Sunday, April 21, 2013

இத்தாம்ப பெர்ய மன்சன்றது....

ஞாயிற்றுக்கிழமை கார்த்தால. வீட்டுல வேலையா உள்ள இருக்காங்க. இவன் சும்மாத்தானே இருக்கான், எப்படி, சும்-மாத்-தா-னே இருக்கான் அப்படின்னு குழந்தையை இவன் இருக்கிற ரூமில் விட்டுட்டுப் போய் இருக்காங்க. இவன் போனில் பேசிக்கிட்டு இருக்கான். அன்னிக்கு என்ன ஆபீஸ் மேட்டராப் பேசப் போறான், சாயங்காலம் என்ன சினிமாப் போகலாம்ன்னு ப்ளான் பண்ண ஒரு போன். 

இவன் இப்படி போனில் பேசும் போது குழந்தை அழுவுது. இவன் இப்படித் திரும்பி பேசறான் அப்படித் திரும்பிப் பேசறான் ஆனா குழந்தை அழுதுக்கிட்டே இருக்கு. இவனுக்குப் போனையும் விட மனசில்லை. உடனே உள்ள பார்த்து, ஏ இவளே இந்த சனியன் கத்திக்கிட்டே இருக்கு கொஞ்சம் என்னான்னு பாருங்கறான். என்னாது, இந்த சனியன். இப்படித்தான் பொதுவா எல்லாருமே சொல்லறது. 

புலவர் கீரன் கானடாவுல பேசின ஒரு சொற்பொழிவோட ஒலிப்பதிவு கிடைச்சுது. தொடர்ந்து பல நாட்கள் ராமாயணம் பத்திப் பேசறார். கிஷ்கிந்தா காண்டம். அனுமன் ராமனைப் பார்க்கறான். அது பத்தி உணர்ச்சிகரமாப் பேசறார். அனுமன் மனத்தில் ஏற்பட்ட மரியாதை பத்திப்பேசும் பொழுது குரல் கம்முது. குரலை அப்படியே கீழ இறக்கி அது பத்திப் பேசறார். 

அப்போ ஒரு குழந்தை வீல்வீல்ன்னு கத்துது. அந்த குழந்தையோட அம்மா, குழந்தையை அடக்க முடியாம, அந்த மண்டபத்துக்கு வெளிய குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போகப் பார்க்கறாங்க. அதனால கூட்டத்துல ஒரு சின்ன சலசலப்பு. 

நார்மலா என்ன நடக்கும்? கூட இருக்கறவங்க எல்லாம் உஷ் உஷ்ம்பாங்க. பேசறவரு பேசறதை நிறுத்திட்டு மூஞ்சியில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அப்படியே பார்த்துக்கிட்டு இருப்பாரு. முன்ன சொன்ன மாதிரி சனியனேன்னு வாயால சொல்லலைன்னாலும் சொன்னா மாதிரியே இருக்கும். 

இவரு என்ன பண்ணறாரு.”குழந்தைன்னா அழத்தான் செய்யும் கத்தத்தான் செய்யும். அழுதாத்தான் குழந்தை கத்துனாத்தான் குழந்தை. அதுக்கு எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன்?

நீங்க எல்லாம் தொலைவுலேர்ந்து வரீங்க. வர ஒரு மணி நேரம் போக ஒரு மணி நேரம். நான் பாட்டுக்கு ஒன்றரை மணி நேரம் கேப் விடாமப் பேசிக்கிட்டு இருக்கேன். மொத்தமா மூணு நாலு மணி நேரம் ஆயிடுது. சினிமாப் போனாலே ஒரு மணி நேரம் ஆச்சுதுன்னா இண்டர்வல் விடறான். நாம் அதை எல்லாம் செய்யறது இல்லை. பாஆஆவம் குழந்தைங்க. எவ்வளவு நேரம்தான் சும்மா இருக்கும். 

அதுக்காக குழந்தையை எடுத்துக்கிட்டு வெளிய எல்லாம் போகாதீங்க. அது ஒரு கட்டை குரலில் அழுதா நான் ஒன்றரைக் கட்டை குரலில் பேசிட்டுப் போறேன். இங்க சொல்லறது ராமனோட கதை. அது குழந்தை காதுல விழுந்தா நல்லது. குழந்தை இங்கவே இருக்கட்டும். குழந்தைகளோட வந்திருக்கிற தாய்மார்கள் பெரியோர்கள் இது பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம். அப்படியே உக்காந்து கதையைக் கேளுங்க.” 

பெரிய மன்சன் பெரிய மன்சன்றாங்களே. இந்தோ இவருதான்யா பெரிய மன்சன்! 

(நடந்த இந்த நிகழ்வைப்  பத்தி புலவர் கீரன் அவர்களே பேசி இருந்தா எப்படிப் பேசி இருப்பாருன்னு அவரோட ஸ்டைலில் எழுதிப் பார்த்தேன். அவர் பேசிக் கேட்டவர்கள் அவர் குரலிலேயே படிச்சுக்குங்க!)

4 comments:

said...

//அதுக்காக குழந்தையை எடுத்துக்கிட்டு வெளிய எல்லாம் போகாதீங்க. அது ஒரு கட்டை குரலில் அழுதா நான் ஒன்றரைக் கட்டை குரலில் பேசிட்டுப் போறேன். இங்க சொல்லறது ராமனோட கதை. அது குழந்தை காதுல விழுந்தா நல்லது. குழந்தை இங்கவே இருக்கட்டும். குழந்தைகளோட வந்திருக்கிற தாய்மார்கள் பெரியோர்கள் இது பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம். அப்படியே உக்காந்து கதையைக் கேளுங்க.”//

இதைக் குறிச்சுக் கேள்விப் பட்டிருக்கேன். கீரனோட சொற்பொழிவுன்னா ஓடி ஓடிப் போய்க் கேட்ட காலம் ஒண்ணு உண்டு. ம்ம்ம்ம்ம்ம் இப்போ கீரனும் இல்லை, நல்ல சொற்பொழிவுகளுக்கும் போக முடியறதில்லை. :(

said...

புலவர் கீரன் தமிழறிந்த பெரும்புலவர். பலர் வடித்த நூல்களின் தடித்த கருத்துகளைப் படித்ததோடு நில்லாமல் எடுத்துக் கொடுத்தவர் என்பதும் உண்மை.

வாரியாரும் இவரும் செய்த தொண்டுகள் இவர்களோடே போயின.

said...

பெரிய மனுஷனேதான்....

said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பதிவைப் பார்க்கhttp://blogintamil.blogspot.com/2013/05/blog-post_11.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-