Wednesday, December 24, 2008

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - டிசம்பர் 2008

அனைவருக்கும் விடுமுறை வாழ்த்துகள்! இந்த முறை குறுக்கெழுத்துப் புதிர் கொஞ்சம் கடினமாகவே இருக்க வேண்டும் என முனைந்தேன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டேன் என்பது உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும் பொழுதே தெரிந்தது. வழக்கத்தை விட குறைந்த அளவு பங்கேற்பாளர்களால்தான் அனைத்து விடைகளையும் கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் முனைந்திருந்தால் இன்னும் பலரும் முடித்து இருக்கலாம். இந்தப் புதிரின் அனைத்து விடைகளையும் சரியாக அளித்தவர்கள்

  1. பெனாத்தல் சுரேஷ்
  2. ஸ்ரீதர் நாராயணன்
  3. யோசிப்பவர்
  4. அரசு
  5. வடகரை வேலன்
  6. மிஸஸ் யோசிப்பவர்
  7. சின்ன அம்மிணி
  8. திவா
  9. ஏஸ்
  10. மஞ்சுளா ராஜாராமன்
  11. பாச மலர்
அனைவருக்கும் வாழ்த்துகள்! அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?


இடமிருந்து வலம்

3. மிளகாய் அதிகம் எனச் சொல்லும் ஆளுகை (5)
அதிகாரம்
- மிளகாய் அதிகமானால் அதி காரம். ஆளுகை என்றால் அதிகாரம். பங்கேற்றவர்கள் அனைவரும் சரியான பதில் சொன்ன குறிப்பு என்பதால் மேலும் விளக்கம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

6. புகைவண்டியில் ஏற அதன் கீழா செல்ல வேண்டும்? (4)
ரயிலடி
- பெனாத்தல் விடை தமிழ் வார்த்தையா என்று கூட கேட்டுவிட்டார். இருந்தாலும் பரவாயில்லை எனப் போட்ட குறிப்பு இது. ரயில்வே ஸ்டேஷனை ரயிலடி என்றே பலரும் குறிப்பிடுவர். புகைவண்டியின் கீழே என்பதையும் ரயிலடி எனக் குறிப்பிட முடியும் அல்லவா?

7. அவசரக்குடுக்கை பார்த்த பொருள் (4)
சரக்கு
- அவசரக்குடுக்கை என்ற சொல்லின் உள்ளேயே சரக்கு என்ற சொல் இருக்கிறது. அதனைக் குறிப்பிடும் வகையில்தான் பார்த்த என குறிப்பு வருகிறது. சரக்கு என்பதற்கு விளக்கமாய் பொருள் என்பதும் குறிப்பில் தரப்பட்டிருக்கிறது.

8. குதிரையைக் குளிப்பாட்டினால் தூய்மையாகுமே (6)
பரிசுத்தம்
- பலரும் சரியாகப் போட்ட விடைதான். பரி என்றால் குதிரை. குதிரையைக் குளிப்பாட்டினால் அது சுத்தமாகும். ஆக பரிசுத்தம். இதற்கு விளக்கமாக தூய்மை என்பதும் குறிப்பில் வருகிறது.

13. அரிசி வகையைத் தொடங்காமல் உதித்து ஈட்டி வா (6)
சம்பாதித்து
- ஈட்டி என்பதற்கு சம்பாதித்து என்பது பொருள். சம்பா என்பது அரிசி வகை எனவும் தொடங்காமல் உதித்து என்பது தித்து என்ற எழுத்துக்களையும் தருகிறது. அனைவரும் சரியான பதில் சொல்லிய மற்றொரு குறிப்பு இது.

14. யானை மேல் இருக்க தாயே என ஸ்வரத்தோடு அழை (4)
அம்பாரி
- யானையின் மேல் அமரப் பயன்படும் இருக்கையின் பெயர் அம்பாரி. அம்பா என்றால் தாயே எனப் பொருள். பெரும்பாலும் பாடல்களில் வரும். இதனோடு ஏழு ஸ்வரங்களில் ஒன்றான ’ரி’யைச் சேர்த்தால் அம்பாரி என்ற சொல் கிட்டும்.

