறை இந்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்திருக்கிறது. சரியான விடைகளைச் சொன்ன பெனாத்தல் சுரேஷ், அரசு, வடகரை வேலன், வெட்டிப்பயல், கௌசிகன், யோசிப்பவர், பாலராஜன் கீதா, திவா ஆகிய எட்டு பேருக்கும் என் வாழ்த்துகள்! மதிப்பெண்கள் இந்த பக்கத்தில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. புதிரைப் பார்க்கவில்லையே எனச் சொல்பவர்கள் இங்கே போய்விட்டு வரவும்.

இனி விடைகள்.



இடமிருந்து வலம்

3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3)
பழநி
- படமும் தொடங்கி என்பதில் இருந்து ப, நிழலும் தொடங்கி என்பதில் இருந்து நிழ என்ற மூன்று எழுத்துக்களைச் சேர்த்தால் பழநி வரும். கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது பழநியிலே என்ற பாடல் பலருக்கும் தெரிந்திருக்கலாம். அது குறிப்பின் இரண்டாம் பாகம்.

5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5)
நிலைக்காத
- ஸ்வரங்கள் என்றால் சரிகமபதநி இவைகளில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களோ வரும் என்பதற்கான குறிப்பு. இங்கு ’காதலைக்’ என்னும் சொல்லோடு ’நி’ என்ற ஸ்வரத்தைச் சேர்த்தோமானால் நிலைக்காத என்ற சொல்லின் எல்லா எழுத்துக்களும் கிடைக்கும். உறுதியில்லாத என்ற குறிப்பின் பகுதி நிலைக்காத என்பதற்கான நேர் பொருளைத் தரும்.

6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2)
லாடு
- ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் என்ற உடன் பலருக்கும் நினைவில் தோசைதான் வந்திருக்கும். ஆனால் பொருத்தமாக இல்லையே என யோசித்திருப்பார்கள். லாடு என்பது லட்டுவைப் போன்று உருண்டை வடிவம், தித்திப்புச் சுவை கொண்ட ஒரு உணவுப் பொருள். தணலாடும் என்ற சொல்லின் உள்ளேயே விடை இருக்கிறது என்பதை உணர்த்ததான் பார்க்கலாம் என்ற சொல் இருக்கிறது. பலரும் லாடு என்றால் என்ன என கேட்டார்கள் என்பது எனக்கு ஆச்சரியமே.

7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3)
சுயம்
- தானாய் வந்தது சுயம்பு. அது முடியாமல் போனதால் சுயம். தான் எனப் பொருள் உண்டு என்பதால் தன்னை அறிந்து கொள் என பொருள் வருமாறு குறிப்பைத் தந்திருந்தேன்.

8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2)
கறவை மாடு
- பால் தரன்னு சொன்ன உடனேயே கறவை மாடுன்னு நிறையா பேர் சொல்லிட்டாங்க. ஆனா குறிப்பின் மற்ற பகுதி கொஞ்சம் குழப்பமாவே இருக்குன்னும் சொல்லிட்டாங்க. அது எப்படின்னா கசப்புக்கு கடு என்ற ஒரு சொல் இருக்கிறது. கடு மாற வை என்ற எழுத்துக்களைச் சரியாகப் போட்டால் கறவை மாடு வரும். மாற வை என்ற எழுத்துக்களே, விடை மாற்றிப் போடும் போது வரும் எனக் குறிக்கவும் செய்கின்றன.

11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5)
அலைமகள்
- ரொம்ப எளிமையான குறிப்புன்னு நினைச்சேன். ஆனா நிறையா பேரு கஷ்டப்பட்டாங்க. திரை கடலோடியும் திரவியம் தேடுன்னு படிச்சது மறந்து போச்சு போல. திரைன்னா அலை. அலைகள் என்ற சொல்லின் இருக்கும் எழுத்துகள் விலகி ம (மங்கலம் தொடங்கி) என்ற எழுத்து சேர்கையில் இலக்குமி என்ற அலைமகள் வருவாள் என்பது குறிப்பு. இதில் மலைமகள் கலை மகள் எல்லாம் போட்டவங்க அலைமகளுக்குக் கஷ்டப்பட்டாங்க. எந்த விடை போட்டாலும் குறிப்பின் இரு பகுதிகளுக்கும் சரியா வருதான்னு பார்க்கணும். வந்தால்தான் சரியான விடை.

12. வெட்டித் திட்டு, துணியும் கிட்டும் (3)
அறுவை
- கிட்டத்தட்ட எல்லாரும் மாட்டின குறிப்பு இதுதான். வெட்டி = அறு. திட்டி = வை (திட்டுதல் = வைதல்). இது ரெண்டும் சேர்ந்தா அறுவை. ஆனா அது என்ன துணி? அறுவை என்றால் துணி எனப் பொருள். தெரியுமா?! நம்ம அகராதி என்ன சொல்லுது பாருங்க.

அறுவை (p. 43) [ aṟuvai ] , s. cloth, garment, 2. the 14th lunar mansion.

அறுவையர், weavers, cloth dealers
இந்த மாதிரி ஒரளவு விடை தெரிஞ்சா மாதிரி இருந்தா அகராதியில் போய் பார்த்தால் நமக்குத் தெரியாத பொருள் இருப்பது புரியும். நான் பயன் படுத்தும் அகராதி இது.

14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2)
சகா
- அருமையான நண்பன் அப்படின்னு வந்த உடனே சகா அப்படின்னு சொல்லிட்டங்க. ஆகாச என்னும் வார்த்தையில் ஆ(பசு) என்ற மிருகம் போக சகா மிஞ்சுது. அது என்ன புளுகன் எனக் கேட்டவங்களுக்கு, ஒண்ணும் விசேஷமில்லை. ஆகாசப் புளுகன் அருமை நண்பன் என எழுத கவுஜ மாதிரி இருந்தது.

16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5)
கஸ்தூரிபா
- எனக்கு ரொம்ப பிடிச்ச குறிப்பு இது. மஞ்சள் என்ற உடன் கஸ்தூரி மஞ்சள் நினைவுக்கு வரும். மரபுக்கவிதை என்றால் ‘பா’. ஆக கஸ்தூரிபா - காந்தியின் மனைவி. கஸ்தூர்பா என ஹிந்திக்காரன் போல் எழுதிய கைப்ஸுக்கும் மதிப்பெண் குடுத்தாச்சு. மின்னரட்டையில் மஞ்சள் என்ற உடன் தோணுவது மஞ்சள் பத்திரிகை என்ற நண்பருக்கு - நல்லா இருடே!

17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3)
துகள்
- வாழ்த்துகள் உள்ளவே துகள் இருக்கே. பொடிப்பொடியா ஆனாத் துகள்தானே.

மேலிருந்து கீழ்

1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2)
அநியாய விலை
- குறிப்பின் முதல் பகுதி ஒரு சொலவாடை. அநியாய விலை வைப்பதைப் பற்றி இப்படிச் சொல்வார்கள். ரேஷன் கடையைத் தமிழில் நியாய விலைக் கடை எனச் சொல்கிறோமே. அங்கு அநியாய விலை இருக்காதே.

2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி (3)
பாக்கு
- தாம்பூலத்தின் ஒரு பகுதி, தலைப்பாக்குள்ளே இருக்கு. மீண்டும் பாரு என்பது விடை உள்ளேயே இருப்பதைக் குறிக்கிறது.

3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5)
பதற்றம்
- தடுமாற்றம் என்பது பதற்றத்தைக் குறிப்பது. சுற்றத்தின் தலை போனதால் ற்றம் என்னும் எழுத்துக்களும் அதனோடு பத என்ற இரு ஸ்வரங்கள் சேர்ந்தால் பதற்றம் வருகிறது.

4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா? (2)
நிலா
- சிவனின் தலையில் நிலா இருக்கும் நிழலா என்ற சொல்லின் இடையில் இருக்கும் எழுத்து போனால் நிலா வரும்.

9. ஒரு இடத்துக்கு நேராப் போகலாம், வேறு கவிதை பாடிக்கொண்டு ஒரு மாதம் இதிலும் போகலாம் (6)
மாற்றுப்பாதை
- ஒரு இடத்துக்கு நேராகவும் போகலாம் இதிலும் போகலாம் என குறிப்பை எடுத்துக் கொண்டால் விடை எளிதாகத் தெரியும். நடுவில் இருப்பது வேறு கவிதை, அதாவது மாற்றுப்பா மற்றும் ஒரு மாதம் - தை!

10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5)
நகங்கள்
- வகைகளுக்கு வேறு சொல் தேடினால் ரகங்கள் என்ற சொல் கிடைக்கும். இதன் முதல் சொல்லை மாற்றினோமானால் ஆத்திரத்தில் கடித்துத் துப்பும் நகங்கள் வரும்.