15. திறந்த முதலோடு மூடு என அடம் பிடித்து இரு (4)
சாதித்து
- சாதிப்பது என்றால் அடம் பிடிப்பது. சாதித்து என்ற சொல்லுக்குப் பொருளாக அடம் பிடித்து என்று குறிப்பு தந்திருக்கிறேன். மூடு என்பதற்கு சாத்து என்று சொல்லுவோம். அதனோடு திறந்த என்ற சொல்லின் முதலான தி என்ற எழுத்தைச் சேர்த்துக் கொண்டால் சாதித்து என்ற சொல் கிடைக்கும்.

16. அனேகமாகப் பார்த்தனை திடுக்கென முடிவில்லாமல் நோக்கிடு (5)
பார்த்திடு
- நோக்கிடு என்றால் பார்த்திடு. அனேகமாகப் பார்த்தனை என்று சொல்லும் பொழுது பார்த்தனை என்ற சொல்லின் பெரும்பாலான எழுத்துக்களைக் கொண்டு என புரிந்து கொள்ள வேண்டும். இங்கு ’பார்த்’ என்ற எழுத்துக்கள் விடையின் முதல் பகுதியாக வருகின்றன. இவற்றோடு திடுக்கென என்ற சொல் முடிவில்லாமல் போக, அதாவது திடு என்ற எழுத்துக்கள் சேர பார்த்திடு என்ற விடை கிடைக்கிறது.

மேலிருந்து கீழ்

1. அப்பா பம்பரத்தின் தலையெடுத்துக் கலைத்த பெருமை (5)
பிரதாபம்
- பெரும்பாலானவர்கள் தவறு செய்த விடை இது. பரம்பரை என்றே பலரும் பதில் சொல்லி இருந்தார்கள். எப்படி என்பது எனக்குப் புரியவில்லை! அப்பா என்றால் பிதா. பம்பரத்தின் தலை எடுத்து என்றால் பம் என்ற எழுத்துக்கள் விலகி பரம் என்ற எழுத்துக்கள் கிடைக்கும். இவற்றைக் கலைத்தால் பெருமை என்ற பொருள் கொண்ட பிரதாபம் என்ற விடை கிடைக்கும்.

2. மாதொர் பாகன் கடிகாரச்சுற்றின் ஈசனா? (5)
வலஞ்சுழி
- கூகிளாண்டவரை வேண்டிக் கேட்டிருந்தால் விடை எளிதாகக் கிடைத்து இருக்கும்.

ஓத மார்கட லின்விட முண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.
என்பது தேவாரம். திருவலஞ்சுழி என்ற ஊரில் இருக்கும் வலஞ்சுழிநாதரைக் குறித்துப் பாடிய பதிகம். Clockwise என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் கடிகாரச்சுற்றுக்குத் தமிழில் வலஞ்சுழி என்று சொல்வார்கள். இந்த குறிப்பிற்கு உதவிய பெனாத்தலாருக்கு ஒரு தனி நன்றி.

4. பெரும்பாலும் வம்சத்தினைக் கலைக்கத் தரும் திதி (4)
திவசம்
- எளிமையான குறிப்புதான். திவசம் என்றால் திதி. வம்சத்தினை என்ற வார்த்தையில் உள்ள பெரும்பான்மையான எழுத்துக்களை (வம்சதி) எடுத்துக் கலைத்தால் திவசம் என்ற விடை கிடைக்கும்.

5. பலதார சிக்கலைப் பார்த்துச் சுவைக்க வேண்டும் (4)
ரசிக்க
- குறிப்பினுள்ளே ரசிக்க என்ற சொல் ஒளிந்து கொண்டிருக்கிறது. சுவைக்க என்றால் ரசிக்க. எளிமையான குறிப்புதான்.

9. மனைவியின் காலொடித்த குணம் (3)
தரம்
- மனைவி என்ற சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல் தாரம். இதில் தா என்ற எழுத்தைக் குறுக்கி த எனச் செய்தால் தரம் என்ற சொல் கிட்டும். இதைத்தான் காலொடித்து எனக் குறிப்பில் தந்திருந்தேன். தரம் என்றால் குணம். இதற்கு விடையைச் சொல்லாமல் எனக்கும் என் தங்கமணிக்கும் சிண்டு முடியப் பார்த்த சின்ன அம்மிணியை என்ன செய்யலாம்? :))

10. அரை தொடங்காமல் குத்திடு அடுத்தவரை தாக்கிடு (5)
பாதித்திடு
- அரை என்றால் பாதி. தொடங்காமல் குத்திடு என்பதில் இருந்து த்திடு என்ற எழுத்துக்கள் கிடைக்கின்றது. இரண்டையும் சேர்த்தால் பாதித்திடு என்ற விடை கிடைக்கும். பாதிப்பு என்றால் தாக்கம் என்பதால் பாதித்திடு என்பது தாக்கிடு என குறிப்பில் உணர்த்தப்பட்டது. ஆனால் அரை தொடங்காமல் என குறிப்பை பலரும் பிரித்து விடை போடமுடியாமல் கஷ்டப்பட்டார்கள்.

11. பயன்படுத்தா ஆடை தீபாவளித் தேவை (5)
புதுத்துணி
- எளிமையான குறிப்புதான். பயன்படுத்தா ஆடை என்பது புதுத்துணி. தீபாவளி பண்டிகைக்கு புதுத்துணியும் பட்டாசும்தானே தேவை. நாங்க எல்லாம் பொங்கலுக்குத்தான் புதுத்துணி எடுக்கறது என்று அரசியல் பேசும் இடம் இது இல்லை! :)

12. இட்லியைக் காதலிப்பதில் மன்னனோ? (4)
சாம்பார்
- இட்லிக்கு சரியான சைட் டிஷ் சாம்பார்தான். காதல் மன்னன் ஜெமினி கணேசனை சாம்பார் என்று சொல்பவர்கள் உண்டு. இது இரண்டையும் சேர்த்துதான் குறிப்பு உருவானது. வாஞ்சி அவர்கள் இதனை சரியாக அமையும்படி செய்தார். அவருக்கு நன்றி.

13. சராசரி பாதிப்பு ரெண்டில் ஒரு பங்கு (4)
சரிபாதி
- சராசரி, பாதிப்பு என்ற இரண்டு சொற்களிலும் ஒரு பங்கு எடுத்துக் கொண்டால் இரண்டில் ஒரு பங்கு என்ற பொருள் வரும் சரிபாதி கிடைக்கும்!


இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

மீண்டும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு புதிய புதிருடன் சந்திக்கும் முன் வரும் மற்ற பதிவுகளையும் மறக்காமல் படியுங்கள்!

Monday, December 15, 2008

புதசெவி - 12/15/2008

எழுதறது சுத்தமா நின்னு போச்சு. மாசத்துக்கு ஒரு குறுக்கெழுத்துப் போட்டுட்டு பேசாமப் போகலாமுன்னுதான் நினைச்சேன். ஆனா உலக நடப்புகள் நம்மை அப்படிச் சும்மா இருக்க விடுதா? எதையாவது செஞ்சு இப்படி புதசெவி பதிவு போட விட்டுடறாங்க. எஞ்சாய்!!