13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3)
ஸ்தூபி
- இது ஒரு நேரடி குறிப்பு. இதுக்கு க்ரிப்டிக் முறையில் குறிப்பு ஒண்ணும் சரியா அமையலை. அதனால நேரடிக் குறிப்பாகவே குடுத்துட்டேன். இது போல ஒன்றிரண்டு குறிப்புகள் வரலாம்.

15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2)
காது
- காதே சொல்லுவது போன்ற குறிப்பு இது. அதில் காது என்பதும் இருக்கிறது என்பது மேற்குறிப்பு.

இந்த மாதப் புதிர் எப்படி இருந்தது. இன்னும் அதிகம் பேரைச் சென்றடைய என்ன செய்யலாம் அப்படின்னு உங்க கருத்தைப் பின்னூட்டமாச் சொல்லுங்க. இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம்.

மீண்டும் அனைவருக்கும் நன்றி!

Thursday, September 25, 2008

பதிவுலக வாசனைகள் - ஜென் குருவின் பொன்மொழிகள்!

அதாகப்பட்டது என்னான்னா வலைப்பதியும் பொதுஜனங்களே, நாம எல்லாம் இப்போ வாழ்ந்துக்கிட்டு இருக்கும் இந்த கலியுகத்திலே நம்மோட துக்கங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்துக்க, நம்மை ஒரு ஜென் குருவாக வழிநடத்த, பெருங்கருணையோடு அவதரித்து வந்திருக்கும் நோபிளஸ்ட் ரைட்டர் அவர்கள் இன்னிக்கு தந்தருளியிருக்கும் உபதேசம் என்னான்னா எல்லா எழுத்துக்கும் வாசனை உண்டு. அது அவரோட பருப்பான, சாரி பொறுப்பான எழுத்தா இருக்கட்டும், நீங்க எழுதும் பொறுப்பற்ற எழுத்தா இருக்கட்டும் எல்லாத்துக்கும் வாசனை இருக்கு. அவர் மேலும் சொல்லி இருக்கிறது என்னான்னா

//பொதுவாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். என் நண்பர் சீனிவாசன் வேறு மாதிரி சொல்லுகிறார்: அதாவது, ”டாஸ்மாக் கடையில் ஓல்ட் மாங்க் அடித்து விட்டு ரோட்டில் நின்று கொண்டு வாய் கிழிய அரசியல் பேசுவார்களே, அந்த மாதிரி ஆட்கள் இந்த ப்ளாக்குகளில் எழுதுபவர்கள்...”

சீனிவாசன் சொல்வதில் எனக்குத் துளிக்கூட உடன்பாடு இல்லை. டாஸ்மாக்கில் குடிப்பவர்களாவது தங்கள் சொந்தப் பணத்தில் குடிக்கிறார்கள். பிளாக்கில் எழுதுபவர்கள் ஓசியில் ....பவர்கள். பிளாக்கை மட்டுமே படிப்பவர்கள் சீக்கிரம் மெண்டல் ஆவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சில பிளாக்குகளின் பின்னூட்டம் என்ற பகுதியைப் படித்தாலே அது உங்களுக்குப் புரிந்து போகும். பல ப்ளாக்குகள் தமிழ்நாட்டின் பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் பொது கக்கூஸ்களைப் போல் நாறுகின்றன.

நான் எல்லா ப்ளாக்குகளையும் கூறவில்லை. நல்ல ப்ளாக்குகளும் உள்ளன. அவைகளைப் பற்றி அவ்வப்போது நான் அறிமுகப்படுத்தி வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.//

இன்னிக்கு எனக்கு கொஞ்சம் ஜல்ப்பாக இருப்பதால் எனக்கு என்னோட பதிவின் வாசனை எனக்குத் தெரியலை. இங்க வந்து படிக்கும் நீங்க என்ன வாசனை அடிக்குதுன்னு சொன்னாப் புண்ணியமாப் போகும். அதோட நீங்க எல்லாரும் அவங்க அவங்க வலைப்பதிவுகளைத் திறந்து ஒரு முறை நல்லா மூச்சை இழுத்து மோந்து பார்த்து என்ன வாசனை வருது என்பதை இங்க பின்னூட்டமாப் போடுங்கப்பா.

அப்படியே கீழ்கண்ட இந்தப் பதிவுகளையும் படிச்சு என்ன வாசனை வருதுன்னு சொல்லுங்க. இவைகள் ஜென் குரு நோபிளஸ்ட் எழுதினது அல்லது அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் எழுதினது.