செய்தி 1
நம்ம காரை யாராவது தீ வெச்சுக் கொளுத்தினா நாம போலீஸ் கிட்ட போவோம். நிறையா பணம் இருக்கறவங்க தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாவலர்களை எடுப்பாங்க. இவங்களும் கார்கள் இரண்டு முறை எரிக்கப்பட்டவுடன் இப்படி தனியார் பாதுகாவலர்களை வெச்சுக்கலாமான்னு யோசிக்கறாங்க. ஒரே ஒரு சின்ன வித்தியாசம் இவங்கன்னு நான் இங்க சொல்வது போலீஸ். தனியார் பாதுகாப்பு போலீஸ் ஸ்டேஷனுக்கு! எகொஇச!! இங்க போய் பாருங்க.

பஞ்ச்: இதிலென்ன சுவாரஸ்யத்தைக் கண்டீங்க? நம்ம ஊர்ல போலீஸுக்கு என் எஸ் ஜி பாதுகாப்பு கொடுத்தது இன்னும் ரெண்டு வாரம்கூட ஆகலை.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா? சரி, அந்தத் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துல யாராச்சும் திருடிட்டா எங்க போயி புகார் கொடுப்பாங்க?

செய்தி 2
சினிமாவில் பல முறை பார்த்த காட்சி. பொம்மைத் துப்பாக்கியை எடுத்துவிட்டு நிஜ துப்பாக்கியை வைத்துவிடுவார்கள். யாராவது அதை எடுத்து சுட்டுக் கொண்டு சாவார்கள். அது சினிமாவில் சரி. ஆனால் நாடகத்தில் நடந்தால்? அப்படி நடந்து போச்சே! அட்டைக் கத்திக்குப் பதில் நிஜக் கத்தியை வெச்சு ஒரு நடிகரை மருத்துவமனைக்கே அனுப்பிட்டாங்கய்யா!! இங்க படியுங்க.

பஞ்ச்: இதுவும் நம்ம ஊருக்கு ஓல்டு நியூஸ். மருத்துவமனைக்கு மட்டும்தான் அவங்க அனுப்பினாங்க.. நாம கோட்டைக்கே அனுப்பினோம்! ஆண்டவனே உன் பாதங்களை நான் துப்பாக்கியால் நீராட்டினேன்..

செய்தி 3
மும்பை தாக்குதல் மாதிரி நியூயார்க் நகரில் நடக்கக்கூடாது, அதுவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடும் புதுவருடக் கொண்டாட்டங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக 1000 போலீசருக்கு தானியங்கி துப்பாக்கிகள் இயக்கக் கற்றுத் தருகிறார்களாம். நல்ல விஷயம்தான். ஆனால் பயிற்சி வெறும் மூன்று நாட்களுக்குத்தானாம். அது மட்டுமில்லாமல் தற்பொழுது பணியில் இருப்பவர்களுக்குத் தராமல் இப்பொழுது பயிற்சிக் கல்லூரியில் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சியாம். ஏன் என்றால் அவர்கள்தான் ஒரே இடத்தில் இருக்கிறார்களாம். பயிற்சி தருவது எளிதாம். பணியில் இருப்பவர்கள் வேலை நிமித்தம் பல இடங்களில் இருப்பதால் அவர்களுக்குப் பயிற்சி தருவது கஷ்டமாம். இங்க படியுங்க.

பஞ்ச்: என்ன நீங்க? எல்லாம் எங்களுக்கு பழக்கப்பட்ட நியூஸாவே கொடுக்கறீங்க? வெளியூர்ல வேலையாப் போனவங்க சார்பா எல்லாம் நாங்க சிந்திச்சு, முடிவெடுத்து ஓட்டே போடுவோம். தெரியுமில்ல? அதுபோல இவங்க கத்துகிட்ட பயிற்சியை வேலைலே உள்ளவங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துடுவாங்க போலிருக்கு. சரி.. இன்னும் ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கணும்னா என்ன பண்ணுவாங்க? இவங்களையே மறுபடியும் கூப்பிடுவாங்களா?

செய்தி 4
ஸ்ரீதேவி மூக்கு ஆப்பரேஷன் செஞ்சுக்கிட்டது நமக்கு எல்லாம் நல்லாத் தெரியும். வேறு பலர் என்னென்ன ஆப்பரேஷன் செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னா கிசுகிசு. இவங்களும் அது மாதிரிதான் ஆப்புரேஷன் செஞ்சுக்கறாங்க. என்ன ஒரே ஒரு வித்தியாசம் இவங்களுக்கு ஆப்புரேஷன் உயிர் போனதுக்குப் பின்னாடி. ஆமாம், இறந்த பின் காட்சிக்கு வைக்கப்படும் பொழுது சிக்கென தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக இறந்த உடன் அழகு சிகிச்சை செய்யச் சொல்லி உயில் எழுதி வைக்கிறார்களாம். இங்க படியுங்க.

பஞ்ச்: ஓரினப்புணர்ச்சிக்கு அரசு அங்கீகாரம் தர யோசிக்கற இந்த வேளையில நெக்ரோபிலிக்குங்களுக்கும் அங்கீகாரம் கிடச்சா? அப்ப இறந்தபிறகும் அழகா இருக்கவேண்டியது அவசியமாப் போயிடும் இல்லையா?

செய்தி 5

உலகில் பலவிதமான நோய்கள் இருக்கிறது. சிலது உடல்நிலை சார்ந்தது சில மனநிலை சார்ந்தவை. இவற்றில் சில மரணத்தில் கொண்டு போய் விடுகிறது. குடிப்பழக்கம் கூட இப்படித்தான். அளவுக்கதிகமாக குடித்தால் மரணம் நிச்சயம்தான். என்னடா இப்படி தெரிஞ்ச மேட்டரைச் சொல்லறானேன்னு பார்க்கறீங்களா? இவர் கதையைப் படியுங்க. இவரும் குடிப்பழக்கத்தால்தான் இறந்தார். ஒரே ஒரு வித்தியாசம். இவர் அளவுக்கதிகமாகக் குடித்தது வெறும் தண்ணி. இங்க படியுங்க.

பஞ்ச்: தண்ணியில போதை இல்லையா? விஸ்கியோட தண்ணியக்கலந்து குடிச்சாலும், ரம்மோட தண்ணியக் கலந்து குடிச்சாலும் போதை ஏறுது. அப்ப தண்ணியிலதான போதை இருக்கு? (சரி பழைய ஜோக்தான்..) ஆனால், உலகத்திலேயே ரொம்ப அடிக்டிவ் ஆன பொருள் ஆக்ஸிஜன்னு சொன்னாராம் ஒரு அறிஞர். அதுக்கு அடுத்து தண்ணிதானே பெரிய போதை? வெறும் தண்ணியக் குடிச்சாலும் சாவு வருது.. எனவே க்ளோஸ் த மேட்டர், ஓப்பன் த குவார்ட்டர்!

செய்தி 6
நம்ம ஊர் மேட்டரே சொல்லலையேன்னு வருத்தப்படறவங்களுக்காக இது. பதின்ம வயதில் தலையாய பிரச்சனை என்னன்னு கேட்ட முகத்தில் பரு வருவதுன்னு சொல்லுவாங்க. ஆனா இங்க கல்யாணமான பெண் ஒருவருக்கு அது எவ்வளவு பிரச்சனையா இருக்கு பாருங்க. கல்யாணம் முடித்துத் தேன்நிலவு சென்ற இடத்தில் இவர் முகத்தில் பரு பிரச்சனை வந்ததாம். திரும்பி வந்த கணவன் இதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள் எனச் சொல்லி மனைவியை விவாகரத்து செஞ்சுட்டாராம். முதலில் இந்த வழக்கு சென்ற குடும்ப நல நீதிமன்றம் "repulsive condition of the wife is undoubtedly tragic for the wife but this is traumatic for the spouse" என்றும் இந்நோய் இருப்பதை சொல்லாமல் மறைத்தது தவறே என்றும் தீர்ப்பு அளித்ததாம். நல்ல வேளையா உயர்நீதி மன்றம் இந்த மாதிரி தீர்ப்பில் சொன்னதை நீக்க வேண்டும் எனச் சொல்லி தீர்ப்பு அளித்ததாம். இங்க படியுங்க.