  1. ஜென் குரு கதை சாம்பிள் 1
  2. ஜென் குரு கதை சாம்பிள் 2
  3. ஜென் குரு கதை சாம்பிள் 3 (ஆனா இதோட ஒரிஜினல் தொலைஞ்சு போச்சு அதனால வெறும் மறுபதிப்புதான்.)
  4. ஜென் சிஷ்யன் கதை 1
  5. ஜென் சிஷயன் கதை 2
  6. இன்னும் ஒரு சுட்டியைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். வழக்கம் போல மூல நூல் காணாமல் போய்விட்டதா எனத் தெரியவில்லை. கிடைத்தால் தருகிறேன்.
  7. தேர்ட் டிகிரி, தேர்ட்டித் தேர்ட் டிகிரிங்கிற ரேஞ்சில் ஒரு காவியம் வேற இருக்காம். அதை நான் நல்ல வேளையா படிக்கலை. அதில் என்ன வாசம் அடிக்குதோ படிச்சவங்க சொல்லுங்கப்பா.

டிஸ்கி 1: கடைசியாகத் தந்திருக்கும் சுட்டிகளைச் சொடுக்கி வந்த வாசனையால் நீங்கள் மூர்ச்சையடைந்து விழுந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

டிஸ்கி 2: காலை வேளையில் இந்த நோபிளஸ்ட் அருளுரையின் சுட்டியைக் கொடுத்து இன்றைய தினத்தைக் கெடுத்த, நண்பன் எனச் சொல்லிக்கொண்டே கழுத்தறுக்கும் பாவியை கடவுள் ரட்சிப்பாராக.

டிஸ்கி 3: காசு குடித்துக் குடிப்பதைப் பற்றிக் கருத்துச் சொல்ல அடிப்படைத் தகுதி என்ன எனக் கேட்டால் நீர் இணையக் கிரிமினல் என்ற பட்டம் பெறுவீர் என்பதை நினைவில் கொள்வீராக.

Sunday, September 21, 2008

ஆர்வக்கோளாறும் பொறுப்பற்ற பதிவர்களும் !

இன்று தெருமுனைகளில் நிறைய பேர் கிரிக்கெட் ஆடுகிறார்கள். கிரிக்கெட் ஆடுவது என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை கிரிக்கெட் ஆட வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஒரு உழைப்பு தேவைப்படுகிறது. பம்பரம் ஆட வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஒரு ஆக்கர், ரெண்டு ஆக்கர் அடிக்கும் அளவுக்கு ஆட்டம் கைவசப்படும். அதே மாதிரிதான் கோலிகுண்டும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், கிரிக்கெட். அதற்காகக் கோலிகுண்டை சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது கிரிக்கெட். அந்த விளையாட்டில் எடுத்தவுடன் ஒரு பந்து ஒரு மட்டை கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் சுவரில் மூன்று கோடுகள் வரைந்து கிரிக்கெட் ஆடுவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

- கேரள ஓப்பனிங் பாட்ஸ்மென் வனோஜ்

இன்று பாத்ரூமில் நிறைய பேர் பாடுகிறார்கள். பாடுவது என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை பாட வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஒரு உழைப்பு தேவைப்படுகிறது. மேஜையில் தாளம் போட வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் சுமாரான டப்பாங்குத்துப் பாட்டுக்குத் தாளம் போடும் அளவுக்கு தாளம் கைவசப்படும். அதே மாதிரிதான் விசில் அடிப்பதும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், பாட்டு. அதற்காக விசில் அடிப்பதைச் சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது பாட்டு. பாட ஒரு இடம் கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் ஷவரைத் திறந்து விட்டுக் கொண்டு பாடுவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

- ஒரிய மொழிப் பாடகர் காமா சோமா

இன்று கிடைத்த பேப்பரில் எல்லாம் நிறைய பேர் நட்சத்திரம் வரைகிறார்கள். நட்சத்திரம் வரைவது என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை நட்சத்திரம் வரைய வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஒரு உழைப்பு தேவைப்படுகிறது. கோடு போட வேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஒரு வட்டம், ரெண்டு சதுரம் வரையும் அளவுக்கு கோடு கைவசப்படும். அதே மாதிரிதான் அம்புக்குறியும். இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், நட்சத்திரம் வரைதல். அதற்காக அம்புக்குறியை சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது நட்சத்திரம். எடுத்தவுடன் ஒரு பேப்பர் ஒரு பேனா கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் நட்சத்திரம் வரைவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

- கன்னட நட்சத்திர ஓவியர் கேன்

இன்று இணைய தளங்களில் நிறைய பேர் எழுதுகிறார்கள். எழுத்து என்பது Democracy ஆக மாறியிருக்கிறது. அது இப்போது நிறைய பேரை எழுத வைத்திருக்கிறது. இதை ஒரு நோய் என்றே சொல்லத் தோன்றுகிறது. எதற்கும் ஓர் உழைப்பு தேவைப்படுகிறது. ஸ்பானிஷ் மொழியைப் படிக்கவேண்டும் என்றால் இரண்டு வருடக் காலம் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் உழைத்தால்தான் ஷ்பானிஷில் ஒரு பக்கம், இரண்டு பக்கம், நாலு பக்கம் எழுதும் அளவுக்கு மொழி கைவசப்படும். அதே மாதிரிதான் இசையும். பல மணி நேரப் பயிற்சி அதற்குத் தேவை. இதெல்லாம் சாதாரண விஷயங்கள். அசாதாரண விஷயம், மொழி. அதற்காகச் சங்கீதத்தைச் சாதாரணமாகச் சொல்லவில்லை. ஆனால் இதைவிடவும் கடினமானது மொழி. அந்த மொழியில் எடுத்தவுடன் ஒரு இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் கிடைத்துவிட்டது என்பதற்காக கடகடவெனத் தட்டி அதை Blog-ல் போடுவது என்பது ரொம்ப ரொம்ப irresponsible - ஆன விஷயம்.

- தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதா

டிஸ்கி 1: மேற்கண்ட ஸ்டேட்மெண்ட்களில் ஒன்றே ஒன்று மட்டும் நிஜம் என்பது உங்களுக்குப் புரிந்து இருக்கும். அந்த உரையை முழுதாக வாசித்தாக வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்கள் இங்கே போகலாம்.

டிஸ்கி 2: இந்த சந்திப்பில் பங்கெடுத்து ஆனால் இதைப் போன்ற Irresponsible Statements கூறப்பட்ட பொழுது கண்டனங்களைத் தெரிவிக்காத சகபதிவர்களுக்கு என் கண்டனங்கள்.

Sunday, September 14, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - செப்டம்பர் 2008

கொஞ்சம் பயந்துக்கிட்டே போட்ட போன மாத புதிருக்கு அமோகமான வரவேற்பு இருந்ததால இந்த மாதமும் அதைப் போன்ற ஒன்றினையே தரலாம் என நினைத்தேன். வழக்கம் போல வாஞ்சி அவர்களின் ஆலோசனைக்கு நன்றிகள் பல. கேஆர்எஸ் அண்ணாவைத் தொந்தரவு செய்யாமல் நானே இந்த முறை கட்டமும் போட்டுக்கிட்டேன். அதனால, ரவி அண்ணா, நீங்களும் போட்டியில் கலந்துக்கிடலாம்!

இங்க இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். முயன்று பாருங்கள். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். வழக்கம் போல் நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன். அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இந்தப் புதிரின் விடைகள் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். 


1234
56
789
10
1112
13
141516
17

இடமிருந்து வலம்

3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3)
5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5)
6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2)
7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3)
8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2)
11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5)
12. வெட்டித் திட்டு, துணியும் கிட்டும் (3)
14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2)
16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5)
17. அந்தோ! உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3)

மேலிருந்து கீழ்

1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2)
2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி (3)
3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5)
4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா? (2)
9. ஒரு இடத்துக்கு நேராப் போகலாம், வேறு கவிதை பாடிக்கொண்டு ஒரு மாதம் இதிலும் போகலாம் (6)
10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5)
13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3)
15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

Tuesday, September 09, 2008

தோழா கொடுத்திடு தோள் (வெ.வ.வா)

நான் சமீப காலமாக படிக்கத் தொடங்கி இருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் இரா.முருகன். (நன்றி - ஸ்ரீதர் வெங்கட்). சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் அவரும் க்ரேஸி மோகனும் பல விதங்களில் விளையாடும் வெண்பா விளையாட்டைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இப்படி விளையாடி நூற்றுக்கும் மேற்பட்ட வெண்பா இயற்றி இருக்கிறாராம். இது பற்றி அவர் எழுதி இருப்பது. 
 