பஞ்ச்: ஆமாமாம்.மறைக்கிறது பெரிய பிரச்சினைதான். ஒரு கம்பெனி இருக்குது, குடும்பக் கம்பெனிதான், ஆனா அதோட வேல்யூவை மறைச்சு, குறைச்சு காட்டி பங்கு பிரிச்சா, வெட்டுகுத்து கொலைக்குத்து ஆவுது. ஆனா மறைக்காம உண்மை பேசினா, இதயம் பனிக்குது, கண்கள் கனக்குது. குடும்பம்னாலே இதெல்லாம் ஜகஜம்தானப்பு! பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி!

Tuesday, December 09, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - டிசம்பர் 2008

இந்த மாதக் கடைசியில் பலருக்கும் விடுமுறை வரும் என்பதால் கொஞ்சம் சீக்கிரமாகவே இந்த மாதப் புதிர் வெளியிடப்படுகிறது. போன முறையும் புதிர் எளிமையாகவே இருப்பதாகவும் குறிப்புகள் எல்லாம் ஒரு டெம்பிளேட் பாணியில் இருப்பதால் விடுவிப்பது எளிதாகவும் இருப்பதாக வந்த பின்னூட்டங்களைத் தொடர்ந்து இந்த முறை புதிரை சற்றே கடினமாகச் செய்து இருக்கிறேன்.

வழக்கம் போல்
  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.
  • இந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best!
  • Guinea Pig பெனாத்தலாருக்கும், ஆலோசகர் வாஞ்சிநாதனுக்கும் என் நன்றிகள்.
இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.



1
2
345
6





7
89




10
11

12
13
14





15
16


இடமிருந்து வலம்

3. மிளகாய் அதிகம் எனச் சொல்லும் ஆளுகை (5)
6. புகைவண்டியில் ஏற அதன் கீழா செல்ல வேண்டும்? (4)
7. அவசரக்குடுக்கை பார்த்த பொருள் (4)
8. குதிரையைக் குளிப்பாட்டினால் தூய்மையாகுமே (6)
13. அரிசி வகையைத் தொடங்காமல் உதித்து ஈட்டி வா (6)
14. யானை மேல் இருக்க தாயே என ஸ்வரத்தோடு அழை (4)
15. திறந்த முதலோடு மூடு என அடம் பிடித்து இரு (4)
16. அனேகமாகப் பார்த்தனை திடுக்கென முடிவில்லாமல் நோக்கிடு (5)

மேலிருந்து கீழ்

1. அப்பா பம்பரத்தின் தலையெடுத்துக் கலைத்த பெருமை (5)
2. மாதொர் பாகன் கடிகாரச்சுற்றின் ஈசனா? (5)
4. பெரும்பாலும் வம்சத்தினைக் கலைக்கத் தரும் திதி (4)
5. பலதார சிக்கலைப் பார்த்துச் சுவைக்க வேண்டும் (4)
9. மனைவியின் காலொடித்த குணம் (3)
10. அரை தொடங்காமல் குத்திடு அடுத்தவரை தாக்கிடு (5)
11. பயன்படுத்தா ஆடை தீபாவளித் தேவை (5)
12. இட்லியைக் காதலிப்பதில் மன்னனோ? (4)
13. சராசரி பாதிப்பு ரெண்டில் ஒரு பங்கு (4)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.

Monday, December 01, 2008

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - நவம்பர் 2008

இந்த முறை கொஞ்சம் உற்சாகம் குறைஞ்சு போன மாதிரி ஒரு எண்ணம் எனக்கு. போன மாதம் பங்குபெற்றவர்களை விட இந்த மாதம் பங்குபெற்றவர்கள் எண்ணிக்கை சிறிதளவே குறைந்து இருந்தாலும் எதோ ஒரு உற்சாகம் இல்லாத மாதிரி எனக்குத் தோன்றியது. பங்குபெற்றவர்கள்தான் நன்றாக இருந்ததா என்பதைச் சொல்ல வேண்டும். போன தடவை பதினாறு பேர் முழுவதும் போட்டாங்க. இந்த முறை 14 பேர்தான். யோசிப்பவர், ஸ்ரீதர் போன்ற புதிர் அபிமானிகள் முடிக்காமல் போனது ஏன் என்று கேட்கவேண்டும். முழுவதும் முடித்தவர்கள் பெயர்கள் கீழே.

  1. பெனாத்தல் சுரேஷ்
  2. நாமக்கல் சிபி
  3. எஸ் பி சுரேஷ்
  4. அரசு
  5. வி ஆர் பாலகிருஷ்ணன்
  6. சகாதேவன்
  7. மஞ்சுளா ராஜாராமன்
  8. பாசமலர்
  9. ச சங்கர்
  10. வடகரை வேலன்
  11. வசுப்ரதா
  12. அனுஷா
  13. திவா
  14. ஏஸ்
அனைவருக்கும் வாழ்த்துகள்! ஒன்றோ இரண்டோ போடமல் விட்டவர்கள் அனேகம். அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?


இடமிருந்து வலம்
4. காலின் காலுடைக்க வரும் பக்குவம் (3)
பதம் - கால் என்பதற்குப் பாதம் என்ற சொல்லை எடுத்துக் கொண்டு அதில் வரும் காலை உடைத்தால் பதம் வரும். பதம் என்பதற்குப் பக்குவம் என்ற பொருள் இருக்கிறதே.

5. குளத்தின் ஓரம் காகம் போல் கத்தும் முன் ஓசை மிகுந்து கொளுத்து(5)

ஏரிக்கரை - கொளுத்து என்றால் எரி. அது ஓசை மிகுந்து வந்தால் ஏரி. காகம் கரையும் என்று படித்து இருக்கிறோமே. ஆக காகம் போல் கத்துவது என்றால் கரை. அதற்கு முன் ஏரி. ஆக ஏரிக்கரை.

7. எண் ஒன்றின் தலைதட்டிக் கிளம்பு (2)

எழு - எழுதல் என்றால் கிளம்புதல். ஏழு என்ற எண்ணின் தலையைத் தட்டினால் எழு.

8. கொள்ளையிட இங்கு கடந்திவர் குழம்புகிறாரே (6)

கவர்ந்திட - கடந்திவர் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை குழப்பிப் போட்டால் கவர்ந்திட என வரும். கவர்ந்திட என்றால் கொள்ளையிட என்பதுதானே பொருள்.

10. பொத்தி துப்பு என்று குழம்புவது பரவலான அறிவு (6)

பொதுப்புத்தி - பொத்தித் துப்பு என்ற சொற்களின் எழுத்துக்களைக் கலைத்தால் பரவலான அறிவு என்ற பொருள்படும் பொதுப்புத்தி என்ற சொல் கிடைக்கும்.

11. பலசாலியின் ஒரு பகுதியை வெட்டிக் கடவுளுக்குக் காணிக்கையாய் கொடு (2)

பலி - பலசாலி என்ற சொல்லின் ஒரு பகுதியான ப மற்றும் லி என்ற எழுத்துக்களை எடுத்தால் காணிக்கை என்ற பொருள்படும் பலி கிடைக்கும்.

12. சிறகிலா துருவம்? சிம்லா சென்ற பின் ________ வரட்டும் என இரு (5)

வருகிறது - குறிப்பு குடுக்கவே கொஞ்சம் கஷ்டப்பட்டேன். வருகிறது என்பதற்கு எப்படி பொருள் தருவது எனத் தெரியவில்லை. அதனால்தான் வருகிறது வரட்டும் என்ற சொற்றொடரைத் தந்துவிட்டேன். அதற்கான குறிப்பு சிறகிலா துருவம் என்ற சொற்களில் சிம்லா என்ற எழுத்துக்களை எடுத்துவிட்டால் வரும் எழுத்துக்களைக் கொண்டு வருகிறது என விடை தரலாம்.