தினசரி எஸ்.எம்.எஸ்ஸில், தொலைபேசியில் வெண்பாவும், கேள்வி பதிலும், நகைச்சுவையும், ரசித்த இலக்கியமும், புதுக் கவிதையுமாக க்ரேஸி கலகலக்க வைக்காத நாள் இல்லை. அவருக்கு பதில் எழுதவே கிட்டத்தட்ட நூறு வெண்பா நானும் இயற்றி விட்டேன். 

'என்ன, வெண்பா அம்பு விட்டுக்கறீங்களா தினமும் மோகனும் நீங்களும்?' கண்ணில் ஒரு மெல்லிய சிரிப்போடு விசாரிப்பார் கமல் எனக்கு முன்னால் என் வெண்பா க்ரேஸி உபயத்தில் அவரிடம் போய்ச் சேர்ந்திருக்கும்.
 
இது குறித்து நண்பர் சொக்கன் ட்விட்டரில் சொல்லி ரொம்ப சிலாகித்துப் பேச 
 
அன்பன் முருகனும் ஆசைமிகு மோகனும்
வெண்பாவில் விட்டாரே அம்பு
 
அப்படின்னு அவர் சொன்னதையே ஒரு குறள் வெண்பாவா மாத்தி அவருக்கு அனுப்பினேன். நல்லா இருக்கு அப்படின்னு சொன்னவரு உடனே ஒரு ஈற்றடியைக் குடுத்து இதுக்கு எழுது பார்ப்போம் அப்படின்னு உசுப்பேத்தி விட்டாரு. அப்படி அவர் குடுத்த ஈற்றடி -  தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
மண்ணிலே கஷ்டம் மறந்திட நீயுமே 
எண்ணியிங்கு ஏதேனும் செய்திட வேண்டித்தான் 
விண்ணில் பறந்திடும் விந்தை உணர்வுக்குத் 
தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
சொக்கனும் சொன்னாரே சோக்காய் ஒருவேலை 
மக்களை மாட்டிவிட்டு மெண்டலாய் ஆக்கிட 
எண்ணித்தான் தந்தார் எசப்பாட்டாய் ஈற்றடியே - 
தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
எண்ணியே சொன்னார் எசப்பாட்டாய் அண்ணனுமே 
தண்ணி அடிச்சாத்தான் கிக்கு!
 
அப்படின்னு நானும் நாலு (சரி மூணு) வெண்பாக்களை எழுதி ட்விட்டரில் போட்டேன்.  அப்போ ரொம்ப நாள் ஆச்சே வெண்பாப் பதிவு போட்டு அப்படின்னு ஒரு எண்ணம் வந்தது. ஆனா என்னடா ஈற்றடி குடுக்க அப்படின்னு யோசிக்கும் பொழுதுதான் மீண்டும் இரா முருகனே கை குடுத்தார். அவரோட வலைத்தளத்தில் அழகா ஒரு ஆஞ்சநேயர் படம் ஒண்ணு போட்டு அதுக்குப் பக்கத்தில் அப்படத்திற்கு ஏற்ற மாதிரி க்ரேஸி மோகன் எழுதின ஒரு வெண்பாவையும் போட்டு இருந்தாரு. அது


ரொம்ப அருமையா வந்திருக்கு இல்லையா இந்த வெண்பா. ஆனா அவரு அவரோட தகுதிக்கு ஏத்த மாதிரி மனமென்ற ஆழியைத் தாண்ட உதவி கேட்கறாரு. நான் இன்னிக்கு நமக்கு இருக்கும் பிரச்சனைகளைச் சொல்லி அந்த ஆஞ்சநேயரின் உதவியைக் கேட்கலாமேன்னு 
 
மாசு மதச்சண்டை மாறா பிடுங்கல்கள்
லேசும்தான் ஆகுதப்பா சட்டைப்பை காசின்றி 
வாழ வழியில்லை ஆகவே வந்திங்கு
தோழா கொடுத்திடு தோள்.
 
அப்படின்னு ஒரு வெண்பாவை எழுதிப் போட்டேன். நீங்க இங்க இருக்கும் இரண்டு ஈற்றடிகளில் எதுக்கு வேணும்னாலும் எழுதலாம். எழுதிப் பாருங்களேன். வெண்பா எழுத கத்துக்க ஆசைப்படறவங்க இங்கேயும் இங்கேயும்  போய் எப்படி எழுதறதுன்னு பார்த்துக்கலாம்.