14. இந்த சத்திரத்தில் எத்தனை பேதமை. (3)

மடம் - மடம் என்றால் சத்திரம். அச்சம் மடம் நாணம் என்று சொல்லும் பொழுது பேதமை என்ற பொருள்.


மேலிருந்து கீழ்
1. தமிழுக்கு அகரம் ஆதி அட்சரம் (6)
முதலெழுத்து - தமிழுக்கு அகரம் முதலெழுத்து. ஆதி அட்சரம் என்றால் முதல் எழுத்து.

2. தவறில்லை நோக்கிடு. தப்பில்லாமல் இருக்கிறதா எனச் சோதனை செய் (2,5)

சரி பார்த்திடு - தவறில்லை என்றால் சரி. நோக்கிடு என்றால் பார்த்திடு. சரி பார்த்திடு என்றால் சோதனை செய்.

3. சம்போகத்திற்குச் செல்லப் பார் (2)

போக - பார் என்று குறிப்பில் இருப்பது விடை குறிப்பினுள் இருப்பதையே குறிக்கிறது. செல்ல என்பதற்குப் போக என்றும் சொல்லலாம் இல்லையா. அது சம்போகத்திற்கு என்ற சொல்லினுள் இருக்கிறது.

6. தோழர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் ரத்தத்தில் திண்ணம் (4,3)

சிகப்பு நிறம் - தோழர்கள் என்றால் கம்யூனிஸ்ட்களைக் குறிக்கும் சொல்லாகவும் கொள்ளலாம். அவர்களின் குறியீடு சிகப்பு நிறம். ரத்தத்தில் சிகப்பு நிறம் கட்டாயம் இருக்கும் அல்லவா. சிவப்பு என்பதும் சரியான சொல்லாக இருந்தாலும் கவர்ந்திட என்ற சொல்லோடு இயைந்து வராது போகும். ஆகவே சிகப்பு நிறம் என்பதே சரியான விடை.

9. உறுதியுள்ளே முன்பாதி இசை இருந்தால் உணவு கிட்டுமே (6)

தின்பண்டம் - எனக்கு மிகவும் ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் கொடுத்த விடை இது. மிகப் பலரும் இதனை தின்பண்டம் எனச் சொல்லாமல் திண்பண்டம் என்றே விடை அளித்திருந்தனர். தின்னக்கூடிய பண்டம் தின்பண்டம். கடிக்க முடியாத மைசூர்பாகை வேண்டுமானால் திண்பண்டம் எனச் சொல்லலாம். இத்தனை பேர் இப்படி எழுத்துப்பிழை செய்வது ரொம்பவே வருத்தமான விஷயம்.

உறுதி என்பதற்கு இணையான திடம் என்ற சொல்லின் உள்ளே முன் என்பதின் பாதியான ன் என்ற எழுத்தும் இசைக்கு ஈடாக பண் என்ற சொல்லும் இட்டால் தின்பண்டம் வரும்.

13. சுருதியில் பெரும்பகுதி தருமே அத்தாட்சி (2)

ருசு - சுருதி என்ற மூன்று எழுத்துக்களில் பெரும்பகுதியான சுரு என்ற இரண்டு எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் அத்தாட்சி என்ற பொருள் கொண்ட ருசு என்ற சொல் வரும்.

புதிர் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் பலரும் சொன்னது எளிதாகவே இருந்தது என்று. அடுத்த முறை இன்னும் கடினமாகச் செய்யப் பார்க்கிறேன்.

இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

மீண்டும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு புதிய புதிருடன் சந்திக்கும் முன் வரும் மற்ற பதிவுகளையும் மறக்காமல் படியுங்கள்!